நீ பிரிந்து போனபோது ஒரு கையாலாகாதவனாய்த்தான் கைகட்டி கண்ணீரோடு நின்றேன். நீ திரும்பி எனக்காக வருவாய் என்பதை மந்திரம் போல மனதில் உச்சரித்துக்கொண்டே வெறித்தனமாய் உழைத்தேன். என் கம்பனிப்பெயரை “மச்சி” என்று மாற்றியபோது எல்லோரும் இளையவர்கள் மனதைக்கவரும் சொல்லை நான் கண்டுபிடித்து வெற்றிக்கனியை பறித்துவிட்டதாக என்னை புகழும் போது வாய்விட்டு சிரிக்கத்தான் தோன்றும் எனக்கு! அந்த சொல்லில் நீயும் நானும் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கெல்லாம் புரியுமா என்ன? . வெறும் பெயராக உடனிருந்தே என்னை வெற்றியெனும் விண்ணை தொடவைத்தவள் நீ..உன்னை எப்படியடி விட்டுத்தருவேன்?
அவள் கொடுத்துப்போன புத்தகத்தை கையில் சிலுவை சுமப்பவனை போல சுமந்து கொண்டு வந்து வண்டியில் ஏறினான் சிந்தக.
காரின் உள்ளே கதவடைத்துக்கொண்டதும் கரையுடைத்துக்கொண்ட உணர்வுகளை கட்டுப்படுத்த அவனுக்கு வழி தெரியவில்லை!
போயே விட்டாளா? மைதிலி அவனுக்கு இல்லவே இல்லையா?
கையில் இருந்த புத்தகத்தில் பார்வையை பதித்தான் அவன்.
ஆளப்பிறந்தவனாம்!! மடச்சி! அன்றிலிருந்து இன்றுவரை நான் ஆள நினைப்பது உன் ராஜ்யத்தினை மட்டும் தான். மனதுக்கினியவள் கை சேராவிட்டால் உலகையே ஆண்டுதான் என்ன பயன்?அது ஏன் உனக்கு புரியவே இல்லை? கோபமாய் புத்தகத்தை தூக்கி தூர வீசியவன் அது பரிதாபமாய் விழுந்து பக்கங்களை படபடக்க மைதிலியின் கையெழுத்து நீல மையில் எழுதப்பட்டிருந்தது இவன் கண்ணில் பட்டது!
“ஆல் த பெஸ்ட்” என்ற வாசகத்தில் என்று எழுதி இறுதியில் மொட்டையாக மைதிலி என்று கையொப்ப மிட நினைத்திருக்கவேண்டும். மைதிலியின் இறுதி y கலங்கிக் கலைந்திருந்தது. அது ஏன் என்று சிந்திக்க வேறு வேண்டுமா என்ன?
அவன் கைகள் கோபமாய் ஸ்டியரிங்கை இறுக்கின.
எதற்காக இந்த துன்பம்?
மூன்று வருஷமாக…
நாட்டில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன..
அவளும் புரிந்துகொள்வாள். நம்மிருவர் நடுவில் காதல் என்ற இணைப்பு இருக்கும் வரை இவ்வேற்றுமைகளால் நம்மை காயம் செய்ய முடியாது, எல்லா தடைகளையும் அதுவே உடைக்கும் என்று அவளுக்கு தெரிய வரும்
என்னைத்தேடி என்னோடு வாழ அவள் வருவாள்
என்றெல்லாம் நம்பி இருந்தது ஆண்டுகள் ஒன்றாய் ரெண்டாய் மூன்றாய் கடக்க கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்டம் காண..அவள் தன்னை நிஜமாகவே மறந்துவிட்டாளா? இனிமேல் இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டு போய்விடுவாளா? போன்ற தேவையில்லாத கற்பனைகளும் அதன் விளைவாய் பொங்கிவரும் கோபமும் அவனுக்கு பழகிப்போயிருந்தது.
பாவி துரோகி..துவேசி..எப்படியெல்லாம் அவளை அர்ச்சித்தாலும் ஒரு நாளில் ஒரு முறையாவது என் மைத்திக்குட்டி என்று அவன் மனம் கொஞ்சாமல் இருந்ததே இல்லை. கானல் நீராய்த்தான் தன் காதல் போய் விட்டது..இனிமேல் காலம் முழுக்க அவனுக்கு அவளது ஞாபகங்கள் தான் கதி என்ற முடிவுக்கு அவன் எப்போதோ வந்திருந்தான்.
அந்த சோளத்தொட்டம், மாதுளை நிலம், அம்மாவின் பிறந்தநாள், அவனுடைய அலுவலகம் என்று அவள் விட்டுப்போன நினைவுகள் அவனை கொல்லும். ஸ்க்குவீசீஸ் ஆக ஆரம்பித்த தொழிலை இப்போது டவுனில் வேறு பெயரில் மிகப்பெரிதாய் விரிவுபடுத்தி அதை வெறும் ஸ்டோராக்கி வைத்திருந்தாலும் அந்த மாதுளை நிலத்தில் உழைப்பதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. ஒரு வகையில் அந்த உடலுழைப்பு அவனுக்கு சிந்தனைகளில் இருந்து விடுவித்து தூக்கத்தை வரவைக்கும் ஒரு வழியாக கூட இருந்தது உண்மை.
