16
நானும் அவளும் இணைந்து வாழும் வாழ்வு இனிமையாக இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன் ஆனால் இப்படியொரு வாழ்க்கையை நிச்சயமாய் நான் கற்பனை செய்யவே இல்லை.. இவ்வளவு அழகான ஒரு கனவு எங்காவது இருக்க முடியுமா? கனவே அப்படிஎன்றால் அது நனவானால் எப்படி இருக்கும்? அதுதான் இவ்வளவு போராட்டங்களையும் மனக்கஷ்டங்களையும் நாங்கள் சந்திக்கின்றோமோ என்னவோ?
தாளமுடியாமல் அவளது கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு அவளின் நெற்றியில் லேசாக ஓரங்களில் பசையிழந்து உரிய ஆரம்பித்திருந்த பிளாஸ்திரியை விரல்களால் அழுத்தம் கொடுத்து நெற்றியில் மீண்டும் ஒட்டி வைத்தான் சிந்தக.
நாளையுடன் ஆக்சிடன்ட் ஆகி மூன்று நாட்களாகிறது. டாக்டர் உன்னை ஐந்து நாட்களில் டிரெஸ்ஸிங் மாற்ற சொல்லியிருக்கிறாரில்லையா?
“இங்கே எப்படி மாற்றுவது? நம்மை பிடித்து விடுவார்கள்!” அவளின் குரல் ரகசியமாய் கேட்டது.
“அதை யோசிக்காமல் இருப்பேனா? அனுராதபுரத்தில் என் நண்பன் விராஜ் இருக்கிறான். அவன் டிரெஸ்ஸிங் செய்து விடுவான்….அங்கிருந்து வரும் போது பார்மர்ஸ் கேட்டில் காய்கறி வாங்கி வரலாம்!ஓகேவா?” கேட்டவனின் விரல்கள் இப்போது அவளின் நெற்றியில் புரண்ட குட்டித்தலைமுடியை பிளாஸ்டர் பக்கம் இருந்து விலக்கி நீளமான முடிக்கற்றைகளுக்குள் திணிக்க முயன்றன.
“நீ இதையே உன் ஹேர் ஸ்டைலாக்கிட்டியா?” முதல் தடவை அவள் முன்புறத்தலைமுடியை எலி அரித்தது போல வெட்டிக்கொண்டு வந்து நின்ற கோலம் என்றேனும் மறக்கக்கூடியதா? அன்றைய நாளின் நினைவில் இன்று சிரிப்பு முளைத்தது அவனுக்கு..
“ஹ்ம்ம்..நீங்கதான் அன்னிக்கு எனக்கு சூட் ஆகுதுன்னு சொன்னீங்களே..” அவள் கவனம் இவனிடம் இல்லை..தன்போக்கில் பதில் சொல்லிவிட்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை இன்னும் நெருக்கி தன் தாடையை அவள் தலையில் வலிக்காமல் அழுத்திக்கொண்டான் அவன்.
“யாரோ என்னமோ சொன்னாங்களே…என்னமோ இப்போதைக்கு என் மனசுல…”என்று சிரிப்புடன் மெல்ல இழுத்தாள்அவள்
“யார் என்ன சொன்னது?” குரலில் அவனது சிரிப்பு அப்படியே தெரிந்தது
“சொன்னவங்களுக்கு தான் தெரியும்!”
ரொம்ப நல்லதா போச்சு..உனக்கும் எனக்கும் அது தெரியாது தானே!
அடிங்கொய்யால!!!! அவள் சரேலென விலகிக்கொண்டு அவனுடைய தோள்களில் மொத்த ஆரம்பித்தாள்.
“ஏய் கை வலிக்க போகுது!!!” என்று அதட்டியபடி அவளது வலக்கையை பற்றி அவளை கட்டுப்படுத்த முனைய அவளது போன் ரிங்கிற்று…
அப்படியே பனிச்சிலை போல உறைந்து போனாள் அவள்.
யார் அழைத்திருப்பார்கள் என்று புரிந்ததில் இவன் முகமும் இறுகியது. மறுமுனை பேசியதையும் அதற்கு இவள் முகம் காட்டிய முகபாவனைகளையும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் தன் ஒரு கையை ஆறுதலாய் அவளின் தோளின் மீது வைத்தாள்.
படீரென உதறியவள் எழுந்து வேக வேகமாய் உள்ளே ஓட எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் உள்ளுக்குள் வலித்தது அவனுக்கு. கைகளை தலைக்குக்கீழே கொடுத்துக்கொண்டு வானத்தை வெறித்தான் அவன்.
இவளின் வேதனைக்கெல்லாம் நான் தானே காரணம்! அவளுக்கு நானும் அப்பாவைப்போல விட்டுக்கொடுக்கவே முடியாத உறவாக மாறிவிடவேண்டும் என்ற உந்துதலில் வேறு எந்த விஷயமும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவனருகில் மனம் விட்டு சிரிப்பதும் மறுநிமிஷம் குழம்பிப்போவதுமாக அவள் தவிப்பதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்க அவனுக்கு நான் செய்தது தவறோ என்ற கேள்வி மனதுக்குள் வந்து கொண்டே இருந்தது.
