“சூழ்நிலைக்கைதியாக நின்றுகொண்டிருப்பது என்றால் என்னவென்று இன்றைக்குத்தான் நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அத்தோடு காதலி பிரிந்து செல்லும் வலியையும்! ஆம். அவள் என்னை விட்டு மொத்தமாய் விலகி விட்டாள். நான் கூட கண்ணீர் விட்டு அழுவேன் என்று எனக்கு தெரியவைக்க அவள் என் வாழ்க்கையில் வரவேண்டியிருந்தது போலும்!“
‘ஸ்குவீசீசுக்கு’ முன்னே நின்று கொண்டு வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக. ராஜீவின் சலனத்தையே கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை. அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தது.
என்ன ஆயிற்று மைதிலிக்கு?
இரண்டு வாரங்களாக சிந்தகவின் தலைக்குள் இந்தக்கேள்வி தான் குடைந்து கொண்டிருந்தது. நேரில் என்னவென்று கேட்டுவிடலாம் என்று அவன் தேடிப்போனபோது என்னமாதிரி ஓடி ஒளிந்தாள்!
சந்தோஷமாக இருப்பது போலவும் தெரியவில்லை..அன்றைக்கும் சதா கண்கலங்கியபடி தனிமையில் தான் உட்கார்ந்திருந்தாள். பிரச்சனையை அவனிடம் சொல்லாமல் தானே மனதுக்குள் வைத்துக்கொண்டு தானும் வருந்தி அவனையும் வருத்தி அவள் துன்புறுவதை அவன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டுமா?
போனால் போடி என்று தான் வீராப்பாக இருந்தவன் எனக்கானவள் என்று மனதில் வரித்து விட்டபிறகு அவள் கண்முன்னே கைநழுவிப்போவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
அவளை எப்படி நெருங்குவது என்று தவித்துக்கொண்டு இருந்தவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்
அவளுடைய பாடச் மாணவர்கள் மகா இல்லுப்பள்ளமவில் தங்களது காலம் முடிந்து செமஸ்டர் இறுதியை நெருங்கும் போது ஒரு மாபெரும் கண்காட்சியை நிகழ்த்துவார்கள். அந்த மாவட்டம் முழுவதும் தாங்கள் அந்த ஆறுமாதங்களாக பழகியவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் அந்த அழைப்பு அவனுடைய குடும்பத்தாருக்கும் நேற்று வந்து சேர்ந்திருந்தது. அவர்கள் யாரும் அங்கே செல்லாத நிலையில் தான் மட்டும் தனியாக போய் இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று அவன் முடிவு செய்திருந்தான்.
இன்றைய நாளை விட்டால் இனிமேல் அவளை பார்க்கும் சந்தர்ப்பமே அமையாது. அவளாக அவனை தேடி வரப்போவதில்லை என்று தான் அன்றைக்கு புரிந்து போனதே. இன்றைக்கு சொல்லாவிட்டால் அவனது காதலுக்கு என்றுமே சமாதி தான்.எப்படியாவது இன்றைக்கு அவளிடம் சொல்லிவிடவேண்டும்! அவளுக்கு நான் நீ நினைப்பது போலில்லை என்று புரியவைத்து விடவேண்டும்! மனதில் வெறிபோலவே கொதித்துக்கொண்டிருந்தது அந்த எண்ணம்!
“மச்சா..ரெண்டு பேரும் தானே போகிறோம். ஒரே பைக்கில் போனால் என்ன?” என்று அலுத்தபடி தன்னுடைய பைக்கை எடுத்து வந்து உறுமலுடன் அருகில் நிறுத்தினான் ராஜீவ்.
“ரெடியா போலாமா?” அவனது குரல் காதில் விழுந்தது போலவே காண்பிக்கவில்லை சிந்தக.
“டேய் நீ அங்கே போவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது நானும் அங்கே வரவேண்டும் என்று அடம் பிடிக்கிறாயே என்னடா நியாயம்?” ராஜீவ் விடாமல் புலம்பினான்.