எப்போதாவது இரவின் தனிமையில் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத பிரச்சனை ஒன்று அவர்களின் காதலை சிதைக்கிறதே என்று வேதனை கொள்ளும் தருணங்களில் அவளை தேடிப்போகவேண்டும். மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று மனம் உந்தி தள்ளுவதுமுண்டு ஆனால் அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டும் விட்டுப்போனாள் அல்லவா..அவளே உணர்ந்து அவன் மட்டும் போதுமென திரும்பி வருவது தான் என் காதலுக்கும் எனக்கும் கௌரவம் என்ற எண்ணத்தில் அவன் பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருந்தான்.
இன்றைக்கு அம்மா அவள் வந்துவிட்டு போகிறாள் என்று தகவல் சொல்லியதும், ஓரளவுக்கு அவர்களை புரிந்து வைத்திருந்த தங்கை அவள் அவனை கண்ணீருடன் கேட்டாள் என்று சொன்னதும் அவள் அவனைத்தேடி வந்துவிட்டாள் என்று எண்ணவைத்ததில் ஒருகணம் அவன் மகிழ்ந்து தான் விட்டான். அவள் நினைத்தால் அவனுக்கு போன் செய்திருக்கலாம். வீட்டில் கேட்டுக்கொண்டு அவனை தேடி வந்திருக்கலாம். ஆனால் வெட்டியது போல விலகிப்போனவள் தன் வீட்டுக்கு திரும்பி வந்ததே தனக்காக தான் என்று மனதுக்கு தெரிந்திருந்ததே..வேறேதும் யோசிக்கவில்லை அவன். அவளை பார்த்து விட வேண்டும் என்று தான் அவர்கள் கடக்கும் இடத்தை அனுமானித்து போய் நின்றான். பஸ்ஸை நிறுத்தி பேசுவது தான் அவனது நோக்கமாக இருந்தது. ஆனால் வளைவில் பஸ் திரும்பும் போதே இருவரும் பார்த்துக்கொண்டு விட்டார்கள்.
கண்டதும் தன்னிடம் ஓடி வந்து இறுக்கிக்கொள்ளும் உணர்வுகளை முகத்தில் காட்டுவாள் என்று இவன் இருக்க கையாலாகாத்தனமும் ஏக்கமுமாய் விம்மி வெடித்தபடி அவள் தலையை உள்ளிழுத்து புதைத்துக்கொள்ள பூமியே காலடியில் நழுவியது அவனுக்கு!
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறதா?
மூன்று ஆண்டுகள் இவளை மாற்றவே இல்லையா?
இப்படி பார்த்து கண்ணீர்விட்டு அழத்தான் இங்கே வந்தாளா? அவனை சேர இல்லையா?
இனி பஸ்ஸை நிறுத்தி பேசி என்ன ஆகப்போகிறது? விரக்தியாய் எண்ணியபடி பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அம்மாவிடம் ஏதும் தகவல் தந்திருப்பாளோ குறிப்புக்கொடுத்திருப்பாளோ என்ற நப்பாசையில் அம்மா வீட்டை நோக்கி வண்டியை ஓட்டி வந்திருந்தான் அவன். ஆனால் இன்னும் அப்படி நம்புவதற்காக தன் மேலே வெறுப்பும் விரக்தியும் தோன்றாமலில்லை.
அவனுக்கு மட்டும் உரிமையாய் தந்தது என்றும் சொல்ல முடியாமல், ஒரு கடமைக்கு கொடுத்ததென்றும் சொல்லமுடியாமல் அவனுக்கென்று தேடி வாங்கப்பட்டிருந்த அவளது பரிசே அவனுக்கு அவள் இன்னும் அதே இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் தான் இருக்கிறாள் என்று சொல்லி விட்டது. அதற்கு மேல் அவளின் கதைகளை கேட்டுக்கொண்டிருக்க பிடிக்காமல் தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் அவன்.
அவள் வராமல் இருந்திருந்தால் கூட அவனுடைய வாழ்க்கை பழகிய தாளத்தில் நகர்ந்திருக்கும். வந்து மீண்டும் மொத்தமாய் கலைத்து விட்டல்லவா போய்விட்டாள்.
அன்றைக்கு உடைந்து நின்றபோது அவள் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது..அவளுக்காக வாழ்க்கையில் முன்னேறும் வெறி இருந்தது. ஆனால் இன்று? வரவே மாட்டாள் என்று தெளிவாகவே புரிந்தாயிற்று. இனிமேல் எப்படி மீளப்போகிறான் அவன்?
மீதமிருக்கும் வாழ்க்கை முழுக்க அவளை விட்டுவிட்டு அவன் மட்டுமே தான் தனியாக கழிக்க வேண்டுமா? நினைக்க நினைக்க நெஞ்சு காந்திப்போனது அவனுக்கு.
அவனுடைய வண்டி பாதையை விட்டு பிரிந்து தாரிட்ட தனியார் பாதை வழியாக மேலே ஏறியது. இருபக்கமும் மரத்தோப்புக்களிடையே அமைதியாக நின்றுகொண்டிருந்தது அந்த இரண்டு மாடி ஓட்டு வீடு.
