ஒவ்வொரு தடவையும் நான் அவனை விட்டு விலகிச்செல்லும் போதெல்லாம் விதிவசத்தால் எப்படியோ அவனருகிலேயே மீண்டும் மீண்டும் போய் சேர்ந்துகொண்டிருந்தேன். எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்குமாமே.. அப்படியாயின் எங்கள் இருவரின் எண்ணங்களும் அறிவின் திட்டங்களை விட மிக மிகப்பலமானவையாய் இருந்திருக்க வேண்டும்!நாங்கள் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டே இருந்தோம்.
மசமசவென்ற இருளுக்குள் ஆங்காங்கே மரங்கள் அடர்ந்து கிடக்க நடுவிலேயே காட்டாறு பொங்கி வழிந்து கொண்டிருந்தது. சின்னச்சின்ன விலங்குகள் எல்லாம் பதறி ஓடி அருகே இருந்த மரங்களில் தொற்றிக்கொள்ள சாம்பல் வர்ணமான சின்ன கரடியொன்று தண்ணீரில் அடிபட்டபடி கையில் அகப்பட்ட மரக்கிளைகளை தாவிப்பிடிக்க முயன்று கொண்டு அலையோடு வந்துகொண்டிருந்தது.
பக்கத்திலேயே மரங்களில் தொற்றியபடி ஒரு பெரிய கரடி குட்டியை எப்படியாவது காப்பாற்றி விடும் வேகத்தில் பதைபதைத்து ஓடிவருகிறது. பாவம் குட்டியின் அலறலை விட பெரியகரடியின் பதைபதைப்புத்தான் மனதை பிசைய வைத்தது. அவர்களுக்கு எதிர்த்திசையில் இன்னொரு கரடியொன்றும் அந்த குட்டியையே கண்களில் தேக்கிக்கொண்டு ஆற்றுக்கு எதிராக பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அதனிடம் ஒரு சொட்டுக்கண்ணீரில்லை வெளிப்படையான பதறல் இல்லை…வேக வேகமாய் வந்து கொண்டிருந்த அந்த கரடி ஒரு சந்தர்ப்பத்தில் நீரின் மேலேயே தாவி அந்த குட்டியை பற்றிக்கொண்டு எதிர்ப்புற மரக்கிளையில் தாவி போராடி ஒருவழியாய் அதை கரை சேர்த்து விடுகிறது. மற்றவன் கைகளில் தன் குட்டி சேர்ந்ததைக்கண்டதும் பெரிய கரடி ஓலமிட ஆரம்பிக்க சிறிய கரடி அதை நோக்கி ஓரடி எடுத்து வைக்கிறது..தன்னை காப்பாற்றிய கரடியை ஒருமுறை திரும்பி பார்க்கிறது..அதன் கண்களும் எதையோ அதனிடம் யாசித்துக்கொண்டிருக்க, அதற்கு குறையாமல் பெரிய கரடியும் ஓலமிட..ஒருகணம் தயங்கிய அந்த சின்னக்கரடி இருவரையும் தவிர்த்து ஆற்றுக்குள்ளேயே பாய்ந்து விடுகிறது.. பிரமாண்டமாய் வந்த அலையொன்று அதை அடித்துச்செல்ல மெல்ல மெல்ல சுயநினைவை இழந்து போகிறது அந்த சின்ன கரடி.
அதன் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் பாரமிழந்து நுரையாய் தழும்பி..அலையோடு அடிபட்டு மெல்ல மெல்ல மெல்ல…
ஏதோ ஒரு அந்தகாரத்துக்குள் நழுவிக்கொண்டிருந்தவளுக்குள் திடீரென்று விழிப்பு ஏற்பட இமைகளை மலர்த்தினாள் மைதிலி. இமைகளும் தலையும் பாரமாய் கனக்க மெல்ல மெல்ல சுய உணர்வு அவளுக்கு ஒரு திடுக்கிடலுடன் தன்னை வெளிப்படுத்தியது. என்ன இருட்டு? நான் எங்கே இருக்கிறேன்….வண்டியில் போய்க்கொண்டிருந்தது தான் தெரியும்? பிறகு என்ன நடந்தது? இது என்ன இடம்? சுனாமியாய் சுழற்றியடித்த கேள்விகளுடன் எழுந்து அமர்ந்து சுற்றாடலை பயத்துடன் கிரகிக்க முயன்றாள் அவள்.
இரவாகி விட்டிருக்கிறது.
இதுவும் ஹாஸ்டல் இல்லை..
என்னவோ தவறு நடந்து விட்டது! இதயம் காது வரை வந்து துடிக்க ஆரம்பிக்க சுற்றாடலை கிரகிக்க முயன்றபடி கட்டிலை விட்டு இறங்க முயன்றாள் அவள்.
“எழுந்து விட்டாயா? மெல்ல மெல்ல தலை சுற்றி விடக்கூடும்” என்றபடி அறையின் வாசற்புறம் இருந்த சோபாவில் இருந்து சிந்தகவின் குரல் கேட்க இவனும் இங்கே தான் இருக்கிறானா? எனக்கு என்ன ஆயிற்று? என்று குழப்பத்தோடு அவனைப்பார்த்தவள் அவன் எழுந்து நிதானமாய் அவளை நெருங்க வியர்த்துத்தான் போனாள்!
பின்னே? வெற்றுமார்புடன் விளக்கு போடப்படாத இருட்டான அறையின் மூலையில் இருந்து இப்படி இவன் எழுந்து வந்தால் அவள் எதை நினைப்பது!!!
எது நடந்ததோ எல்லாம் என் கையை மீறிப்போய் விட்டது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.