எழுந்து வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு தாளிட்டுக்கொண்டிருந்த அவளது அறைக்குள்ளிருந்து மென் விசும்பல் சத்தத்தை கேட்க முடிந்தது. அந்த அறைக்குள் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் ஆனால் அவனால் உள்ளே சென்று ஆறுதல் சொல்லமுடியாது. இப்படி அவள் வருத்தப்படும் போது தன்னுடைய அறைக்குள் சென்று தூங்கவும் முடியாமல் அறைக்கு வெளியே இருந்த சோபாவில் தன்னை சுருட்டிக்கொண்டு அறைக்குள் கேட்ட குரலுக்கு வலியோடு காது கொடுத்துக்கொண்டிருந்தான் அவன்
சற்று நேரத்தில் இன்னொரு ரிங் டோன் கேட்டது. இப்போது அவளின் குரல் கொஞ்சம் தைரியமாக சற்றே உயர்வாக கேட்டது. அனேகமாக அந்த ஹாஸ்டல் அம்மணியாகத்தான் இருக்கவேண்டும்! அவன் மட்டும் மைதிலியோடு சேர்வானாக இருந்தால் முதலில் அவளிடம் இருந்து வெட்டிவிட வேண்டியது அந்த சுமித்ராவைத்தான்! என்ன ஒரு திமிர்!!! அன்றைக்கு என்னமோ தன் பிள்ளைக்கு CID வேலை பார்ப்பவள் போல என்ன பேச்சு!!! அதுவும் சிந்தக பற்றியே என்ன திமிராய் கேட்டாள்! எல்லாம் இந்த மைதிலி கொடுக்கும் இடம்! பெற்றோருக்குத்தான் பயப்படுகிறாள் என்றால் இந்த பெண்ணிடம் ஏன் இப்படி அடங்கிப்போகிறாள்? நீ உன் வேலையை பார்த்துகொண்டு போ என்று திட்டி விடுவதற்கு??
அறையில் சத்தம் அடங்கியதும் அவனது விழிகளும் மெல்ல சொக்கி மூடிக்கொண்டன. கொஞ்சம் சுருண்டு சோபாவில் தனக்கு வசதி செய்து கொண்டான் அவன்
காலை தயக்கமாய் எழுந்து வந்தவளிடம் அவன் எதுவுமே கேட்கவுமில்லை . எதையும் புரிந்து கொண்டதாய் காண்பித்துக்கொள்ளவும் இல்லை.
நீங்கள் அலுவலகம் போக தேவையில்லையா என்று கேட்டவளுக்கு
“மொபைலிலும் ஆன்லைனிலும் சமாளிக்கிறேன். மீதியை ராஜீவ் பார்த்துக்கொள்வான் எனக்கும் இது ஒரு மூச்சு விடும் விடுமுறையாக இருக்கட்டுமே என்று சிரித்தவனுக்கு பதிலாக மைதிலியிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும் அவன் காலை உணவுக்கு சான்ட்விச் செய்ய போனதும் கூடவே உள்ளே வந்து சின்ன சின்ன உதவிகள் செய்து தந்தபடி கூடவே இருந்தது ஆறுதலாக இருந்தது.
அப்படியே தொடர்ந்த இரண்டு நாட்களில் மெல்ல மெல்ல அவளோடு பேசி, சிரிக்க வைத்து கரம் போர்ட், செஸ் விளையாடி, படம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியடைந்து விட்டான் என்று தான் சொல்லவேண்டும். போன் வரும் தருணங்கள் தவிர மீதி நேரங்கள் அவள் சந்தோஷமாகவே இருப்பதாகப்பட்டது. ஏற்கனவே மனதில் மறுகிக்கொண்டிருப்பவளுக்கு இன்னும் மனக்கஷ்டம் தரக்கூடாது என்ற எண்ணத்தில் மறந்தும் அவளை நெருங்காமல் தள்ளியே நின்று கொண்டிருந்தான் அவன். பலனாக அடுத்த நாள் மாலையில் வழக்கம் போல அவள் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டது பெரு மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.
நாளை காலை ஏழு மணிக்கு என்னை எழுப்பி விடு. நாளை ஐந்தாம் நாள் தானே ..விராஜிடம் போய் டிரெஸ்ஸிங் செய்து விட்டு அப்படியே farmers’ gate போய் காய்கறி வாங்கி வரலாம். சோமரத்ன பிரிட்ஜில் வைத்து விட்டுப்போன கறிகள் எல்லாம் காலி!!! என்று சொல்லிவிட்டு தலையணையை எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் போட்டு விட்டு சுருண்டு கொள்ள ஆரம்பித்தவனுக்கு எதிர் சோபாவில் கையைக்கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் மைதிலி
ஐ அத நிதாகண்ணத்த?(இன்றைக்கு நீ தூங்கப்போவதில்லையா?)