“ஒரு வேளை அவளை நான் கடத்திக்கொண்டு வர நேரிட்டால் எனக்கு உதவி செய்ய நீ இல்லாமலா?” நமுட்டு சிரிப்புடன் சொன்னவன் பைக்கை ஆக்சிலரேட்டிக்கொண்டு சீறிப்பறந்தான்.
“என்னது கடத்தலா? டேய்!!!” என்று அலறியபடி அவனை துரத்திக்கொண்டு பறந்தான் ராஜீவ்.
ஆடிட்டோரியம் அமைந்துள்ள திடலில் குட்டிக்குட்டி குடில்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சுற்றிலும் விவசாயக்குடும்பங்களே இருப்பதனால் நவீன விவசாய உத்திகள் , பெறுமதி சேர்மானம் , கட்டுமானங்கள், வெகு சமீபத்தில் அறிமுகமான தொழிநுட்பங்கள் பற்றிய விளக்கங்கள், சூழல் பாதுகாப்பு போன்ற பல பிரிவுகளை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் சிந்தகவின் கவனம் எங்கேயும் செல்லவில்லை.
அவனுக்கு அங்கே பல மாணவர்களை தெரிந்திருந்ததால் அவர்கள் புன்னகைத்ததும் அவர்கள் நின்றுகொண்டிருந்த குடிலுக்கு சென்று மரியாதை நிமித்தம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் கண்களால் தன் பார்க்க வேண்டியவளை தேடிக்கொண்டுதான் அவன் அங்கே நடந்து கொண்டிருந்தான். அன்றைக்கு தான் அங்கே மாணவிகள் சிங்கள முறையில் ஓசிரி சேலையும் ஆண்கள் முழு ப்ரொபெஷனலாகவும் formal உடையலங்காரத்தில் இருக்க எதிர்பாராத விதமாய் இத்தனை பெண்களோடு பேசக்கிடைத்த வாய்ப்பில் கிறங்கி அவன் போட்ட குண்டையும் மறந்து ராஜீவ் குடில்களை சுற்றி வந்தான்.
பெறுமதி சேர்மானம் பற்றிய பகுதியே கலகலப்பாக இருந்தது பாலில் செய்யப்படும் இனிப்புவகைகளை மக்களுக்கு செய்முறை மூலமே விளக்கியும் சாப்பிட்டுக்கொண்டும் மாணவர்களும் பார்க்க வந்த பார்வையாளர்களும் உற்சாகமாக உலாவிக்கொண்டிருந்தனர்.
கண்களால் அவர்களை துளாவியபடியே நடந்துகொண்டிருந்தவனின் கண்ணில் ஒருவழியாய் கையில் ஒரு மார்க்கர் மற்றும் போர்ட் சகிதம் பழச்சாறுகளுக்கு சேர்க்க வேண்டிய இயற்கை நிறமூட்டிகள்பற்றி தன்னுடைய மழலை சிங்களத்தில் விளக்கிக்கொண்டிருந்த மைதிலி பட்டாள்!
இடுப்பில் கொசுவம் வைத்து அவர்கள் அணிவது போல அல்லாமல் தமிழ் முறையில் சேலை அணிந்திருந்தாள். பழுப்பு நிற உடலில் கருநீலக்கரையிட்ட சேலைக்கு கருநீல மேற்சட்டை அம்சமாய் பொருந்தியது. வழக்கம் போலவே கருநீலப்பொட்டு, கருநீலத்தில் காதணிகள் அணிந்து அந்த சுற்றுப்புறத்தையே வெளிச்சமாக்கி கொண்டிருந்தாள் அவள்.
அவளை சுற்றியிருந்த நான்கு குடில்களிலும் விளக்கம் கேட்பது போல நின்று கொண்டு அவளையே பார்க்க ஆரம்பித்தான் அவன். முதலாவது குடிலில் சில நிமிடங்களுக்குலேயே அவள் பார்வை இவனில் பட்டுவிட்டது. குப்பென மலர்ந்த முகம், பிறகு தடுமாற்றம், படபடப்பு, சோகம் பிறகு அவனின் பிடிவாதமான பார்வைக்கு பதிலான தலைகுனிதல் எதுவுமே அவன் கண்ணுக்கு தப்பவில்லை.