“என் பிரண்ட்ஸ் எங்கே? இது என்ன இடம்? ஏன் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்? எனக்கு என்ன ஆனது?” பதட்டத்தை காண்பித்துக்கொள்ளாமல் குரலில் கடுமையை வரவழைத்தபடி கேள்வி கேட்க முயற்சித்தாள் மைதிலி. மீறி குரல் நடுங்கியது.
அவன் வரும் வழியிலே லைட்டின் சுவிட்சை தட்டிவிட பளீர் என்று மின்வெளிச்சம் அறை முழுவதும் பரவியது.
“உன் தூக்கம் கலைந்து விடும் என்று தான் லைட்டை அணைத்துவிட்டு காத்திருந்தேன்” என்று அவள் கேட்காமலே விளக்கம் சொன்னபடி சுவிச் போர்டுக்கு பக்கத்தில் இருந்த ஹாங்கரில் இருந்து ஆர்ம்கட் டீஷர்ட் ஒன்றை இழுத்து அவன் மாட்டிக்கொண்டதும் தான் இழுத்துப்பிடித்து வைத்த மூச்சை அவளால் வெளிவிடமுடிந்தது!
“ஏன் என்னை சுமி கூட அனுப்பல? “
“வந்தால்தானே அனுப்புவதற்கு?” அவனுடைய குரலில் இருந்த வரவழைக்கப்பட்ட நிதானமே அவளை பயமுறுத்தியது.
“என்ன சொல்றீங்க? அவ ஏன் வராம விட்டா? நீங்க பொய் சொல்றீங்க!!!” மூச்சு வாங்கியது அவளுக்கு.
“ரிலாக்ஸ் மைதிலி. இதை நீ எப்படி எடுத்துப்பியோன்னு தெரியல. சுமித்ராவை நான் அழைக்கவும் இல்லை. அவள் வரவும் இல்லை. அவளை பொறுத்தவரை நீ என் அம்மா வீட்டில் இருக்கிறாய்!”
“என்ன விளையாடறீங்களா????????????? அவகிட்ட நீங்க அப்படி சொன்னீங்களா? நான் எங்கேன்னு தெரியாம அவ அதை நம்பவும் மாட்டா, உடனே போய் எங்கப்பாட்ட சொல்லிருவா! “
“அதுக்காகத்தான் நீயே சொல்றபோல உன் போன்ல இருந்து மெசேஜ் போட்டு அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவ உனக்காக இந்த விஷயத்தை உங்க வீட்டுக்கு தெரியாம பார்த்துக்கிறேன்னும் ப்ராமிஸ் பண்ணிருக்கா!”
தலை சுற்றியது மைதிலிக்கு! அப்போ என் போன் தொலைஞ்சது பொய்யா?
“ஆமாம். சாரி. உன்னை நான் கடத்திக்கொண்டு தான் வந்தேன். எனக்கு வேறு வழி தெரியல!” அவன் கண்கள் எங்கோ பார்க்க ஆரம்பிக்க மைதிலிக்கு தனக்கு ப்ளட் ப்ரெஷர் எகிறப்போகிறதோ என்று பயம் வந்துவிட்டது. இவர்களை அவசரக்காரர்கள் என்று சொல்றது எவ்வளவு சரியா இருக்கு!!! எதையுமே யோசிக்காமல் செய்துவிட்டு எவ்வளவு ஈசியா சொல்றான் கடத்திட்டு வந்துட்டேன்னு!!!! கடவுளே… அவளது வாழ்க்கை இனி என்னாகப்போகிறது? கண்கள் கலங்கி தளும்ப உலகம் தனக்கு முன்னே சுழல்வது போலிருந்தது அவளுக்கு.
எட்டி அவனுடைய டிஷர்ட்டை பற்றி உலுக்க ஆரம்பித்து விட்டாள்.
“ஏண்டா இப்படி செஞ்சே…அப்பாம்மா,,,மத்தவங்க முகத்துல எல்லாம் இனிமே நான் எப்படி முழிப்பேன்?மஞ்சு ஆன்ட்டி என்ன நினைப்பாங்க? என் பிரண்ட்ஸ் என்ன நினைப்பாங்க? ஒரு நாள் முழுக்க ஒரு பையனோடு போய் தங்கியவள் என்று… ஐயோ அப்பாவுக்கு ஏதும் ஆகிவிட்டால்?” என்று கண்ணீர் வழிய அவள் பதற அவனோ உணர்ச்சிகளே இல்லாத முகத்துடன் உதட்டை கடித்துக்கொண்டு கல் போல நின்று கொண்டிருந்தான்..
ஐயோ என்று வந்தது அவளுக்கு..
இவனுக்குத்தான் தமிழ் புரியாதே.. அவனிடம் போய்….நெற்றியில் அறைந்து கொண்டவள் ஆவேசமாய் கண்களை துடைத்துக்கொண்டாள்.
“நான் போகிறேன். உன்னை நல்லவன் என்று நம்பித்தான் காதலித்தேன். அந்த நம்பிக்கை மீது ஆணை, எனக்கு ஒரு டாக்சி பிடித்து கொடு.நான் இப்போதே ஹாஸ்டலுக்கு போகிறேன். இல்லையென்றால் கூட பரவாயில்லை. நானே பார்த்துக்கொல்கிறேன்.. என்னுடைய பாக்கும் போனும் எங்கே? சீக்கிரம் கொடுங்க..”
பேசியபடியே அவனை தள்ளி விட்டு அவள் அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்குள் நுழைந்தாள். பெரிய மாடி வீடுதான் ஆனால் அதன் எந்தவொரு அமைப்பும் கண்ணில் படாமல் அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இருக்கிறார்கள் என்ற உண்மை மட்டும் தான் மைதிலியின் முகத்தில் அறைந்தது.