இருவருடைய இடங்களையும் விட்டு விட்டு தலைநகர் போய்த்தான் ஒன்றாக இணைந்து வாழ்தல் சாத்தியம் என்பது யார் சொன்னது? அவனுடைய வேரிலேயே அவளுக்கொரு கூட்டை உருவாக்க முடியும். அதில் அவளுடைய மொத்த அடையாளங்களுடன் அவளை சந்தோஷமாக வாழ வைக்கவும் முடியும் என்பதை வைராக்கியமாக கொண்டு தான் இந்த வீட்டினை ஆசையாசையாய் கட்டினான் அவன். மைதிலியும் சிந்தக்கவும் வாழும் வீட்டில் அவனுடைய புத்தனும் அவளுடைய சிவனும் ஒன்றாக இருக்க முடியாதா? மென் பச்சை வர்ணமடிக்கப்பட்ட வீடு, ஹாலின் மூலையில் அருகருகே இருவருக்கும் தனியான பூஜையறைகள். ஒரு முறை அவள் தங்களுக்கு காட்டிய தன்னுடைய வீட்டுப்படங்களை நினைவு கூர்ந்து அதே போல தன் வீட்டின் மூன்று மூலைகளிலும் யாழ்ப்பாணத்து கறுத்தக்கொழும்பான் மாமரங்களைக்கூட நாட்டி வளர்த்திருந்தான் அவன்.
இன்றைக்கு எல்லாமே அவனை பார்த்து சிரிப்பதாக பட்டது. இனிமேல் என்ன செய்யப்போகிறேன்.. அவனுக்குள் அந்த கேள்வி தான் பூதாகரமாய் முளைத்து நின்றது. கதவைக்கூட தாளிடாமல் சோபாவில் சரிந்து விழுந்து முகட்டை பார்க்க ஆரம்பித்தவனை கிச்சனில் இருந்து மெல்ல எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் உள்ளே திரும்பிக்கொண்டார் சமையல் காரர் சோமரத்ன.
‘உன்னைப்போலவே அவளாலும் நிச்சயமாய் இன்னொரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் உங்கள் இருவரின் நன்மைக்காக இன்னொரு முயற்சி செய்வதில் என்ன தவறு? இந்த தடவை நீ ஏன் அவளை தேடிப்போகக்கூடாது?’
திடுமென எங்கிருந்தோ வந்த அந்த எண்ணம் அவனை ஒருமுறை உலுக்கிவிட ஹாலின் மூலையில் அமைதியாய் சம்மணமிட்டிருந்த புத்தரின் காலடியில் இருந்து புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தியின் மணத்தை போலவே அந்த எண்ணமும் அவனை மீறிக்கொண்டு அவனுக்குள்ளே வியாபித்தது.
“தம்பி போன் அடிக்கிது பாருங்க..” சோமரத்ன அவனை உலுப்பும் வரை தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் சுயம் மறந்து கிடந்தவன் தொலைபேசியை எடுத்து காதில் பொருத்திக்கொண்டான்.
“புத்தா… யூனிவர்சிட்டி பசங்க வந்த பஸ் ஒண்ணுக்கு ஆக்சிடன்டாம்.. மைதிலி போன பஸ் தானோ தெரியல..எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..எங்களை தேடி இவ்வளவு தூரம் வந்த பொண்ணு…. “ பேசிக்கொண்டிருக்கும் போதே பதட்டத்தில் தாய் அழ ஆரம்பித்து விட அதிர்ந்து போனவன் “அப்படியிருக்காதும்மா” என்று அவசரமாக மறுத்தான். தாயையும் கூடவே தன்னையும் சமாதானம் செய்யும் முகமாக..
இல்லப்பா..பேராதெனியவுல இருந்து வந்தவங்கன்னு தான் பேசிக்கிறாங்க. ஜெனரல் ஹாஸ்பிட்டல்ல தான் வச்சிருக்காங்களாம் எல்லாரையும்.
“ஒகே ஒகேம்மா.. நீ பதறாம இரு.. மைதிலிக்கு எதுவும் ஆகியிருக்காது. நான் உடனே போய் பார்க்கிறேன்” அதற்குள் சொமரத்னவிடம் சைகை செய்தபடி வண்டியின் அருகே வந்திருந்தான் அவன்.
நான் காத்திட்டு இருப்பேன்பா. உடனே போன் பண்ணு..
சரிம்மா.. போனை அணைத்து விட்டு வண்டியை ஜெனரல் ஹாஸ்பிட்டல் பக்கமாக விரட்டியவன் மனம் முழுக்க அவளுக்கு எதுவும் ஆகி விட கூடாது என்றே ஜபித்துக்கொண்டிருந்தது. யாருக்கும் போன் பண்ணி விசாரிக்கும் பொறுமையெல்லாம் அவனுக்கு இல்லை. போ நேரே போ..அவள் அங்கில்லை என்று நீயே நிச்சயப்படுத்திக்கொள் என்று அவனுக்குள் இருந்து எதுவோ துரத்திக்கொண்டிருந்தது.