அரைமணிநேரம் குடில்களில் சுற்றிசுற்றி அவளையே பார்த்த பின் நேராக அவளது இடத்தை நோக்கி போனான். அவனோடு சேர்த்து இன்னும் மூன்று பார்வையாளர்கள் நின்றிருக்க கண்களையே பார்த்துக்கொண்டிருந்த அவனை தாண்டி மூவருக்கும் சொல்ல நினைத்ததை சொல்லி முடிக்கும் முன் திணறித்தான் போனாள் அவள். நண்பிகள் யாரையாவது உதவிக்கு அழைப்பது போல தேடும் பார்வை வேறு.! பாவம் என்று விழிகளை விலக்க நினைத்தவன் அவள் நண்பிகளை தேடுவது போல அங்கும் இங்கும் பார்க்க வேண்டுமென்றே சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.
அது என்று அவள் வாய்திறக்க அந்த இடம் திடீரென பரபரப்பானதில் அவளும் பேச்சை நிறுத்தி திரும்பிப்பார்த்தாள்.
சுழல் போல பரவி பெரிதாகிகொண்டே வந்தது சத்தம். சிலர் பரபரப்புடன் தகவல் பரப்பியபடி ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.முன்புறம் ஆரவாரச்சத்தம் வேறு அதிகரித்துக்கொண்டே வந்தது.
“ரேடியோ இல்லன்னா டீவி அருகிருந்தால் போடுங்க…அறிவிச்சுட்டாங்க!!!”
சட்டென விஷயம் புரிந்து போனது சிந்தகவுக்கு! இந்த வாரம் முழுவதும் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அறிவிப்பாச்சே. இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்? தயக்கமாய் மைதிலியை ஏறிட்டவன் இந்த கணம் தன்னை இங்கே நிறுத்திய விதியை மனதார வெறுத்தான்.
யாரோ தங்களின் மொபைலில் ஏதோ ஒரு சானலை அவசரமாக தேடிப்பிடித்தார்கள்.
“கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் நீடித்த இனப்பிரச்சனையில் வெற்றிகரமாக அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. இது இலங்கை மக்கள் அனைவருக்குமான நற்செய்தி.” என்பதை ஒத்த வார்த்தைகளுடன் எல்லா ரேடியோ சானல்களும் அலறின.
சற்றுநேரம் ஓவென்ற சத்தத்தோடு மக்கள் அருகில் இருந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து மகிழ அந்த இடமே பரபரப்பாய் ஆகியிருந்தது.
மூவின இன மாணவர்களும் இருக்கும் இடத்தில் அதுவும் இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் இருக்கும் இடத்தில் யுத்த வெற்றியை இப்படிக்கொண்டாடுவது மனிதாபிமானம் ஆகுமா? இந்த மாணவர்களாவது யோசித்திருக்கலாம்! வருத்தமாய் எண்ணியவனுக்கு தன்னிடம் பெரிய புன்னகையோடு கைலாகு கொடுத்து வாழ்த்துபவர்களுக்கு தானும் கைலாகு கொடுத்து புன்னகைத்து மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அவனை அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாளே என்ன உணர்வாள் என்ற புரிதலில் இயலாமைதான் அவனுக்குள் நிரம்பியிருந்தது.