மாலை ஏழு மணி என்று கடிகாரம் காண்பித்தது. பரவாயில்லை. இப்போது கிளம்பினால் காலைக்குள் ஹாஸ்டல் போய்விடலாம். ஒரு வேகத்தில் இங்கே கொண்டு வந்து விட்டானே தவிர என்னை பிடித்து அடைத்து வைக்கும் அளவுக்கெல்லாம் இவன் கொடூரன் கிடையாது! அவளே தனக்கு சமாதானமும் சொல்லிக்கொண்டாள்
எங்கே பின்னாலே அவன் வரவில்லையே என்று சில நிமிடங்கள் அவள் காத்திருக்க உண்மையிலேயே கையில் அவளுடைய பாக்கையும் போனையும் எடுத்துக்கொண்டு அவன் நடந்து வந்துகொண்டிருந்தான். வழக்கமான திமிரும் நிமிர்வும் அவனிடம் சுத்தமாய் தொலைந்து போயிருந்தது.
வேண்டாம் அவனை பார்க்கவே பார்க்காதே..இவன் ஆள்மயக்கி! உன் மனதை கலைத்துவிடுவான். சீக்கிரமாய் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்! அவள் மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டிருந்த போது அவன் அவை ரெண்டையும் மேஜையில் வைத்தான்
“நீ தாராளமாக போகலாம் ஆனால் எனக்கு உன்னிடம் பேசவேண்டும். அதன் பின்னர் நானே உனக்கு டாக்சி அரேஞ் செய்து தருகிறேன். “
அவனின் நிதானம் இவனுக்கு என் உணர்வுகள் புரியவே இல்லையே என்ற இயலாமையை தான் அவளுக்குள் தூண்டியது. அத்தோடு அவள் இருக்கும் நிலைமையின் பாரதூரமும் முகத்தில் அறைந்தது.
பேசவேண்டுமாமே.. அழுகை வெடித்துக்கிளம்பியது அவளிடம்.
“இன்னும் என்னடா பேசவேண்டும் உனக்கு?” என்று ஆவேசமாய் தமிழில் ஆரம்பித்தவள் பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தாள். “ சத்தியமாய் சொல்கிறேன். உன்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். எங்களுக்கு உயிர் பிரச்சனை. எங்கள் பேச்சில் இருந்து உடை, நடத்தை வரை சகலத்திலும் எவ்வளவு கவனமாக இருப்போம் தெரியுமா? பெண்மை எவ்வளவு பவித்ரமானது தெரியுமா? இப்போது ஒரு முழுநாளாய் என்னை காணவில்லை என்று அவர்கள்……….முடிக்க முடியாமல் விம்மியவள் பிறகு விம்மல்களுக்கிடையே தொடர்ந்தாள்.
“இதை செய்யமுன்னர் என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருந்தால் அங்கேயே பேசி முடித்திருக்கலாமே.. இப்போது சாகும் வரை என்னோடு இந்த அவப்பெயர் ஒட்டிக்கொண்டிருக்குமே…நான் என்ன செய்வேன்..என் அம்மா அப்பா முகத்தில் எல்லாம் எப்படி விழிக்கப்போகிறேன். எல்லோருக்கும் தெரியும் சிந்தக நான் உங்களை காதலித்த விஷயம்! இப்போது நானே விருப்பப்பட்டு உங்களுடன் போனதாக தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?” அதற்கு மேல் உணர்வுகளை கொட்ட அவளுக்கு ஆங்கிலம் கைகொடுக்க வில்லை..
“ஐயோ இப்படியாகிவிட்டதே…” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறியவள்
“அவன் உன்னை உபயோகித்து விட்டு தூக்கிப்போட்டுவிடுவான் என்று எல்லாரும் சொன்னார்களே.. என் மானத்தை பற்றி யோசிக்காமல் இப்படி செய்து விட்டீர்களே… உங்களை பார்க்க வந்தது அவ்வளவு பெரிய தவறா?” அவளுக்கு அவன் இப்படிச்செய்து விட்டானே என்ற ஆதங்கம் தான் அதிகமாய் இருந்தது.
மௌனமாய்பேசவிட்டு பார்த்துக்கொண்டே இருந்தவன் அவளது வலக்கையை பற்றி இழுத்து சோபாவில் அழுத்தி அமர்த்தி அவளது கழுத்தில் பற்றி சோபாவோடு ஒட்டவைத்தான். “ யார் யாரை தூக்கிப்போட்டது? என் கண்ணை பார்த்து சொல்லுடி? யார் யாரை தூக்கிப்போட்டது? உனக்கு இங்கே இருக்கும் போது எங்கள் வீடும் நானும் தேவைப்பட்டோம்.. நீ உபயோகித்துக்கொண்டாய். பிறகு மொத்தமாய் தூக்கிப்போட்டு விட்டு ஓடிப்போனாய்! நீயெல்லாம் வந்து பேசுகிறாய் பார் அதுதான் வேடிக்கை!!” அவனும் கோபத்தில் ஆங்கிலத்தை துறந்து விட்டிருந்தான். சும்மாவே கரடுமுரடாக தோன்றும் அவன் மொழி இப்போது கோபத்தில் அவளை இன்னும் மிரட்டியது!
“அடிபட்டுக்கிடப்பவள் என்று பார்க்கிறேன். வருவாய் வருவாய் என்று காத்துக்கிடந்த நான் எங்கே? என்னை ஒரு துரும்பாக கூட மதிக்காமல் ஒரு புத்தகத்தை பிச்சை போட்டுப்போன நீ எங்கே? நீ தானடி என்னை தூக்கிப்போட்டாய்! காதல் காதல் என்று இப்போது வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறாயே.. நேற்று உனக்கு அடிபட்டிருக்காவிட்டால் அப்படியே போயிருப்பவள் தானே..உன்னால் எப்படி இப்படி பேச முடிகிறது. நீ, உன் பெற்றோர் உன்னை சேர்ந்தவர்கள் , அங்கே உன் ஹாஸ்டலில் இருக்கும் அம்மணி! எல்லாருமே சுயநலத்தின் மொத்த வடிவங்கள்! எந்த ஜென்மத்தில் பாவம் செய்தேனோ உன்னைப்போய் காதலித்து தொலைத்து இப்போது வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்!”