அவனை கண்டு ஆங்காங்கே உயர்ந்த விழிகளை பொருட்படுத்தாமல் வேகவேகமாய் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தவன் நேராக வரவேற்புப்பகுதியில் சென்று விசாரித்தான். கொஞ்சமாய் தான் விபரம் கிடைத்தது.
அவள் போன அதே நீல நிற பஸ் தான்!
அப்போதுதான் கொண்டு வந்து அனுமதித்திருந்த படியால் பெயர் விபரங்கள் ஏதும் தெரியவில்லை இன்னும். இருவருக்கு தான் கொஞ்சம் காயங்கள் பலம்..மற்றபடிக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று ரிசப்ஷனிஸ்ட் புன்னகைத்தார்.
நேராக தலைமை வைத்தியரை தேடிக்கொண்டு போனான் அவன். இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு வளர்ந்து விட்டிருந்த செல்வாக்கு நேராக அவரது அறைக்கே அழைத்து சென்றது.
“பஸ் வயலுக்குள் விழுந்ததில் புட் போர்டுக்கு பின்னால் இருந்த பெண்ணுக்கும் டிரைவர் சீட்டுக்கு பின்னே இருந்த பையனுக்கும் தான் கொஞ்சம் அதிகம் அடிபட்டிருக்கிறது மற்றவர்கள் இன்றிரவே வீட்டுக்கு கிளம்பகூடிய அளவு கீறல் காயங்கள் மட்டும் தான்”
புட் போர்டுக்கு பின்னே இருந்தவள் அவள் தானே..அவனை பார்க்கும் போதும் புட்போர்ட் குறுக்குக்கம்பியை பிடித்துக்கொண்டிருந்தாளே.. தன் உடல் விறைத்ததை காண்பித்துக்கொள்ளாமல் அந்த ரெண்டு பேருக்கும் ரொம்ப அடியா என்று விசாரித்தான் சிந்தக.
“பையனுக்கு தான் கால்லயும் கைலயும் ப்ராக்ஷர் ஆகிருக்கு அது போக அங்கங்க அடி பட்டிருக்கு. அந்த பொண்ணுக்கு கைல ப்ராக்ஷர்.. நெற்றியிலயும் கால்லயும் உடைந்த கம்பி ஏதோ லேசாக கிழித்திருக்க வேண்டும். தையல் போட்டிருக்கிறது. இன்றைக்கு இங்கே ஓய்வெடுத்தால் நாளைக்கே வீட்டுக்கு கொண்டு போய்விடலாம்..யாரும் பயப்படும் நிலையில் இல்லை” என்றார் அவர் பதிலாக.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அப்பகுதி இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீயும் சப் இன்ஸ்பெக்டரும் அவனுக்கு ஒரு புன்னகையை தந்து விட்டு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தனர்.
“டாக்டர் ஒரே நிமிஷம், சாரி போர் த டிஸ்டர்பன்ஸ் சிந்தக.” என்ற சந்திரஸ்ரீயிடம் “இட்ஸ் ஒகே சார். நீங்க பேசுங்க..நான் வேணும்னா வெளியே இருக்கேன்.” என்றபடி எழுந்தான் அவன்
“நீங்க உக்காருங்க..அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்ல.” என்று புன்னகைத்தவர் டாக்டரிடம் திரும்பினார்.
“டாக்டர். ஸ்டேஷன்ல வச்சு எல்லோரோட வீட்டுக்கும் இன்போர்ம் பண்ணிட்டோம். இந்த மயக்கத்துல இருக்கற பொண்ணோட பாக்கை தான் காணோம். மொபைல் சுவிட்ச் ஆப்ல இருக்கு! இந்த கலவரத்துலயும் யாரோ திருட்டுப்பய வேலையை காட்டியிருக்கான். அந்த பொண்ணோட ஆளுங்களுக்கு தான் தகவல் சொல்ல முடியல, அந்த பையன் நாளகவை விசாரிக்கும் போது அவ தமிழ்ப்பொண்ணுன்னு சொன்னான். ஹாஸ்டலுக்கு கால் பண்ணி அவ பிரன்ட்சுக்கு சொல்லிட்டா அவ வீட்டுக்கு அவங்க சொல்லிருவாங்கன்னு சொல்றான் அவன். அங்கே ஹாஸ்டலுக்கு கால் பண்ண முன்னே அவளோட கண்டிஷன் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டா யாரையும் டென்ஷன் பண்ணாம பக்குவமா சொல்லிரலாம்னு தான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.”
நெற்றியில் சுருக்கமாக உருவாக தொடங்கியிருந்த சிந்தனைகளின் விளைவால் “இன்ஸ்பெக்டர் சார், ஒரு நிமிஷம்” என்று இடைமறித்த சிந்தகவினை மூவருமே ஏறிட்டனர்.