நீங்கள் உங்கள் அறைக்கு போகும் வரை..இல்லை!
உனக்கு கை ஒடிந்து போயிருக்கிறது. உன்னை அறையில் தனியாக விட்டு விட்டு எனக்கு அங்கே தூக்கம் வராது. அத்தோடு இது எனக்கு வசதியானது தான்!
ஐயோ எனக்கு ஒன்றும் இங்கே பயமில்லை. நீங்கள் போய்கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குங்கள்!
பச்.. எனக்கு தூக்கம் வராது என்று சொல்கிறேனல்லவா? போய் படு.
மாட்டேன்.. நீங்கள் அறைக்குள் போய் படுங்கள் அவளும் அவனுக்கு சரியாக பிடிவாதம் செய்தாள்
நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு உன்னிஷ்டம்! கொஞ்சம் கோபமாகவே சொன்னவன் டிவியை போட்டுக்கொண்டு புட்பால் மாட்சை தேட ஆரம்பித்தான்!
சிறிது நேரம் கோபமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் பிறகு வெகு வேகமாக எழுந்து அவனது அறைக்குள் போக “அங்கே என்ன?” என்று காற்றில் கேள்விகேட்டபடி அவசரமாய் அவளை பின் தொடர்ந்தாள் அவன்.
கட்டிலில் போட்டிருந்த பெட்ஷீட் தலையணை எல்லாவற்றையும் கோபமாய் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தவளை ஓடிப்போய் தடுத்தவன் இப்போ என்ன உனக்கு பிரச்னை என்று கேட்டான்
இந்த மெத்தையை ஹாலுக்குள் கொண்டு வந்து போடுங்கள்
எதுக்கு இந்த வேலை..
ப்ளீஸ்
அவள் கண்களின் இறைஞ்சல் அவனை என்னமோ செய்தது. உனக்கிப்போ இந்த மெத்தை ஹாலுக்கு வரவேண்டும் அவ்வளவு தானே? என்று மெல்லியகுரலில் கேட்டவன் அதை தூக்கிக்கொண்டு வந்து அவளின் அறைக்கதவுக்கு நேர்முன்னே போட்டான்.. அதற்குள் பெட்ஷீட், தலையணையை ஒற்றைக்கையில் பிடித்து வந்தவளிடம் ஓடிப்போய் பறித்துக்கொண்டவன் அதையும் விரித்து முடிக்க சின்ன புன்னகையோடு குட் நைட் சொன்னாள் அவள்
மனமெல்லாம் நிறைந்து கிடக்க போனவளின் கையை பற்றி உள்ளங்கையை தன்னுதட்டில் பதித்தவன் நீண்ட நாட்களின் பின் அன்றைக்கு நிம்மதியாய் அயர்ந்து தூங்கினான்!
காலையில் அவனை ஒரு கத்தி தன் மழுங்கிய முனையால் அடித்து எழுப்பியது.
திடுக்கிட்டெழுந்தவனின் முன் விடிந்தும் விடியாத பொழுதின் ஒளிப்பின்னணியில் மைதிலியின் முகம் தான் தெரிந்தது. வழக்கம் போல அவனை மயக்கும் சிரிப்புடன் குனிந்து நின்றுகொண்டிருந்தாள். ஆனால் இப்போது நேரம் என்ன? எழும்பி சந்தேகமாய் நேரம் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. நேரம் ஐந்தரை!
ஐந்தரைக்கெல்லாம் எழுந்து என்ன ஸ்கூலுக்கா போகப்போகிறாய்? என்று கேட்டபடி எழுந்து அமர்ந்து கொண்டான் அவன்.
நேற்று சீக்கிரமாகவே நித்திரை கொண்டதால் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிட்டேன்..காபி போட்டேன்..
“உனக்கேன் இந்த வேலை? ஒற்றைக்ககையை வைத்துக்கொண்டு காபி போடச்சொல்லி யார் கேட்டது? என்று கடிந்து கொண்டே எழுந்து விட்டவன் ரெண்டே நிமிஷம் என்றபடி பாத்ரூமுக்குள் புகுந்து முகம் கைகால் கழுவிவிட்டு வந்தான்.
என்னை எழுப்பியிருக்கலாம்ல? ஏன் இப்படி?
ப்ச்…ஒரு கை இருக்குதானே..இரண்டு கப் எடுத்துட்டு மாத்தி மாத்தி ரெண்டு கப்புலயும் விட்டு ஆற்றி விட்டேன்.
ஆஹா..அவள் விபரித்த விதத்தில் சந்தேகமாக காபியை எட்டிப்பார்த்தவன் பிறகு சிரித்தபடி இரண்டு மக்குகளை கழுவி எடுத்து வந்து இருவருக்கும் ஊற்றினான்.