அவனுடைய குரலும் குற்றச்சாட்டிலும் அவள் மௌனித்துப்போனாள். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது உண்மைதானே..அவளால் அவன் வாழ்க்கையை இழந்து நிற்கிறானாமா? அவளுடைய கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
கழுத்தில் இருந்த கையை எடுத்துவிட்டு அவளை வெறுப்பாய் ஒருபார்வை பார்த்தவன் “ஆமாம்டி..நீங்கள் கலாச்சாரத்திலும் கண்ணியத்திலும் சிறந்தவர்கள். நாங்கள் காட்டுமிராண்டிகளாகவே இருந்து விட்டு போகிறோம்..” அவனும் தன்போக்கில் பேசிக்கொண்டே இருந்தான்.
“சாரி நான் வேணும்னு சொல்லல..” அவன் வேதனைப்படுவதை பார்க்க தாங்கவில்லை அவளுக்கு.
“ஹ்ம்ம்… எனக்கு வயசு முப்பதாயிடுச்சு. என் செட்ல எல்லாருமே கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு செட்டில் ஆகறாங்க. எனக்கு எப்படியிருக்கும் தெரியுமா? எனக்கு சின்ன வயசுல நிறைய ஆசைடி! இனிய மனைவி, சுட்டி குழந்தைகள், நமக்கே நமக்குன்னு ஒரு வீடு, மனைவி கையால சாப்டணும், குடும்பத்தோட எல்லா இடமும் போய் பார்க்கணும், குழந்தைகளை நிறைய சாதிக்க வைக்கணும்… இப்படி எத்தனை எத்தனை எத்தனை ஆசைகள்.. கடைசில…. கடைசில..எல்லார்க்கும் கல்யாணமாயிடுச்சு.. நான் மட்டும் தனி மரமா நின்னுட்டிருக்கேன். சாகும் வரை என் வாழ்க்கை இப்படித்தான்னும் எனக்கு தெரியும்! எனக்கு ஏன்டி இந்த தண்டனை?”
சிந்தக…
“ஏன்டி நாம சேர முடியாதுன்னு உனக்கு கடைசில தான் தெரிஞ்சதா? முன்னாடி அந்த அறிவெல்லாம் எங்கே போயிருந்தது? நான் எங்கேடி உன்னை தொரத்தி தொரத்தி காதலிச்சேன்? ஆரம்பத்துல நீ பயப்படறன்னு புரிஞ்சுகிட்டு நான் எவ்வளவு விலகிப்போனேன்…நீயும் அப்படியே போயிருக்கலாம் தானே..ஏன் கிட்ட வந்து பேசின? என் வீட்டுக்கு வந்த? நீ நினைச்சிருந்தா அதை தவிர்த்திருக்கலாமே.. காலையும் மாலையும் நான் வர்ற வழில தவறாம நின்னுட்டு இருந்தியே… நான் பார்க்கலைன்னா கூட உன் கண் என்னை விட்டு விலகாது.. அன்னிக்கு உன் வீட்ல நான் கட்டிப்பிடிச்சப்போ உன் காதல் எனக்கு தெரிஞ்சதே.. ஆனா அதுக்குப்பிறகும் உன் கண்ணுல கண்ணீரை பார்த்துட்டு நான் உன் முகத்துலேயே முழிக்கல..நீயாத்தான் எங்கம்மாகிட்ட சொல்லி என்னை தேடி வந்தாய்….எல்லாத்துக்கும் மேல என் கைக்குள்ள கொஞ்சம் கூட விலகாம நீயும் தானே நின்னுட்டிருந்த? கடைசி நாள் கூட!!!! இப்படியெல்லாம் பழகிட்டு, நடந்துக்கிட்டு என் மனசுல ஆசையை வளர்த்துட்டு தூக்கி போட்டுட்டு போறது தான் உன் கலாசாரமா? “
அதற்கு மேல் மைதிலியால் அதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.. ”வேணாம் சிந்தக.. இதுக்குமேல பேசாதீங்க..என்னால தாங்க முடியல..”
அவளை கொஞ்சம் இரக்கமாய் நோக்கியவள் நெற்றி ப்ளாஸ்டருக்கு மேலே பறந்த முடிகளை விலக்கி விட்டான்.
“இதுக்கும் கலாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லம்மா..நீ அந்த சொல்லை யூஸ் பண்ணதால தான் நானும் கோபத்துல சொல்லிட்டேன். என்னை பொறுத்தவரை நம்மை மீறி இன்னொருத்தரோட வாழ்க்கைல பாதிப்பை ஏற்படுத்தறோம்னா அது ஒரு பொறுப்பு, உடன்படிக்கை போல..கடைசி வரை காப்பாத்தணும் இல்லன்னா ..பாராதூரமா ஆகமுன்னே விலகி இருக்கணும். அது சாதாரண மனுஷப்பண்பு. நான் அதுல இருந்து இம்மி கூட விலகினதில்ல.. “
“ஆனா நீ என்ன பண்ணின? என் மனசை கலைச்சு விட்டுட்டு உன் பாட்டுல நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு நீயே முடிவெடுத்து விலகிப்போய்ட்ட? உனக்கு காரணம் இருக்கிறது..நீ பிரிந்து தனியே வேதனைப்படுகிறாய்! நான் என்ன பாவம் செய்தேன்? நான் எதற்காக வாழ்நாள் முழுக்க இப்படி தனிமையில் தவிக்க வேண்டும்? இன்னொரு பெண்ணை தேடிக்கொள் என்று மட்டும் சொல்லாதே.. உன் கடமையை இன்னொருத்தி சுமக்கவேண்டியதில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சந்தோஷங்கள் எல்லாம் உன்னை காதலித்ததனால் எனக்கு இல்லாமல் போய் விட்டன. என்னை இப்படி தனிமரமாக நிற்க வைக்க தான் என் அப்பா அம்மா பெற்று வளர்த்தனரா? அவர்கள் மனம் வேதனைப்படாதா? அவர்களை விடு.. நம்மிருவரை மட்டும் பார்க்கலாம். உன்னால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நியாயம் வேண்டும்!”