“சார் மைதிலி.. சாரி..எனக்கு அவளை நல்லாவே தெரியும் சார். இங்கே படிக்கும் போதும் சரி போனப்புறமும் சரி அவ எங்களோட பாமிலிக்கு ரொம்பவே க்ளோஸ். இப்போ கூட எங்க வீட்டுக்கு தான் வந்திருந்தா. அதுதான் விஷயம் தெரிஞ்சதும் நான் ஓடிவந்தேன் . அவளோட அப்பா அம்மாவையும் எங்களுக்கு நல்லாவே தெரியும். நானே அவங்களுக்கு பக்குவமா சொல்லிர்றேன். கவலையை விடுங்க”
நல்லவேளை.. அவ்ளோ தூரத்துல இருந்து பதறிட்டு வரப்போறாங்களே அவ அம்மா அப்பான்னு கவலையாவே இருந்தது. இப்போ தான் நிம்மதியாச்சு. அப்போ நீங்களே பக்குவமா சொல்லிடுங்க தம்பி. இந்த பொண்ணு உங்க பொறுப்பு” என்று சொல்லிவிட்டு அவர்கள் விடைபெற தானும் டாக்டரிடம் விடைபெற்று வெளியே வந்தான் அவன்.
அம்மாவுக்கு அழைத்து மைதிலிக்கு ஒரு இரவுஹாஸ்பிட்டலில் தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் அன்றிரவு தங்க ஆயத்தமாக ஹாஸ்பிட்டலுக்கு வருமாறு பணித்தவன் ஆக்சிடன்ட் வார்டுக்கு வெளியே அழுத விழிகளும் வெளிறிய முகமுமாக இருந்த யாரோ ஒரு பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்த நாளகவை நெருங்கினான்.
உடனேயே அவனை அடையாளம் கண்டு கொண்ட மற்றவன் சிந்தக அண்ணா என்று ஆச்சர்யமாய் அழைத்தபடி அவனுக்கு அருகில் வந்தான்.
திடீரென்று பஸ் கட்டுப்பாடிழந்து பாதையில் இருந்து விலகி வயலுக்குள் வீழ்ந்ததையும் நடு சீட்டில் இருந்த அவன் காயங்களின்றி தப்பித்ததையும் அதிர்ச்சி இன்னும் விலகாமல் விபரித்தவன் பேராதெனிய பல்கலைக்கழகத்துக்கும் பெற்றோருக்கும் தாங்களே தகவல் தெரிவிப்பதாக சொன்ன போலீசார் பஸ்ஸோடு பாக், பொங்கல் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விட்டார்கள்,கேட்டால் இதோ தருகிறோம் என்று சொன்னவர்கள் இவ்வளவு நேரமாயும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஹாஸ்டலுக்கு தகவல் சொல்வதற்கு நண்பர்களுடைய நம்பர் மனப்பாடமும் இல்லை. என் வீட்டில் அண்ணாவிடம் நண்பர்கள் இருவரின் நம்பர் இருக்கிறது அப்படித்தான் ஹாஸ்டலுக்கு தகவல் சொல்ல வேண்டும். என்று நீளமாய் புலம்பியவனை யோசனையோடு கையமர்த்தினான் அவன்.
ஏனெலில் மைதிலி வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டாள் என்று அவனுக்கு ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே அதற்குள் விஷயத்தை அங்கே கொண்டு செல்ல அவனுக்கு மனதில்லை. அதனால் தான் சந்திர ஸ்ரீயிடமும் தானே சொல்வதாக பொறுப்பெடுத்து செய்தி சேர்வதை தாமதித்தான். எதுவானாலும் மைதிலி விழித்ததும் முடிவு செய்யட்டுமே என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது.
“அவசரப்படாதே தம்பி. சொல்ல வேண்டிய பெற்றோருக்கு தெளிவாக சொல்லியாயிற்று தானே..இப்போ நீ போன் பண்ணி ஹாஸ்டலுக்கு சொல்ல அங்கே விஷயம் பரவி மாறி மாறி எல்லோரும் ஆக்சிடன்ட் ஆனவர்களுக்கு போன் செய்து அவர்கள் போன் எடுக்காவிட்டால் பதட்டப்படுவார்களே. போலீஸ் இங்கிருந்து போய் தான் திரும்ப அதையெல்லாம் எடுத்து வருவார்கள் என்று நினைக்கிறேன். அதை விட நான் வேண்டுமானால் இங்கே இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக்கொண்டு எங்கள் அலுவலக வண்டியொன்றில் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து தர சொல்கிறேன். அதன் பிறகு போன் போட்டு சொல்.” என்றவன் நாலகவையும் அழைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரை நாடி சென்றான்.
அவன் நினைத்தபடியே அவரும் நாங்கள் ஸ்டேஷனுக்கு போய்த்தான் வண்டியை அனுப்ப முடியும். அங்கே வண்டியை அனுப்பி பொருட்களை எடுக்க முடிந்தால் தங்களுக்கு ஒகே என்று தெரிவித்தார்.
அலுவலகத்துக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னவன் நாலகவிடம் திரும்பினான். இப்போ ஒரு ஒருமணிநேரத்துல திங்க்ஸ் வந்துரும். சரி பார்த்து எடுத்துக்கோ என்றவன் அதற்குள் வராண்டாவில் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்த தாயாரை கண்டு அவனிடம் விடைபெற்றான்
தாங்க்ஸ் அண்ணா..
இருக்கட்டும் என்பதுபோல் அவனுடைய புறங்கையில் தட்டிக்கொடுத்துவிட்டு அம்மாவை எதிர்கொண்டு நடந்தான் அவன்.