பரவால்ல..நல்லாத்தான் இருக்கு! அவள் அதற்குள் ஒருவாய் குடித்து விட்டிருந்தாள்
அதை நான் சொல்லணும்!!! என்றபடி குடித்துப்பார்த்தவனுக்கு உண்மையிலேயே எந்த வேறுபாடும் தெரியவில்லை! கட்டை விரலை உயர்த்திக்காட்டிவிட்டு ஹாலுக்கு வந்தவன் காபியை ரசித்து அருந்த ஆரம்பித்தான் அவன்
இளங்காலையின் லேசான குளிர்.. அவளோடு அதை அனுபவிக்கவேண்டும் போலிருந்தது.
மைதிலி..ஒண்ணு பண்ணலாம்..நாம ஏழுமணி வரை வெயிட் பண்ணாமல் இப்போவே அனுதாரதபுரம் கிளம்பலாமா?
எனக்கு ஒகே!
நான் விராஜுக்கு கால் பண்ணி இருக்கானான்னு பார்க்கிறேன்.
ஹ்ம்ம்..
அடுத்த அரைமணியில் தயாராகி விட்டவர்கள், அனுராதபுரம் நோக்கி பயணப்பட ஆரம்பித்தனர்.
ரிலாக்ஸ்! ஏன் இவ்ளோ டென்க்ஷனா இருக்க? கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறது! யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க. ரெண்டாவது நாங்கள் உன்னை தெரிந்தவர்கள் இருக்கும் பக்கத்தினால் போகப்போவதில்லை.
அதில்லை….
பொய்
அவள் சிரிப்புடன் பதில் சொல்லாமல் சாய்ந்து அமர்ந்துகொள்ள தானும் சிரித்தபடி வண்டியோட்டினான் அவன்.
அனுராதபுரம் இலங்கையின் பண்டைக்கால தலைநகரம் அமைந்திருந்த இடம். ஸ்ரீ மஹா போதி எனப்படும் புத்தர் ஞானம் பெற்ற அரசமரத்தின் வலப்பக்க கிளையின் ஒரு துண்திலிருந்து உருவான மரம், தாதுகோபங்கள், பண்டைய கட்டடக்கலை அமைப்புக்கள், இரட்டை குளம், ருவன் வலிசாய, அரசரின் தோட்டம் என்று அழைக்கப்படும் றன்மசு உயன எல்லாமே ஆங்கிலேயர் ஆட்ச்சிக்கு முன்னே சிறந்து விளங்கிய உள்ளூர் மன்னர்களின் நிபுணத்துவத்தை பறை சற்றும் வண்ணம் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். உல்லாசப்பிரயாணிகளை அனுராதபுரப்பகுதிக்கு கவர்ந்திழுப்பது இந்த புராதன கட்டடக்கலை அமைப்பே ஆகும்.
பதினைந்து நிமிடம் கூட இருக்காது. விராஜின் வீட்டுடன் இணைந்த மருத்துவமனை அதற்குள் வந்துவிட்டிருந்தது. தன் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று நண்பனுக்கு அவளை இலகுவாக அறிமுகம் செய்து வைக்க விராஜ் நட்புடன் பேசியபடியே பிளாஸ்டரை கழற்றி தையலை மட்டும் மறைக்கும் அளவுக்கு குட்டியாய் பிளாஸ்டர் போட்டு விட்டான். என்னமோ தலையில் இருந்த ஸ்கார்ப் போனது போல அவள் முகம் இப்போதுதான் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது அவனுக்கு
பிறகு இருவருமாய் பார்மர்ஸ் கேட்டுக்கு போனார்கள். பிரமாண்டமான இரும்புக்கதவின் உள்ளே வரிசையாக இருந்த குடில்களில் முற்றிலும் பிரெஷாக, பளிச் வர்ணங்களில் ஆரோக்கியமாய் காய்கறிகள் தென்பட்டன. அவை நேரடியாக விவசாயிகளின் கையில் இருந்து இங்கே தான் வரும். விலையும் ஒப்பீட்டளவில் மார்க்கட்டை விட இங்கே குறைவாகவே இருக்கும்.
அடுக்கடுக்காய் அழகாய் அடுக்கப்பட்டிருந்த காய்கறிகளை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்
இந்த கத்தரிக்காய் எங்கள் பக்க சமையலில் மிகவும் முக்கியமானது! ஒரு கத்தரிக்காயை எடுத்து அதன் வழு வழுப்பை ரசித்தபடி சொன்னாள் மைதிலி
ஏன்?
கத்தரிக்காய் பொரித்தகுழம்பு சாப்பிட்டிருக்கிரீர்களா?
நான் அம்மா செய்யும் குழம்பு சாப்பிட்டிருக்கிறேன் அதற்கு மேல அதை பொரித்து செய்தார்களா? பொறிக்காமல் செய்தார்களா என்று எனக்கு எப்படி தெரியும்?
போங்கள்..உங்கள் வாழ்நாளில் பாதி பத்து வீதம் வேஸ்ட்!