நான் இனிமேல் தனிமரம் என்ற அவன் வார்த்தையே அவளை இளக்குவதை பலவீனமாக உணர்ந்தாள் மைதிலி. நம்மால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தானே..
“தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் சிந்தக்க..நீங்கள் சொன்னது சரி..என்னிலையை யோசித்து நான் அன்றைக்கு விலகியே இருந்திருக்கவேண்டும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. சத்தியமாய் நான் போராடினேன்..முடியவில்லை. அது என் தவறு. அதற்காய் என் பெற்றோருக்கு மாறா ரணத்தை கொடுக்க என்னால் இயலாது. உங்களை பிரிந்து இரண்டு வருடம் வேண்டாம் என்று தான் இருந்தேன்..ஆனால் அப்படியும் என்னால் உங்களை மறக்க முடியவே இல்லை. கடைசியில் நம்மை பற்றி வீட்டில் பேசினேன்..அன்றைக்கு வீட்டில் வெடித்த அதிர்வுகள் இன்னும் அடங்கவேயில்லை. “ என்று நிறுத்தியவள்
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆகிவிட்டது.” என்று ஒவ்வொரு சொல்லாக விம்மல்களுக்கிடையில் உச்சரித்தாள்.
அன்றைக்கு நாங்கள் பட்ட வேதனை அதை சொல்லி புரிய வைக்க முடியாது! அம்மாவின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. வேண்டாம்..என்னை வற்புறுத்தாதீர்கள்..உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் தான் என்னோடு சேர்த்து உங்கள் வாழ்க்கையையும் நாசமாக்கி விட்டேன்…” அவள் அவன் கைகளை எடுத்து அவனது உள்ளங்கையில் முகம் பதித்து கதறினாள்
“காரணங்கள் ஆயிரம் சொல்லலாம் மைதிலி..எனக்கு உன்னால் ஆன இழப்புக்கு என்ன பதில் தரப்போகிறாய்?” அவன் குரல் வெகு அழுத்தமாய் வினவியது.
என்ன சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் அழுகை பட்டென நிற்க நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள் அவள்.
“எனக்கு உன்னோடு வாழ வேண்டும். கொஞ்ச நாள் என்றாலும் பரவாயில்லை. வாழ்நாள் முழுமைக்கும் நினைத்துக்கொண்டே காலத்தை ஓட்ட எனக்கும் ஒரு நிறைவு வேண்டாமா?”
“எ..என்ன சொல்கிறீர்கள்?”
“இதோ பார்.. நீ வீட்டில் சொல்லிவிட்டு இங்கே வரவில்லை. பத்துநாட்கள் மெடிக்கல் லீவை ஹாஸ்டலில் போய் தங்கி கழிக்க நினைக்கிறாய். உன்னால் எனக்கான இழப்புக்கு ஈடாய் அந்த பத்து நாட்களை நீ எனக்குக்கொடு என்று தான் நான் கேட்கிறேன். “
அவ்வளவு தான் ரௌத்ரம் ஆனவள் எட்டி அவன் டீஷர்ட்டை கொத்தாக பற்றி உலுக்க ஆரமித்தாள்.
“யாரைப்பார்த்து என்னடா கேள்வி கேட்கிறாய்? உன்னை காதலித்து விட்டால் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாயா? இப்படி ஒரு நினைப்பு எப்படி வந்தது.. சீ அவ்வளவு தானா நீ?” அழுகை பொங்கி வர அவனை தள்ளி விட்டு தன் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் அவள்..
“நான் பாவி… உன்னையா நான் காதலித்தேன்.. நீ பட்டுத்தான் தெளிவாய் என்று சொன்னீர்களே அம்மா..இதை விட என்ன பட்டுவிடப்போகிறேன்..என்னை மரியாதையாக நடத்தக்கூட இவனுக்கு மனதில்லையா?” அழுகையின் இடையே புலம்பல்களும் நிற்கவில்லை. எதிரில் நிற்கும் ஒருவனிடம் தன் கவலைகளை சொல்லி அழும் பாவனையில் அழுது கொண்டிருந்தவளை இறுகிப்போன முகபாவனையுடன் பார்த்துக்கொண்டே நின்றவன் ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவனாய் மைதிலி என்று தோளைத்தொட்டு உலுக்கினான்.
தீச்சுட்டதை போல கைகளை தூக்கிஎறிந்து கண்ணாலேயே அவனை எரித்தாள் அவள்.
“நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேட்டு விட்டு பிறகு புலம்புகிறாயா?”
இன்னும் என்ன கேட்கவேண்டியிருக்கிறது?
“உன் மரியாதையும் கௌரவமும் குறைய நான் விடுவேனா மைத்திம்மா? என்னை எப்படி நீ தவறாக நினைக்கலாம்.”
அப்போ நான் காதில் கேட்டதென்ன பிரமையா? அழுகை குறைந்து விட அவனை ஏறிட்டுப்பார்த்தாள் அவள்
நான் கேட்டது என் அருகில் நீ இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான்..வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். வாழ்நாளில் நான் உன்னிடம் கேட்கும் ஒரேயொரு வரம் இதுதான் என்று வைத்துக்கொள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ உன்னை மனதில் பதித்து விட்ட காரணத்துக்காக தனியாகவே வாழ்ந்து மடியப்போகிறேனே..எனக்காக நீ இந்த சின்ன சந்தோஷத்தை கொடுக்க மாட்டாயா?