என்னப்பா இப்படியாயிருச்சே என்று கலங்கியவரின் தோள்களில் கைபோட்டவன் “ மைத்திக்கு ஒண்ணுமில்லம்மா..நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போலாமாம். கைல மட்டும் தான் ப்ராக்ஷர். பயப்படாதீங்க” என்றபடி நடத்திக்கொண்டு வந்து அவள் இருந்த ஐ சி யூ வார்டுக்கு முன்னே அவரை அமர்த்திவிட்டு தானும் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் “ மைதிலிக்கு இன்னும் ஒரு மணிநேரத்தில் விழிப்பு வந்துவிடும். அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டு காலை பத்துமணியளவில் டிஸ்சார்ஜ் செய்யலாம்” என்று அவளை பரிசோதிக்க வந்த டாக்டர் சொல்லிவிட்டு அவர்களை உள்ளே அனுமதித்து விட்டுப்போனார்.
வேகவேகமாய் முன்னே நடந்த தாயாரை தொடர்ந்து தானும் உள்ளே நுழைந்தான் சிந்தக.
நெற்றியில் இரண்டு தையல்களாம். ஆனால் முழு நெற்றியையும் மறைத்து பிளாஸ்டர் போட்டு விட்டிருந்தார்கள். வலக்காலில் பாண்டேஜ் போட்டிருந்தார்கள். அங்கும் நான்கு தையல் போட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள். தையல்கள் கரையும் வகை தானே..ரெண்டு வாரத்தில் ஆறிவிடும். ஆனால் இடக்கை தான் பாண்டேஜ் போட்டு கழுத்தை சுற்றி மாலையிடப்பட்டிருந்தது. எலும்பு பொருந்த ஒரு மாதமாவது எடுக்காதா? அதிர்ச்சியிலும் இரத்தப்போக்கிலும் இமை மடல்கள் வரை வெளிறிப்போய் படுத்துக்கிடந்தவளை இமைக்காமலே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
ஏன் உன்னை சந்தித்தேன்.. ஏன் உன்னிடம் ஈர்க்கப்பட்டேன்..
சரி இது நடக்காது என்று தெரிந்தபின்பும் ஏன் உன்னை கடந்து போக இயலாமல் இருவருமே ஏன் இப்படி வதைபடுகிறோம்?
அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் சிந்த்தக. கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின் இவ்வளவு கிட்டத்தில் அவளின் முகத்தை பார்க்கிறானல்லவா? எந்தவித மாற்றங்களும் இல்லை. முகத்தில் இருந்த பழைய குழந்தைத்தனம் கொஞ்சமே கொஞ்சம் விலகி லேசான முதிர்ச்சி எட்டிப்பார்க்கிறதோ? தலைமுடியை மொத்தமாக சுருட்டி உச்சியில் கொண்டையிட்டிருந்தார்கள். உடைகளும் நகைகளும் மொத்தமாய் களையப்பட்டு ஹாஸ்பிட்டலின் பச்சை ஓவர் கோட் மட்டும் போட்டு விட்டிருந்தார்கள்.
இன்னும் பச்சை நிறம் பிடிக்குமா அவளுக்கு?
இறுக்கத்தையும் மீறிக்கொண்டு புன்னகை ஒன்று அவன் உதட்டில் முளைத்தது.
“மைத்திக்கு அவளோட அப்பான்னா உயிர்..பாரேன் இப்போ கூட அப்பா அப்பான்னு சொல்லிட்டிருக்கா.. “தாயார் சொல்லியபடியே அவளின் காலை சீராக வைக்க அவற்றின் குரலில் பட்டென்று உணர்வுக்கு வந்தவன் அவளை ஊன்றி கவனித்தான்.
ஆமாம். மிக மெதுவாக அவளது உதடுகள் முனகிக்கொண்டிருந்தன. மயக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல்….
சுமி…
அப்பாக்கு..தெரியாது..
அப்பா…
சுமி என்னை ….கூட்டிட்டு போ..
நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. இவள் வீட்டில் சொல்லிவிட்டு இங்கே வரவில்லை. ஆக வீட்டுக்கு நம் விஷயம் தெரிந்திருக்கிறது! எது எப்படியோ இன்ஸ்பெக்டர் சொல்லாவிட்டாலும் ஆக்சிடென்ட் விஷயம் ஹாஸ்டலுக்கு போனால் உடனேயே வீட்டுக்கு தகவல் போகுமே… சிந்தகவின் புருவங்கள் யோசனையாய் நெரிய அவளோ தொடர்ந்து முனங்கி கொண்டிருந்தாள்.
அப்பா நான் தப்பு பண்ணல..
எனக்கு நீங்க வேணும்பா..
நான்… இங்கே… வந்திருக்க கூடாது..
சுமி..
நான் ..ஹாஸ்டல்ல…
திக்கி திக்கி முணங்கிக்கொண்டிருந்தவளின் பேச்சை மிகக்கஷ்டப்பட்டு கிரகித்தவனின் முகம் இரும்பாய் இறுகிக்கிடக்க உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் மெல்ல எழுந்தான் அவன்.
புத்தா..நீ மைத்தியோட அப்பாம்மாவுக்கு சொல்லிட்டாங்களான்னு பார்த்து நீயாவது போன் பண்ணி சொல்லிடு..இவ கண்ணை திறக்கும் போது அப்பாகிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்ல?