முகத்தில் எண்ணற்ற உணர்வுகளை காண்பித்த முகத்தோடு. உதடுகள் நடுங்க ஒவ்வொரு அடியாய் பின்னே நகர்ந்து கொண்டிருந்தவளை கைக்குள் எடுத்து ஆறுதலாய் தட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் அவள் புறம் நகர்ந்தவன் அவளின் கவனம் அவளுக்கு இவ்வளவு நெருக்கமாய் சிந்தக வந்தும் அவனிடம் இல்லை என்று புரிந்ததும் ஒருகணம் துணுக்குற்றான். அவள் பார்வை அங்கிருந்த இன்னொரு தமிழ்ப்பெண்ணை தொட்டுக்கொண்டிருந்தது. சில கணங்கள் தயக்கமாய் நின்று கொண்டிருந்தவள் பிறகு வேகமாய் ஓடி அந்த பெண்ணின் அருகில் நின்று கொள்ள சற்று நேரத்திலேயே அவர்கள் மூவரானார்கள்.
அவனுக்கு ஏதோ புரிவதை போலிருந்தது.
கண்ணாடி உடைந்தே தான் விட்டதா?
யாரோ வெடிகளையும் வாணங்களையும் எங்கிருந்தோ அதற்குள் வாங்கி வைத்திருக்க மக்களும் மாணவர்களும் சேர்ந்து அதை வெடிக்க ஆரம்பித்தனர்..கூச்சலும் சத்தமும் கொண்டாட்டமுமாக இருக்க இப்போது அந்த இருபெண்களும் இல்லாமல் மைதிலி மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.
“செய்தி தணிக்கைகள், பக்கச்சார்பான பத்திரிகைகள், எதிர்த்தரப்பை அவர் சார் மக்களுக்கு கொடூரர்களாக உருவேற்றி கொம்பு சீவும் அரசியல்வாதிகள் இத்தனைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு புரிந்துணர்வு எப்படி இருக்கும்?”
எல்லோருமே இங்கே நல்லவர்கள் தான். ஆனால் துரதிஷ்டவசமாய் அவர்கள் நிற்கும் இடம் பார்வையை தீர்மானித்து விடுகிறது.
“பாதிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்களையும் அவர்களின் உடைமைகள் ஊர்களையும் எந்த கணக்கில் சேர்ப்பது? ஒரு தரப்பு வென்றதும் மைதானத்தை சரி செய்து அடுத்த செட் ஆட்டத்துக்காய் தயாராக இது ஏதேனும் கால்பந்தாட்ட திடலா என்ன? எது எப்படியோ இந்தப்பிரச்சனை அவன் காதலை பலி கேட்டு விட்டதே..”வருத்தமாய் ஒரு பெருமூச்சு விட்டவன் மறுகணமே தலை உதறினான். முடியவே முடியாது. நான் அவளை விட்டுத்தர மாட்டேன். எங்களில் நல்லவர்களும் உங்களை புரிந்து கொண்டவர்கள் கூட இருக்கிறோம் என்று நான் நிரூபித்தே ஆவேன்.”
வெடிகளுக்கிடையே மாணவர்களின் சத்தம் அதிகமாக அவன் கவனம் அங்கே திரும்பியது.
ஒரு மாணவன் கொஞ்சம் தூரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்த செந்தூரனை கையை பற்றி இழுத்து வந்து கொண்டிருந்தான்.
பிறகு வெடிச்சரம் ஒன்றை பற்றவைக்குமாறு அவனை சற்று அதட்டலாகவே சொன்னான். தயங்கி தயங்கி அவன் பற்றவைக்க ஓவென்ற சத்தம் சுற்றிலும் மாணவர்களிடையே எழுந்தது.
இது என்னவகை நாகரீகம்!!! இதை தான் கல்வி வளர்த்தேடுகிறதா? தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் லேசான அவமானச்சிவப்புடன் நின்ற அந்த இளைஞனை பார்க்க சிந்தகவுக்கு பரிதாபமாய் இருந்தது. அந்த இடத்தில் தன்னை கையாலாகாதவனாய் உணர்ந்தான் அவன்.
மைதிலியை திரும்பிப்பார்த்தான். கண்களில் அழுகை பொங்கியிருக்க கூட்டத்துக்கு பயந்து அவசரமாய் அவள் விலகி செல்வது புரிந்தது; பின் தொடர்ந்தான்.