தனிமரம் தனிமரம் என்று அவன் சொல்ல சொல்ல குற்ற உணர்வில் செத்துக்கொண்டிருந்தாள் மைதிலி, அவனும் அவளுடைய பலவீனப்புள்ளியை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அவனுடைய கண்களின் யாசகத்துக்கு முன்னால் தன் எதிர்ப்பு பலமிழந்து போவதை வருத்தமாய் உணர்ந்தாள் மைதிலி.
இது எப்படி முடியும் சிந்தக்க? சுமிக்கு எல்லாமே தெரியும்! அவள் நிச்சயம் என் பெற்றோருக்கு சொல்லிவிடுவாள். அவர்கள் இதை தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். எந்த பெண்ணும் இதற்கு சம்மதிக்க மாட்டாள் சிந்தக.. உங்கள் வீட்டினருக்கு, என் பிரண்ட்சுக்கு எல்லாம் விஷயம் தெரிந்தால் நான் எப்படி அவர்கள் முகத்தில் எல்லாம் விழிப்பேன்? செத்து விடுவேன் சிந்தக.. அப்படியொன்று நிகழ்ந்தால் நிச்சயம் அதுதான் நடக்கும். நாத்தழுதழுக்க சொன்னாள் அவள்.
அப்படியெல்லாம் எதுவும் ஆகாது மைத்தி. உன் பெயர் கெடும் ஆபத்து இருந்தால் நான் இதை யோசித்துக்கூட இருக்கமாட்டேன். என்னை நம்பு! இதனால் உன் மரியாதை இம்மியளவும் குறையப்போவதில்லை அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்!
எப்படி என்று யோசிக்கிறாயா? அந்த சுமித்ரா உன் உயிர் நண்பி தானே? அந்த அம்மணியை நான் உயிரைக்கொடுத்து நீயாகவே பேசி கன்வின்ஸ் செய்து விட்டேன். அவளைப்பொறுத்தவரை நீ மஞ்சு ஆன்ட்டி வீட்டில் இருக்கிறாய். நான் வேலை விஷயமாக வெளிநாடு போயிருக்கிறேன். அவள் உனக்காக உன் வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்வதாகவும் உன் மற்ற தோழிகளுக்கு நீ உன் வவுனியா சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பதாகவும் சொல்கிறேன் என்று உனக்கு வாக்குக்கொடுத்திருக்கிறாள்.
சுமியா? நான் நம்பமாட்டேன்..நீங்கள் அவளுக்கு மெசேஜ் அனுப்ப முன்னரே அவள் பயந்துபோய் எங்கள் வீட்டுக்கு சொல்லியிருந்தால்?
“சொல்லவில்லை. அவளுக்கு நீ வீட்டுக்கு தெரியாமல் இங்கே வந்தது தெரியுமாதலால் உன்னிடம் இருந்து செய்தி வரும்வரை பயத்துடன் காத்திருந்திருக்கிறாள். அதற்காக முதலில் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும்! நீ வேண்டுமானால் உன் மொபைலில் எங்களுடைய மெசேஜஸ் பார்.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!” என்று வெறுமையாய் புன்னகைத்தவன் தொடர்ந்தான்.
“நேற்று ஒருநாள் மெசேஜில் பேசியது ஒகே..இன்றும் நீ விழிக்கும் வரை நான் சமாளித்துக்கொண்டிருந்தேன்.. இனி நீயே என் அம்மா வீட்டில் இருப்பது போல பேசி உன் குரலை காண்பித்தாயானால் தான் அவள் முழுமையாக நம்புவாள். இல்லையேல் சந்தேகம் வந்துவிடும். “
“உன் பெற்றோரை பொறுத்தவரை நீ ஹாஸ்டலில் தான் இருக்கிறாய். நேற்றும் இன்றும் உன் சார்பில் என் மாமனாருக்கு நான் மெசேஜ் அனுப்பினேன்..இன்றைக்கு அவர்களோடு ஹாஸ்டலில் இருப்பது போல நீ பேசிவிட்டால் அந்த பிரச்சனையும் தீர்ந்தது.”
“என் குடும்பத்தினர், வைத்தியசாலை நிர்வாகம் போலீஸ் எல்லாருக்கும் நீ யாழ்ப்பாணம் போய் விட்டாய் என்று தான் தெரியும். “
“உங்கள் வீட்டினர் இங்கே வரமாட்டார்களா? ” அவளுக்கு எதை சொல்லியாவது அவனுடைய மனதை மாற்றிவிடும் வேகம்!
“இல்லவே இல்லை. ஒருநாள் பால்காய்ச்ச வந்தார்கள் அதன்பின் நான் தான் அங்கே போவேன். மற்றபடிக்கு யாரும் வருவதில்லை. இங்கிருந்த சமையல்காரர் சோமரத்னவையும் அனுப்பிவிட்டேன். பொதுவாகவே இந்த வீட்டுக்கு நான் என் நண்பர்களை அழைப்பதில்லை. அப்படியும் யாரும் திடீரென்று வந்தால் கூட இவ்வளவு பெரிய வீட்டில் நீ மறைவது பெரிய விஷயம் இல்லை.. “
இவனுக்கு எது தான் பிரச்சனையாக தெரியும்? ஆயாசமாய் எண்ணிக்கொண்டவளுக்கு இன்னும் மனதளவில் கூட அவன் கேட்டதை செய்ய தயாராகவே முடியவில்லை. அவசரமாய் மறுப்பதற்கு மனம் இன்னும் காரணங்களை தேடியது.
அவளுடைய முகத்தில் இருந்து மற்றவன் அதை படித்திருக்க வேண்டும். முகத்தை கையால் பற்றி தன்புறம் திருப்பினான்.