சரிதான்!!! அவள் சொன்ன விதத்தில் சிரிப்புத்தான் வந்தது
அடுத்ததாக பீற்ரூட்டை காட்டிகேட்டாள், பீற்றூட் பொரியல் சாப்பிட்டிருக்கிறீர்களா?/
இல்லை..
பச்…என்று அவள் ஆரம்பிக்க இடையில் குறுக்கிட்டவன் “என்ன என் வாழ்நாளில் இருபது வீதத்தை வேஸ்டாக்கி விட்டேனா?” என்று கிண்டலாக கேட்டான்
அவனை ஏதோ சொல்லவந்தவள் மலை போல குவிந்து கிடந்த வாழைப்பூவை கண்டு “வாழைப்பூ!!!!” என்று கூவினாள்
முப்பது வீதம் வேஸ்டா?
கிண்டலா? நீங்கள் மட்டும் நேற்றைக்கு பலாமரத்தின் வேரை மட்டும் விட்டு விட்டு மீதி எல்லாவற்றையும் சமைத்து வைத்து ஒன்றொன்றாக எனக்கு பாடம் நடத்தும் போது நான் பேசாமல் கேட்டுக்கொண்டு தானே இருந்தேன்.
அதுக்குத்தான் இந்த தாக்குதலா? போகட்டும் விடு .. மேடம் நன்றாக சமைப்பீர்களோ? இல்லை சாப்பிடும் வேலை மட்டும் தானா? என்று கேட்டான்
சீதாவை பற்றி என்ன நினைச்சீங்க?பதிலுக்கு திருப்பி கேட்டாள் அவள்
சீதா?
எங்கம்மா தான்! பொதுவாக எங்களோட உணவு முறை தொலைஞ்சு போயிறக்கூடாது என்று இளைய தலைமுறைக்கு கண்டிப்பாக சமையல் கற்றுத்தருவார்கள்! நானெல்லாம் குழந்தையிலிருந்தே நன்றாக சமைப்பேனாக்கும்!! அவள் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்
குழந்தையிலிருந்தே சமைக்கும் மூஞ்சியை பார் என்று சிரிப்பாக வந்தாலும் இப்போது பேசி அவளிடம் அடி வாங்க அவன் தயாராக இல்லாததால் பதில் பேசாமல் வெறும் சிரிப்புடன் நிறுத்திக்கொண்டான் அவன்.
காய்கறிகளும் மீன், இறைச்சி வகையறாக்களும் வாங்கிக்கொண்டு பத்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் அவர்கள். வேகமாய் ஷார்ட்ஸ் டிஷர்ட்டுக்கு மாறிய சிந்தக வாங்கி வந்த காய்கறிகளை பரப்பி வைத்துக்கொண்டு அன்றைக்கு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
ஏற்கனவே சிக்கன் வெட்டி வாங்கி வந்திருந்தபடியால் மரக்கறி மட்டும் சமைத்தால் போதும்.
உனக்கு தெரிந்ததே ஏதோ ஒரு முறையில் சமைக்க மட்டும் தான். அதற்கு இவ்வளவு காய்கறி வாங்கி வந்து எதை சமைப்பது என்று வேறு யோசித்துக்கொண்டிருக்கிறாயா என்று மனம் கிண்டல் செய்தது அவனை.
ஆனாலும் உள்ளத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஒரு திருமண வீட்டுக்கே சமைக்க கூடிய அளவு உற்சாகத்துடன் காய்கறிகளுக்கு முன்னே நின்று கொண்டிருந்தான் அவன்
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே..
மைதிலியின் குரல் வெளியே கேட்டது. அவளை நினைத்ததுமே புன்னகை வந்துவிட வாசலை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
அவளும் உடை மாற்றிவிட்டு இன்றைக்கு அனுராத புரத்தில் வாங்கிவந்த கொஞ்சம் பெரிய கிளிப்பின் உதவியுடன் தலைமுடியை தூக்கி உச்சியில் கிளிப் போட்டுக்கொண்டு வந்திருந்தாள்.
என்ன மெனு வேணும்? என்று எல்லாம் தெரிந்தவன் போன்ற பாவனையில் மைதிலியிடம் கேட்டான் சிந்தக கூகிளாண்டவரின் உதவியோடு சமாளித்து செய்து கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில்!
இன்னிக்கு எனக்கு எங்க வீட்டு சாப்பாடு வேணும்! அவள் குழந்தையாய் கேட்க பட்டென்று உருகிப்போனவன் “லூசு..முன்னாடியே சொல்லியிருந்தா அந்தப்பக்கம் தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்துருக்கலாம்ல..” என்று ஆதங்கமாய் கேட்டான்
ஐயோ அதுக்கில்ல..இவ்ளோ நாளும் உங்க முறைல சாப்பிட்டோம். இனிமேல் எங்க முறைல தானே சாப்பிடணும். டிஸ்க்ரிமிநேஷேன் பண்ணக்கூடாது
இதில் எல்லாம் சமத்துவத்தை நிலைநாட்ட ஆரம்பிச்சுட்டாடா..என்று மனதுக்குள் செல்லமாய் திட்டியபடி அவளை முறைத்தான் அவன்
ஏன் முறைக்கிறீங்க? உங்களுக்கு சமைக்க தெரியாதா?