ஆடிட்டோரியத்துக்கு இடப்பக்கமாய் சத்தங்கள் இல்லாமல் பொதுமக்களும் இல்லாமல் வெறிச்சோடியிருந்த பார்க்கிங் பக்கமாய் சென்று கண்களை சேலைத்தலைப்பால் துடைத்து அழுகையின் தடயங்களை அவள் அழிக்க முற்பட்டுக்கொண்டிருக்க வேகமாய் ஓடி அவள் கையை பற்றினான் அவன்.
மைத்திம்மா…..
அவ்வளது தான் கையை உதறிக்கொண்டவள் அவனை முறைத்தாள்!
“நடந்ததை நினைத்து வருந்தாதே மைதிலி. இது நம் நாட்டின் சாபக்கேடு. ஒரு தரப்பின் இழப்பில் இன்னொரு தரப்பு என்று சந்தோஷப்பட ஆரம்பித்தோமோ அன்று பிடித்த நோய்!”
அவள் தலை நிமிரவே இல்லை..
“இந்த மக்கள் எளியவர்கள் நல்லவர்கள். அவர்களை பொறுத்தவரை நாட்டுக்கு வந்த கஷ்டம் இன்றோடு போய்விட்டது. அதை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதற்கு பின்னால் இருக்கும் கரும்புள்ளிகள் தெரிவிக்கப்படுவதேயில்லை. அது அவர்கள் தவறும் இல்லை.”
“ஹ!!!” கிண்டலாக இழுத்தவளை சற்று பயத்துடனே தான் பார்த்தான் அவன். ஆவேசப்படும் இந்த மைதிலி அவனுக்கு புதியவள்.
“உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள். எல்லோரும் அப்படித்தானா? அவர்களுக்கு எதுவுமே தெரியாதா?”
அவளது கேள்விக்கு அவனிடம் பதில் இருக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி கேட்டான். “உன்னை சேர்ந்தவர்கள் தவறு செய்வார்கள் என்று நூறு வீதம் நம்புவாயா நீ?
“இல்லைதான்..” சிறிது தயங்கினாலும் ஒத்துக்கொண்டாள் அவள்
“அந்த அத்திபாரத்தில் கட்டப்பட்ட கல்லறை தான் இவ்வளவு பிரச்சனைகளும். இந்த பிரச்சனை நம்மிடையே வரவேண்டாம் மைதிலி . இனிமேல் உன்னை பார்க்க முடியாது என்பதால் தான் இப்போதே கேட்கிறேன் மைதிலி. இல்லாவிட்டால் நான் இதை பற்றி இன்று பேசியிருக்க மாட்டேன். நம்மை பற்றி பேசலாமா?”
அவள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தாள்
“நான் உன்னிடம் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தும் அன்றைக்கு ஏன் ஓடினாய் மைதிலி?”
“எனக்கு உங்களிடம் பேச என்ன இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு வேகமாய் திரும்பி நடக்க முயன்றாள் அவள். கையை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன் அவர்கள் இருந்த பக்கமாய் மீண்டும் மக்களின் சத்தம் வர ஆரம்பிக்கவே சுற்றும் முற்றும் பார்த்தான். இந்த பார்க்கிங் வழியாகவே யாரும் காணாமல் வெளியே போய் விடலாம். இப்போது இவளை விட்டால் பிடிக்க முடியாது என்று அவள் முகமே சொல்லிக்கொண்டிருந்தது.
தாமதிக்காமல் அவளது கையை பற்றி இழுத்துக்கொண்டு தன் வண்டிக்கருகில் போனான் சிந்தக.
“வண்டியில் ஏறு”
“முடியாது” கையை விடுவிக்க திமிறினாள் அவள்
“நீ ஏறாவிட்டால் உன்னை வலுக்கட்டாயமாக கொண்டு போக என்னால் இயலும்.பேச மட்டும் தன் கூப்பிடுகிறேன் மைத்தி நான் உனக்கு என்னை புரியவைக்கவே வேண்டும்! நம் நேசத்தின் மீது ஆணை என்னோடு வா.”