என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா ‘கண்ணம்மா’?”
கெஞ்சலாக ஒலித்த அவன் மொழியில் இணைந்து கொண்ட “கண்ணம்மா?” அவன் உச்சரித்த முதல் தமிழ் சொல்! இமைக்க மறந்து அவனையே பார்த்தாள் மைதிலி. மூன்று சுழி ‘ண’வுக்குரிய உச்சரிப்பு அவர்களின் மொழியில் இல்லை. அவனுக்கு அது மிகக்கடினமான சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் அதை உச்சரித்த விதம் அப்படியே நெஞ்சை அள்ளிக்கொண்டு போக தன் கவலைகளை மறந்து மீண்டும் ஒருதடவை அதை சொல்ல மாட்டானா என்று அவள் அவனையே பார்த்தாள்.
“எனக்கு உன் அருகில் இருக்க வேண்டும் அவ்வளவுதான் வேண்டும். திருமணத்தோடு வரும் உரிமைகள் எல்லாம் எனக்கு இப்போது நோக்கமில்லை..என் காதல் அதற்காகத்தான் என்று உன்னுடையவர்கள் சுமத்திய பழிச்சொல்லை நிரூபிக்கும் எண்ணமும் எனக்கில்லை. அது தான் உன் பயம் என்றால் அதை நீ மறந்து விடலாம்.”
“அப்படியில்லை சிந்தக..”
பிறகு ஏன் யோசிக்கிறாய்? எதிர்பாராமல் இந்த விடயம் வெளியே தெரிந்து நம்மை யாராவது தேடி வந்தால் கூட உன் பேரில் எந்த தவறுமே வராது. காரணம் இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீ முதல் ஆளாக என்னை தான் கைகாட்டுவார்..உன் வீட்டினரிடம் தகவல் சொல்ல சொன்னதும் உன் போனை அவர் ஒப்படைத்ததும் என்னிடம் தான். அடுத்தது என்னுடைய அம்மாவும்! நானும் நான் தான் உன் விருப்பத்துக்கு மாறாக கடத்தி வந்தேன் என்று ஒப்புக்கொண்டு விடுவேன்..உனக்கு எந்த மரியாதைக்குறைவும் வராது.
அவன் செய்வான் தான்… ஆனால்.. யாருக்கும் தெரியாமல் இப்படியொரு முடிவெடுக்கும் தைரியம் தனக்கிருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.
அன்றைக்கொருநாள் இதைத்தானே சுதாவும் கேட்டான்..எனக்கும் உனக்கும் தானே நாங்கள் ஒரே சைக்கிளில் ஒன்றாக வந்தது தெரியும் என்று! வெளியாருக்கு தெரியாமல் ரகசியமாக செய்யும் தவறுகள் சரியாகி விடுமா என்று எண்ணித்தானே தவிர்த்தாய்? இப்போது மட்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டாய்? அவளே தனக்குள் வாதியும் பிரதிவாதியுமாகி வாதாட ஆரம்பித்தாள்
அன்றைக்கு கூட சுதாவை விட்டு விட்டு இவனோடு போவதை தானே தேர்ந்தெடுத்தாய்!
எல்லாவற்றையும் விட சுதாவும் இவனும் ஒன்றா? இவன் அவள் உயிரல்லவா?
உயிர் என்றால் மட்டும் எல்லாவற்றுக்கும் நீ சம்மதிப்பாயா?
அவன் வெறும் அருகாமையை மட்டும் தானே கேட்கிறான். உன்னை காதலித்த பாவத்துக்கு பரிகாரமாய் நீ இதை செய்தால் தான் என்ன?
அவளால் முடிவுக்கு வரவே முடியவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே மனம் முரண்டு பிடித்து போராடியது.
“கொஞ்சம் யோசியேன் மைத்திம்மா… அப்படி நாம் சிக்கும் வாய்ப்பு கண்ணுக்கு தெரிந்தால் உன்னை மூன்றே மணி நேரத்தில் கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டு விடுவேன்..கவலைப்படாதே.. “
“……” அவள் பதில் பேசாமல் நகத்தை கடித்தாள்.
வாயில் இருந்த அவளது விரலை வெளியே எடுத்து விட்டு அவளது தாடையை மென்மையாய் வருடியபடி தன் கண்களால் அவள் பார்வையை மொத்தமாய் கைது செய்தவன் “இந்த பத்துநாளும் மட்டும் உலகத்தை, சமூகத்தை, நமக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளை மறந்து நமக்கே நமக்கென வாழ்வோமே. கொஞ்சம் சிந்தித்து பார் கண்ணம்மா.. “ வழக்கம் போலவே அவளை உருகிக்கரைய வைக்கும் அவனுடைய கண்களின் மென்கபில வர்ணத்துக்குள் அவள் சுயம் மறந்து நழுவிக்கொண்டே இருந்தாள். கூடவே அந்த கண்ணம்மாவும் சேர்ந்து கொள்ள இனிமேல் திரும்பி வர முடியாத எல்லைக்கு அவளை அனுப்பி வைக்க முயல்கிறான் இந்த பொல்லாதவன் என்று அவளுக்கு புரிந்தது.
வலுக்கட்டாயமாய் அவன் விழிகளில் இருந்து பார்வையை விலக்கிக்கொண்டவள் யோசனையாய் வெறித்தாள்.
அவனும் இப்போது விலகி எழுந்தான்.
“யோசி.. என் இழப்புகளுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்..நான் எனக்கு மட்டும் சந்தோஷத்தை கேட்கல..உனக்கும் சேர்த்துத்தான் சந்தோஷத்தை கேட்கிறேன்.. கொடுக்க மனதிருந்தால் கொடு. இல்லாவிட்டால்…” என்று இழுத்தபடி மேஜையில் இருந்த ஸ்டிக்கி நோட்பாட்டை எடுத்து எதையோ கிறுக்கி அவளுக்கு முன்னிருந்த டீப்பாயின் கண்ணாடியில் ஓட்டினான்.