“போலீஸ். சொல்லிட்டாங்கம்மா…மைதிலியோட அப்பாவும் அம்மாவும் நாளைக்கு காலைலேயே வந்துடுவாங்க” என்றவன் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறி கண்களை சுழற்றி தேடினான்.
இன்ஸ்பெக்டர் சந்திரஸ்ரீயும் சப் இன்ஸ்பெக்டரும் நாலக உடன் தென்பட்டனர். இன்னும் இரண்டு இளைஞர்கள் கையில் கட்டுடன் இப்போது அவர்களோடு இணைந்திருந்தனர்.
அவர்களை நெருங்கினான்
அவனை கண்டதுமே சந்திர ஸ்ரீ..சொல்லிட்டீங்களா அந்த பொண்ணோட வீட்டுக்கு? என்று தான் கேட்டார்.
சொல்லிட்டேன் சார். அவங்க காலைல புறப்பட்டு ஈவ்னிங் வந்துடுவாங்க.. நாளை காலைல மைதிலியை டிஸ்சார்ஜ் பண்ணினதும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். அவங்க அங்கே வருவாங்க” என்றான் எல்லாருக்கும் பொதுவாக.
சரி தம்பி அந்த பொண்ணுக்கு ஓகேன்னா சரிதான். என்றவர் மீண்டும் போன்களை பிரித்துக்கொடுக்கும் வேளையில் இறங்கி விட்டார். நாலகவின் தோளில் தட்டியவன் “தம்பி உங்க பாட்ச்ல சுமின்னு ..அந்த பொண்ணு பேர் கூட..ஹ்ம்ம்..சுமித்ரா! அவளோட நம்பர் எடுக்க முடியுமா? மைதிலி அவ பேரை சொல்லி தான் ஏதோ முனகிட்டே இருக்கா! கண் விழிச்சதும் அவ கூட பேசினா ஆறுதலா இருக்கும் என்று கேட்டான்.
மே சிந்தக.. மறந்தே போயிட்டேன். மைத்திலியோட போனை யாரும் எடுக்கல. அது வயலுக்குள்ள விழுந்து கிடந்தது. இந்தாங்க..பாக் எல்லாம் ஒரே சக்தி.. அதுதான் பொழுதின் கவர்ல போட்டோம். இதையும் போனையும் அந்த பொண்ணுகிட்ட கொடுங்க என்றபடி பொறுப்பாய் சேறுபடிந்த பாக்கையும் போனையும் அவனிடம் ஒப்படைத்தார் சந்திரஸ்ரீ.
ஒரு கணம் அதிர்ந்து விட்டாலும் முகத்தில் அதிர்வை காண்பிக்காமல் கவனமாய் புன்னகைத்தபடி சின்னதொரு நன்றியோடு வாங்கிக்கொண்டவன் திரும்பி நடந்தான்.
நல்லவேளை அதில் இருந்த மாஜிஸ்ரேட்டின் நம்பருக்கு இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தால் கதை முடிந்திருக்கும்!. சமூக ஆர்வலனாகவும் திறமையான இளம் தொழிலதிபனாகவும் அவன் வளர்த்து வைத்திருந்த நன்மதிப்பினாலும் நம்பிக்கையாலும் இன்றைக்கு அவன் தப்பித்தான்!!!
மொபைலை ஆப் செய்து பாக்கட்டுக்குள் போட்டுக்கொண்டவன் கதவை தள்ளித்திறந்தான்.
மைதிலி விழித்திருந்தாள்
கதவைத்திறந்ததுமே அம்மா மேல் பதித்து கிடந்த அவளது விழிகள் இப்போது இவன் மேல் பாய்ந்து நிலைகொண்டன.
மீண்டும் சந்தித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறாளா? என்று கோபமாய் எண்ணிக்கொண்டவன் பார்வையாலேயே அவளை உறுத்து விழித்தபடி அவளை நெருங்கினான்.
அவளது முகமும் கண்களுமோ அவனால் மொழிபெயர்க்க முடியாத அளவு எண்ணற்ற உணர்வுகளை காண்பித்துக்கொண்டிருந்தது. இவைகள் தானே என்னை நாய் படாபாடுபடுத்துபவை என்ற எண்ணம் வர அவனது கோபம் தான் கூடியது.
அவளுக்கு வலிக்கிறதா? பேச முடிகிறதா? ஆறுதலாய் எதையாவது கேள்.. மனம் உந்தித்தள்ளியது ஆனால் அவன் எதையும் கேட்கவில்லை.
தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தை இறுகப்பற்றி ஏனடி என்னை இப்படி கொல்கிறாய் என்று கத்தத்தான் வாய் நுனி வரை வந்தது!
அவளின் முகத்தருகே இருந்த டேபிளில் இருந்த பாட்டிலை பட்டென்று சரித்து விட்டவன் பிறகு அதை நிமிர்த்தி வைப்பது போல குனிந்து “அப்பா அப்பான்னு சொல்லிட்டே இருந்தியே..நாளைக்கு உங்க அப்பா வந்து உன்னை கூட்டிட்டு போவார். அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்” என்றான்.