அடிச்சேன்னா தெரியும்! எனக்கு எங்க பக்கத்து சமையலே ஒரு குத்துமதிப்பாத்தான் தெரியும்.இவ்ளோ நாளும் சோமு செஞ்சு வச்சது இருந்துது// இன்னிக்கு தான் நானே சமைக்கப்போறேன். ஆளைப்பாரு!!!!
டார்லிங் ஒரு ஐடியா. நீ தான் சின்ன குழந்தைல இருந்து சமைப்பேல்ல…அப்படின்னா இன்னிக்கு நீயே சமைக்கலாமே
சட்டென்று ஜெர்க்கானவளை பார்க்க சிரிப்புத்தான் வந்தது.
எனக்குத்தான் கை உடைஞ்சு போயிருக்கே!
அவ்வ்வ் அதான் நான் இருக்கேனேம்மா
நீங்கள் தமிழ் சமையல் சமைக்க முடியாது..ரொம்ப கஷ்டம்
பச் எதெது எப்படி போடணுமா நீ சொல்லு நான் போடறேன்…உன் வலக்கை நல்லாத்தானே இருக்கு! நானும் ஹெல்ப் பண்ணுவேன்..
அது வந்து…என்று அவள் இழுக்க
வாடி வா…அவனுக்கு சிரிப்பு வந்தது/
விழிகளை ஒருதரம் மூடித்திறந்தவள் “செத்தேன்.. சீதா..நான் தான் கிட்சனுக்குள்ளே வரமாட்டேன்னா நீ என்ன பண்ணிருக்கணும்? என்னை அடிச்சு கத்துக்கொடுத்திருக்கணுமா இல்லையா??? இப்போ என்ன பண்ணப்போறேன்?”என்று வாய்விட்டு சொல்ல
என்ன பிரேயர் சொல்றியா? என்றான் அவன் சிரிக்காமல்!
“ஆமாம் சமைக்கப்போறோம்ல..”என்றவள் ஒரு அஞ்சே நிமிஷம் வந்துடறேன் என்றபடி ரூமுக்குள் ஓடியதை பார்த்துஇருந்தவன் அடுத்தக்கணமே வெடிச்சிரிப்பு பொங்கி வர மேடையில் கையை ஊன்றிக்கொண்டு சிரிப்பை அடக்கினான்.
இவள் அறைக்குள் என்ன செய்வாள் என்று அவனுக்கு தெரியாதா?
இன்டர்நெட்டில் ரெசிப்பி ஒன்றை தேடிப்பிடித்து மனப்பாடம் பண்ணிக்கொண்டு வருவாள்
நினைத்ததை போலவே அஞ்சாவது நிமிடத்தில் மொபைலோடு வந்தவள் அதில் ஒரு ரெசிப்பியை காண்பித்து
Even though I am a pro in cooking, I think we should follow these directions. What do you say?
என்று கேட்டாள்!
அனே…யக்கோ!!! ஓயாட்ட மதக்கரன்ன பரிவுனாத? என்று சிரித்தபடியே கேட்டான் அவன்.. (பேய்க்குட்டி! உனக்கு அதற்குள் மனப்பாடம் பண்ண முடியலையா?)
What? Memorize? Why should I memorize? I know it by heart. But I want to follow this recipe for a change!
எட்டி அவளுடைய போனை பறித்தவன்”இது வேண்டாம்..நீயே சமை..எனக்கு உன்னுடைய ஸ்டைல் தான் வேணும்! என்று மிரட்டினான்
“அவ்வ்…எனக்கு கை வலிக்குது..” அவள் கையை வேண்டுமென்றே திருப்பிப்பார்த்தாள்
இப்போகூட தெரியும் என்றே சாதிக்கிறாள் பாரேன்..இவளை!!!!
அவளைப்பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டு முகத்தை பிடித்து உயர்த்தி கண்களுக்குள் பார்த்தபடி “இப்போ சமைக்க போறியா இல்லையா?” என்று மிரட்டினான் அவன்.
எனக்கு கை வலிக்குது…
அவனுடைய உதடுகள் கண்ணிமைகளில் பதிந்தன.
கை வ…வலிக்குது..
உதடுகள் மூக்கிற்கு இறங்கின..கண்கள் கொஞ்சமும் அவள் கண்களை விட்டு விலகவில்லை..”பொறு..”(பொய்)
“சொல்றேன்ல…எனக்கு தெ..தெ..தெரியும்.. ஆனா”
உதடுகள் கொஞ்சம் அழுத்தமாகவே கன்னத்தில் பதிந்தன
“கியன்ன…” (சொல்) மெல்லிய குரலில் சொன்னவனின் உதடுகள் மெல்ல கன்னத்தில் இருந்து இறங்க ஆரம்பித்தன
“எனக்கு சமைக்க தெரியாது..டீயே சுமாரா தான் போடவரும். உங்ககிட்ட சும்மா தான் சொன்னேன்..” அவசர அவசரமாய் சொன்னவளை பார்த்து சிரிப்பு பொங்க அவளை விட்டு விலகி கம்பியை பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்தான் அவன்.