“எனக்கு நம்பிக்கையான டாக்சி கம்பனியின் நம்பரும் இந்த வீட்டின் அட்ரசும் இருக்கிறது. இப்போதே நீ கிளம்பினால் விடிவதற்குள் ஹாஸ்டல் போய்விடுவாய். ஆனால் அதன் பின்னர் உன் நிழல் கூட என் மேலோ என் வீட்டினர் மேலோ படியக்கூடாது.” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு பதிவான ஹாலில் இருந்த ஒற்றைப்படியில் ஏறி பின்புறமாய் அவன் மறைந்து விட தலையை வலக்கையில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் மைதிலி..
மனதுக்குள் அவளது ஆசைகளும், அவளுக்குள் ஆலமரமாய் வேரூன்றிப்போயிருந்த காதலும், அவனின் ஏக்க முகமும் ஒன்று சேர்ந்து அவளை வடிவமைத்திருந்த வளர்ப்பையும், பெற்றோரின் நம்பிக்கையையும் எதிர்த்து ஆவேசமாய் போர் புரிந்தன.
வாழ்நாள் முழுக்க என் பெற்றோருக்காகத்தானே என் ஆசைகளை விட்டுக்கொடுத்தேன். என்னை காதலித்த பாவதுகாய் தனிமரமாகிவிட்டேன் என்கிறானே இவனுக்கு நான் என்ன செய்தேன்? அவன் வாய்விட்டு கேட்பதை செய்யாமல் இங்கிருந்து போனால்…ஒரு கணம் விடாமல் இந்த எண்ணம் என்னை கொல்லாதா?
இங்கே நான் சந்தோஷமாய் இருக்கிறேனோ இல்லையோ,,,அவனிடமும் எனக்கொரு கடமை இருக்கிறது அல்லவா? பிறகு அவன் சொன்ன தேவைக்காக மட்டும் பழகினாள் என்ற குற்றச்சாட்டு உறுதியாகி விடுமே…
அவனோடு இருக்கும் நாட்கள் அவனுக்கு மட்டுமா பொக்கிஷம்? ஒட்டகம் சேமிக்கும் தண்ணீரை போல அவளும் அந்த கனங்களைஎல்லாம் வாழ்நாள் முழுமைக்கும் சேகரிப்பாளே…
இனிமேல் நிழல் கூட படக்கூடாதாமே.. அவன் இருந்துவிடுவானா?
வெகு நேரமாய் தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவள் ஒரு முடிவுடன் அந்த ஸ்டிக்கி நோட்டை கழற்றி எடுத்துக்கொண்டு அவனை தேடிப்போனாள்
கிச்சனில் எதையோ தயாரித்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்
சிந்தக…
ஹ்ம்ம்..அவன் முகம் உணர்ச்சிகளை சுத்தமாய் துடைத்திருந்தது.
இங்கே bin எங்கே இருக்கிறது? இந்த பேப்பரை போட வேண்டும்! ஒவ்வொரு சொல்லாக அழுத்திக்கேட்டாள் மைதிலி.
அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மலர்ந்து கண்களும் சிரிக்க ஆரம்பிக்க அவனது மலர்ச்சி அவளது முகத்திலும் சின்னதாய் ஒரு புன்னகையை பிரசவித்தது.
அடுத்த கணம் அவளை நெருங்கியவன் இறுக்கமாய் அணைக்க நன்றி, தவிப்பு ஆறுதல் என்று அத்தனையையும் காண்பித்த அந்த அணைப்பு ஏற்படுத்திய உணர்ச்சி வேகத்தில் கண் கலங்கினாலும் அதையும் தாண்டி சுரீர் என்று வலிக்க “ஹையோ என் கை” என்று அலறினாள் அவள்.
சாரி சாரி..என்ற படி கையை விட்டு விட்டாலும் தாங்க்ஸ் மைத்தி என்று நெற்றியில் முத்தமிட்டு விட்டே விலகினான்.
“ரொம்ப நேரமா சாப்பிடாம இருக்க..இந்தா இதை முதல்ல குடி…” அவன் கலந்து வைத்திருந்த நெஸ்டமோல்ட்டை எடுத்து நீட்ட மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் அவள்.
தனக்கு நடந்தவைகளை அவளால் இன்னும் நம்பக்கூட முடியவில்லை. அதுவும் தன்னுடைய மனநிலை தான் அவளை இன்னும் ஆச்சர்யப்படுத்தியது. முடிவெடுக்கும் வரை பயமும் படபடப்புமாக எப்படி இருந்தாள்!!!!
இப்போதோ அவளையறியாமலே அவளுக்குள் ஒரு மெலிதான படபடப்பு புகுந்து கொண்டிருந்தது, தான் இப்படி உணர்வதே கொஞ்சம் அவமானமாகவும் வேதனையாகவும் இருக்க உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.
சூடாக இருந்த பானத்தை ஒரு வாய் பருகியவள் தனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்று காய்கறி வெட்டியவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது பயங்களையும் கவலைகளையும், அவனின் ஆயிரம் சமாதானங்ளை தாண்டிய நாளை பற்றிய நடுக்கத்தையும் அவனது அருகாமையும் அந்த வீடும் மெல்ல மெல்ல விலக்கி தன்னை ரிலாக்ஸ் செய்வதை அவளாலேயே உணர முடிந்தது
“எவ்ளோ நாளைக்கு இப்படி என்னை ஏமாத்துவேன்னு நானும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அவன் வெட்டிய காய்கறிகளை ப்ரெஷர் குக்கரில் போட ஆரம்பித்தான் சிந்தக