ஒரு கணம் உதட்டை கடித்தவள் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்
யாரும் காணமுன்னே வண்டி அவ்விடத்தில் இருந்து வெளியேறி பிரதான வீதியில் ஏறியது. ஆச்சர்யம் அதற்குள் செய்தி பரவியிருக்க வேண்டும். வீதியெங்கும் வெடிச்சத்தம் காதைப்பிளந்தது.
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் வண்டியை நிறுத்தி அவளது பொட்டினை உரித்தெடுத்தவன் அவளது கண்களை பார்க்காமல் வண்டியை மீண்டும் கிளப்பினான். தான் செய்த செயல் அவனுக்கு வருத்தத்தை தந்தாலும் வெறிபிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு சின்ன தவறு கூட அவளுக்கு ஆபத்தாக முடியலாம். அவளது அடையாளம் வெளியே தெரியாமல் இருப்பது தான் நல்லது என்று தன்னை சமாதானம் செய்தான்.
ஆனால் அவன் எதிர்பார்க்காதது அவனுடைய விளையாட்டு தோழர் குழு வெடிச்சரங்களோடு வண்டியை மறைத்ததை!
“மச்சான்! நியூஸ் கேள்விப்பட்டியா?” என்று உற்சாகமாக கேட்டவர்கள் அவன் தலையசைத்ததும் ஹை பைவ் கொடுத்தார்கள்…லேசான ஆல்ககோல் வாசம் வேறு வந்துகொண்டிருந்தது. கொண்டாட்டம் என்றால் குடி இல்லாமலா? வம்பு வேண்டாமென்று கைகொடுத்து மகிழ்வது போல காண்பித்துக்கொண்டவன் பின்னாலிருப்பவள் பார்த்துக்கொண்டிருப்பாளே என்று எண்ணி ஒரு கணம் உதட்டை கடித்தான்.
“சாக்லேட் எடுத்துக்கடா மச்சி!”
“ஷா கலக்கிறீங்கடா” என்று சொன்னபடி அவளுக்கும் சேர்த்து ரெண்டு எடுத்துக்கொண்டவன் “தங்கச்சி எடுத்துக்கோங்க” என்று அவளிடமே நீட்டுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதை விட அவள் முறைத்தபடியே எனக்கு வேண்டாம் என்று தலையசைத்ததை எதிர்பார்க்கவேயில்லை.
“மைத்திம்மா” என்று கீழ்க்குரலில் அழைத்து அவளுக்கு புரியவைக்க பார்த்தால் அவளோ சாக்லேட் கொடுத்தவனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருந்தாள்!
“ஏய் என்ன? திமிரா? சாக்லேட் எடுக்கபோகிறாயா இல்லையா?”
ஒருவன் சத்தமாக சொல்லியபடியே மைதிலியை நெருங்க அவள் “மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாய் தமிழில் சொன்னாள். பிறகு நீ தானே வலுக்கட்டாயமாய் என்னை அழைத்து வந்தாய் நீயே அனுபவி என்பதை போல அவனிடம் பார்வை வேறு!
அவர்கள் வேண்டுமென்றே அவர்களை அவள் அவமரியாதை செய்வதாய் எடுத்துக்கொண்டு அங்கே குட்டிக்கலவரத்தையே உண்டுபண்ண தொடங்க மைத்தியை நோக்கி கை நீட்டிக்கொண்டு வந்தவனை வேகமாய் கீழே தள்ளி விட்டான் சிந்தக
“வேணாம் சுசித!!!! பெண்களிடம் உன் வீரத்தை காட்டதே!!!” என்று அவனிடம் உறுமிவிட்டு தன்னுடைய கோபமும் சேர்ந்து அங்கே நிலைமையை மோசமாக்குவதை புரிந்து கொண்டு அவர்கள் எதிர்பாராதவிதமாய் ஆக்சிலரேட்டிக்கொண்டு சீறிப்பறந்தான்.