என்ன சிரிப்புன்னு கேக்கறேன்
எனக்கு உனக்கு சமைக்க வராதென்று நன்றாகவே தெரியும்!
அவள் பல்லை கடித்தாள்
பொடி கால இந்தலா உயன்ன முகுன தமாய் மேக்க!!! (சின்ன வயதில் இருந்தே சமைக்கும் முகம் தான் இது!)
அவன் அவளது முகத்தை திருப்பி பார்த்த்து விட்டு இன்னும் சிரிக்க அவள் சூடாகிவிட்டாள் என்று நன்றாகவே தெரிந்தது.
“எப்படி எப்படி..உங்க கல்ச்சரை அப்படியே பாதுகாத்து கொடுப்பீங்களோ..? அவன் இன்னும் தூபம் போட
“ரொம்பத்த்த்தான்!!!” பொறுக்கமுடியாமல் தமிழில் வெடித்தாள் அவள் .அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது
அவனை பார்த்து வாயை சிரித்து காண்பித்தாள் பிறகு “ஒரு முத்தம் கொடுக்கறதுக்கு இந்தப்பயம் பயப்படற நீயெல்லாம் பேசக்கூடாதுடா! பெரிய இவன் மாதிரி பேச்சு மட்டும் தான்..வேற எதுவுமே இல்ல..” என்று சொல்லி முடிக்கவில்லை . எதிரே நின்றவளை பிடித்திழுத்து இதழ்களில் இதழ் பதித்தான் அவன்.
கொஞ்ச நேரம் அதிர்ச்சி,கோபம், வெட்கம் கலந்த கலவை முகத்தை சிவப்பாக்க மூச்சு வாங்கியபடி அவனை தள்ளிவிட முயன்றாள்
ஏன்..நீதானேம்மா கேட்டாய்..ஒன்று மட்டும் போதுமா? என்று அட்சரசுத்தமாய் தமிழில் கேட்டுவிட்டு அவளிடம் கண்சிமிட்டினான் அவன்.
பலத்துடன் அவனை உதறியவள் “ஏன் பொய் சொன்னீங்க..” என்று கோபமாய் கேள்வி கேட்டாள்.
நான் எங்கே சொன்னேன்..நீயாக தான் எனக்கு தமிழ் தெரியாது என்று ஊகித்துக்கொண்டிருந்தாய். கொஞ்சம் யோசித்திருந்தால் உனக்கே புரிந்திருக்கும். மூன்று வருடங்களில் தமிழ் பெண்ணை காதலிப்பவன் தமிழ் கற்றுக்கொண்டிருக்கமாட்டானா?
அதை விடுங்க..அன்னிக்கு கூட நீங்க என்கிட்டே நான் பேசின எதுக்கோ விளக்கம் கேட்டீங்களே..அதெல்லாம் நடிப்பில்லையா?
அப்படிப்பேசும்போது தான் கண்ணம்மா உண்மை வருகிறது உன்னிடமிருந்து.!.எனக்கு தமிழ் தெரியுமென்று சொல்லியிருந்தால் அதையெல்லாம் என்னால் கேட்டிருக்கவே முடியாதே..அவன் மீண்டும் கண்சிமிட்டினான்
வெட்கச்சிவப்பும் கோபச்சிவப்பும் சரிசமமாய் கலந்திருக்க கிட்சன் வாசல் படியில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளை தொட்டு திருப்பினான் சிந்தக
“அனே மட்ட படகினி..எனக்கு பசிக்கிறது. எதையாவது சமைத்து சாப்பிட்டு விட்டு அப்புறமாக நீ வெட்கப்படு!”
நான் ஒண்ணும்… என்று வேகமாக ஆரம்பித்தவளை கையர்த்தியவன் பசிக்கிறது ரொம்பவே என்று வயிற்றை தடவியபடி சொன்னான் அவன்
சரி;; பிரைட் ரைஸ் செய்து சாப்பிடுவோமா. வேலை குறைவு..நான் ரெசிப்பி எடுத்து தந்து ஹெல்ப்பும் பண்ணுவேன்.. அவள் உடனே பழைய நிலைமைக்கு திரும்பி மொபைலை எடுத்துக்கொண்டாள்
சரி சீக்கிரம் தேடிக்கொடு. சொல்லிவிட்டு அரிசியை ரைஸ் குக்கரில் போடுவதற்காக அளந்து எடுக்க ஆரம்பித்தான்.
இது நல்லா வரும்னு நினைக்கிறேன் ஈஸி வேற.. சொல்லிக்கொண்டு ஒரு ரெசிபியை எடுத்து வந்தாள் அவள்.