அவள் “எங்கப்பாவா?” என்று திக்கி வார்த்தைகளை கோர்த்தாள். அவள் முகத்தில் வந்து போன அதிர்ச்சியை அவனது மனம் கவனமாய் குறித்துக்கொண்டது.
நீங்களா போன்….பண்ணீங்க?
ஆமாம்!
நீங்க யார்னு …சொன்னீங்க?
சிந்தக்க பேசறேன்னு சொன்னேன். என் பெயரை சொன்னதுமே புரிஞ்சுக்கறதுக்கு நான் என்ன அவர் மருமகனா என்று அவன் குத்தலாய் திரும்ப கேட்டான்.
அவள் உதட்டை கடித்துக்கொண்டு ,கண்ணீர் தழும்ப சுவரைப்பார்க்க ஆரம்பிக்க கதவை நோக்கி திரும்பி ஒரெட்டு வைத்தவன் “அம்மா..நாளைக்கு காலைல இவ அப்பா வந்துடுவார்.. அதுவரை நீங்க இருப்பீங்க தானே..ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்க” என்று தனது மொழியில் அம்மாவுக்கு சொல்லிவிட்டு தாயார் ஒரே கவனமாக பிஸ்கட்டுக்களை பாலில் இட்டு மென்மையாக்கிக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டு பிறகு மீண்டும் திரும்பி வந்து அவளை நோக்கி குனிந்தான்.
நாளைக்கு காலைல உன் பிரன்ட் சுமியும் இன்னொரு பையனும் காரோட வந்து உன்னை கூட்டிட்டு போவாங்க. நானே பேராதெனிய வரை உன்னை கொண்டு போய் விட்டிருப்பேன். உனக்குத்தான் பிடிக்காதே.. அதுதான் நான் டிஸ்சார்ஜ் பண்ணி ஸ்டேஷன் ரோட் ஜன்க்ஷனுக்கு கூட்டிட்டு வர்றேன் நீங்க கூட்டிட்டு போங்கன்னு சொல்லிருக்கேன்.
அவளது முகம் பளிச்சென மலர்ந்ததை கவனித்தது போலவே காண்பிக்கவில்லை அவன்.
தாங்க்ஸ்.
ஹ்ம்ம்.. என்றபடி அவன் திரும்ப “என் போன்” என்றாள் அவள் அவசரமாக.
சாரி..உன் போனை யாரோ திருடிட்டு போய்ட்டாங்க… உன் பாக்கும் சேறாக்கிடக்கு..வீட்டுக்கு போய் வாஷ் பண்ணி கொண்டு வந்து தர்றேன்.
ஐயோ..சுமி கூட பேசணுமே… உங்க..போனை..கொஞ்சம்.. என்று அவள் தயங்கினாள்
சாரிம்மா.. இப்போ பேச முடியாது. அவ அவசரமா புறப்பட்டதால போன்ல சார்ஜ் இல்ல..காலைல வந்து கால் பண்றவரை தாக்கு பிடிக்கணும்னு ஆப் பண்ணி வைக்கிறதா உன் கிட்ட சொல்ல சொன்னா.
“ஓ”
ஹாஸ்டல் போய் அங்கே என்ன பண்றதா உத்தேசம்?
ரெண்டு வாரம் மெடிக்கல் லீவ் கிடைக்கும். நான் ஹாஸ்டல்லையே ரெஸ்ட் எடுப்பேன். அங்கேயே ஒரு ஹெல்த் செண்டர் இருக்கு..அங்கே செக் பண்ணிக்கலாம்..மீதியை பிரண்ட்ஸ் பார்த்துப்பாங்க..
என்னவோ உன்னிஷ்டம் என்பது போல தோள்களை குலுக்கியவன் “அம்மாகிட்ட உங்கப்பா வர்றதாவே சொல்லிக்க..அவங்க நீ ஹாஸ்டல் போற விஷயத்தை கேள்விப்பட்டா ஒத்துக்கவே மாட்டாங்க..உங்க வீட்டுக்கு நீ சொல்லாம இருக்கறதும் அவங்களுக்கு ஒத்துக்க முடியாதது. ” என்றான்
ஆன்ட்டிக்கு காலைல தெரிஞ்சிடாதா?
“அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் வீட்டுக்கு போக முன்னே உன் பிரண்ட்ஸ் உன்னை பார்க்க வருவானுங்க.அவங்க கிட்டயும் அதையே சொல்லிடு..அப்புறம் ஹாஸ்டல் போனதும் எதையாவது சொல்லி சமாளி. ஏன்னா அவங்க முன்னாடி தான் இன்ஸ்பெக்டர் கிட்ட அப்படி சொல்லிருக்கேன். உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு என்னை மாட்டி விட்டுறாதே.. அப்புறம் நான் மிஸ்டர் மாஜிஸ்ரேட்டுக்கு போன் பண்ண வேண்டியிருக்கும்” என்று அதட்டலாய் சொன்னவன் அன்னையின் ஆர்வப்பார்வையை கவனிக்காதவன் போல திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறினான்.
மனதிலோ எண்ணங்கள் புயலாய் அவனை சுழலடித்துக்கொண்டிருந்தன.