அவர்கள் பின்னாலேயே சத்தமிடுவது காதில் கேட்டது. அவனுக்கு தெரிந்தவர்கள் ஆதலால் அவ்வளவு பிரச்சனை ஆகாது என்று நம்பிக்கை இருந்தாலும் இன்றையநாளில் எதையுமே எதிர்வு கூறமுடியாதே, இந்தப்பக்கமாக இவளை திரும்ப அழைத்து வரவே முடியாது! காதலை சொல்ல இன்றைய நாளை தேர்ந்தெடுத்த அவனது மடத்தனத்தை அவனாலேயே மன்னிக்க இயலவில்லை. வேறே வழியில் இன்னொரு நாளைக்கு முயற்சி செய்திருக்கலாம். அவள் விலகிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்த பதற்றம் வேறு..வேறெதையும் யோசிக்காமல் இழுத்து வந்துவிட்டான்.
அவசரப்பட்டுவிட்டேனோ?
தன்னுடைய தொழிற்சாலையை அவர்கள் தேடி வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில் வளைவுகள் ஒழுங்கைகளுக்குள் எல்லாம் பைக்கை ஓட்டிக்கொண்டே சென்றவன் கடைசியல் காட்டோரமாய் இருந்த தனியான ஒரு வயல்நிலத்தில் பைக்கை நிறுத்தினான்.
அவ்வளவு கோபத்தை முகத்தில் காட்டினாலும் ஒரு வரி கூடப்பேசாமல் அமுக்கமாக நின்றவளை பார்த்து இன்னும் கோபம் தான் வந்தது.
“ஏண்டி..அவங்க தான் இத்தனை பேர் நிக்கறாங்கல்ல?..அந்த சாக்லேட்ட எடுத்து தொலைச்சாத்தான் என்ன? முடியாதுன்னு சொல்ற? குடிச்சிட்டு வேற நிக்கறாங்கன்னு புரியல? உன்னை என் ஒருத்தனால மட்டும் காப்பாத்தியிருக்க முடியுமா? மனசில என்ன புரட்சி வீராங்கனைன்னு நினைப்பா?”
“ஏன் அப்படின்னா நானும் அந்த சாக்லேட்டை சாப்பிட்டு எங்க ஊர் அழிச்சு போச்சுன்னு சந்தோசம் கொண்டாடியிருக்கணுமா?”
“அறிவு இருக்கா உனக்கு? நான் மட்டும் என்ன சந்தோசம் கொண்டாடிட்டா இருக்கேன்? நான் மட்டுமா? பாதிக்கு பாதி அப்படித்தான் இருப்பாங்க! அத்தனை பேர் இருக்கற இடத்துல நம்ம உணர்வுகளை மறைச்சா என்ன தப்பு?”
“நீ பேசுவ தானே நீயும் அவங்களை சேர்ந்தவன் தானே..உங்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியுமா?”
“லூசு போல பேசாதே மைத்தி நான் அப்படிப்பட்டவன் இல்ல..”
“பார்த்தேனே..செந்தூரன் கையாலேயே பிடிச்சு வெடி கொழுத்த வச்சீங்களே..ஒருத்தர் தடுத்தீங்களா? அப்படியென்ன அல்ப சந்தோசம் உங்களுக்கு?”
“மைத்திம்மா..புரியுதுடா.. இந்தப்பக்கம் இருக்கவங்களுக்கு இங்கே கிடைக்கற செய்திகள் விஷயங்கள் மட்டும் தான் தெரியும்..உண்மை செய்திகள் தெரியாது. அவங்களும் இழப்பை அனுபவிச்சிருக்காங்கதானே..உங்களோடு ஒப்பிடும் போது குறைவுதான் ஆனால் உங்கள் பக்கமே இவர்களுக்கு தெரியாதே.ஆகவே எதுவுமே அவர்களுடைய தவறில்லை. எல்லாம் மாறி அவர்களும் புரிந்து கொள்ள காலம் எடுக்கும்”
இனி என்ன புரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது? இப்போது எதற்காக என்னை இங்கே கொண்டு வந்தீர்கள்?