பாரேன் இவளை! எனக்கு தமிழ் தெரியும் என்று சொன்னதும் ஆங்கிலத்தை நிறுத்தி விட்டாளே! அப்பாவி போல விழிகளை உருட்டினாலும் கால் முதல் தலைவரை காரியக்காரி தான்! மனது அதற்கும் அவளை சிலாகிக்கவே செய்தது.
ஒற்றைக்கையால் காரட் வெட்ட முடியாது. வேண்டுமானால் அந்த காய்கறிகளை பிரித்து அடுக்கு என்றவன் காய்கறி வெட்டும் போர்டையும் கழுவிய காரட்டையும் எடுத்துக்கொண்டு மேஜைப்பக்கம் போனான்.
சிந்தக உங்களுக்கு தான் தமிழ் நல்லாவே வருதே..அதுக்குப்பிறகும் ஏன் என்னோட நீங்க சிங்களத்துலையே கதைக்கிறீங்க?
ஹலோ..நீ எப்போதோ சிங்களம் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாய் இன்றை வரைக்கும் ஆங்கிலம் தானே என்னோடு பேசிக்கொண்டிருந்தாய்..
ஆனால் நீங்கள் அதற்குப்பதில் சிங்களத்தில் தானே சொல்வீர்கள்?
பச்..இதெல்லாம் ஒரு பிரச்சனையா? உன் மொழி எனக்கும் என் மொழி உனக்கும் புரியும் அப்படி இருக்கும் போது எந்த மொழியில் பேசினால் என்ன?
எனக்காக நீங்கள் தமிழ் பேச மாட்டீர்களா?
இதெல்லாம் ரொம்ப மோசமான தந்திரம் மைதிலி! எனக்காக நீ சிங்களம் பேசு என்று நானும் கேட்கலாம்! ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. இதோ பார், என் வீட்டில் என் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த எனக்கு என் மொழி தான் வசதி..என் வீட்டிலேயே என்னால் அன்னியமாக உணர முடியாது. இந்த விஷயத்தில் நான் மாறவே மாட்டேன்’
அப்போ நீ நீயாக இருக்க நான் எதுவும் செய்வேன் என்றெல்லாம் முன்னர் அடித்து விட்டது பொய்தானே?
நீ நீயாகத்தானே இருக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றேன் ஆனால் அதற்காக என்னை விட்டுக்கொடுப்பேன் என்று சொல்லவில்லையே..நான் அப்படி நினைத்தது போல நீ ஏன் என் அடையாளத்தோடு நான் இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை?
அவள் உதட்டை கடித்தாள்.. சாரி.. நான் அப்படி நினைச்சுப்பார்க்கல..
விடுமா.. இப்போது நானும் நீயும் பேசிக்கொண்டிருப்பதற்கு என்ன குறை? அவரவர் வாயில் வருவதை பேசுவோம்.
அவள் மனதில் இன்னும் எதிரி முகாமை சேர்ந்தவனை மனதில் நினைத்து விட்ட குற்றவுணர்வு இருக்கிறது அதனால் தான் சகல விஷயத்திலும் தன் பக்கத்தை விட்டு விடக்கூடாது என்று அதே தியானமாக இருக்கிறாள் என்பதை அவன் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தான். எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்தே ஆகவேண்டும் என்பது அவனுக்குள் வெறி போல கனன்று கொண்டே இருக்கிறது. அவன் அதை எப்பாடு பட்டேனும் நடாத்துவான். அப்படியிருக்கும் போது ஆரம்பத்திலேயே அவரவர் எல்லைகளை வகுத்து விடுவது தான் நல்லது!
நாம் பேசுவது ஒகே..நம் வீட்டுக்கு வருபவர்களோடு இப்படி நாங்கள் பேசுவது நன்றாகவா இருக்கும்?
அவளையே ஒருகணம் ஊன்றிப்பார்த்தான் அவன்.
அதற்கெல்லாம் அவசியமே இல்லையே மைதிலி. நீ தான் நாங்கள் இருவரும் சேரவே முடியாது என்று சொல்லிவிட்டாயே.. இன்னும் முழுதாக ஐந்து நாட்கள் கூட இல்லை..அதன் பிறகு நாம் பார்ப்போமா என்று கூட தெரியாது. இதில் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கு வருபவர்களை பற்றி நீ கற்பனை செய்கிறாயா? நல்ல வேடிக்கை..
விளையாட்டு போலவே சொன்னவன் அவளது முகத்தை ஓரக்கண்ணால் கவனித்தான்.
உண்மை உறைத்திருக்கிறது. விழிகள் நிலைகுத்த அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவள்
எங்கள் வீட்டுக்கு வருபவர்களை பொறுத்து நாம் பேச்சு மொழியை மாற்றிக்கொள்ளலாம் மைதிலி..இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை!
மெல்லிய குரலில் அவளின் முந்தைய கேள்விக்கு பதில் சொன்னவன். அந்த செய்முறையில் சொன்னது போல முட்டையை எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.