அவளது முகமும் கண்களும் காட்டிய விலகல் கண்களை அறைந்தது.
ஏன் கொண்டு வந்தேன்…என்ற கேள்வி அவனது மனதிலும் எழுந்தது..
“நான் உன்னை மனதார காதலித்தேன் மைதிலி.. இன மதம் கடந்து மனிதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து நாங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வோம் என்று நினைத்தென்.. நீயும் என்னை காதலித்தாய் என்று நினைத்தேன்..ஆனால்….”
அவள் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்து கொள்ள லேசாய் அவனுக்குள் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது
“ஏன் மைத்தி உனக்கு என் மேல் எந்த வித எண்ணமுமே வரவில்லையா?”
அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நமக்குள்ளே சரி வராது சிந்தக.. “
“அதுதான் ஏன்? என்மேல் நம்பிக்கை இல்லையா? எங்கே இருந்தாலும் நீ நீயாகவே இருக்க நான் உயிரையும் கொடுப்பேனடி.. “
“இப்போ ஒரு அரை மணிநேரம் சாம்பிளே போதும் சிந்தக. உங்கள் ஊரில் நான் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டுமானால் என் பொட்டை எடுத்து, சாக்லேட் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி முகம் காட்டவேண்டியிருந்தது. அதாவது நான் உங்களில் ஒருத்தியாக உருமாற வேண்டியிருந்தது. இதன் பிறகும் நான் நானாக இங்கே வாழ முடியும் என்று எப்படி சொல்கிறீர்கள்? அதே போல நீங்களும் நிச்சயமாக யாழ்ப்பாணம் வர முடியாது. எனக்கு என் அப்பாவை தெரியும். இது சரி வரவே வராது. “
“மைதிலி அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்மா..இப்போது தானே நிலைமை இப்படியிருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் நிலைமை நிறைய மாறிவிடும். வேண்டுமானால் நாங்கள் கொழும்பு போய்விடலாம். உன் பெற்றோரை உன்னிடம் சேர்ப்பது என் பொறுப்பு!” எவனிடம் என்றும் கெஞ்சி அறியாதவன் அன்றைக்கு தன் காதலுக்காக இறைஞ்சலாய் கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்னை விட்டு விடுங்கள் சிந்தக.. நான் உங்களை லவ் பண்ணினேன்..முதல் நாளில் இருந்து இது நடக்க கூடாது என்று எனக்கு தெரிந்தே இருந்தது.ஆனாலும் மனதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்போது நான் முடிவெடுத்து விட்டேன். எல்லோரையும் வருத்திக்கொண்டு வந்திருக்கும் இந்த காதல் எங்களுக்கு வேண்டாம்.”
அவனுக்குள் கோபம் கோபமாய் வந்தது..
நீ தகுதிகளை காரணம் சொல்லியிருந்தால் கூட பொறுத்துகொண்டிருப்பேனடி.. என் பங்கு அணுவளவு கூட இல்லாத என் பிறப்பை காரணம் காட்டி பிரிந்து செல்வதை என்னால் தாங்கவே முடியவில்லை. “
“நான் இப்போ நினைச்சாலும் இப்படியே உன்னை கொண்டுபோய் எங்காவது கல்யாணம் பண்ணிக்க முடியும். நீயும் என்னை எதிர்க்க மாட்டேன்னும் தெரியும். ஆனா எனக்கும் ஈகோ இருக்குடி. எங்களை குற்றம் சொல்றீங்களே, ஏன் உங்கள் பக்கம் எந்த தவறுமே இருந்தது இல்லையா? என்னாலும் உனக்கு சமமான லிஸ்ட் போடமுடியும்!ஆனால் நான் மனுஷனை மனுஷனாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவன். உன்னைப்போல அல்ல! உண்மையில் துவேசம் உனக்குத்தானடி!!! நன்றாக யோசி!”
“எங்கள் நிலைமையில் இருந்து பார்த்தால் மட்டுமே உங்களுக்கு என் மனம் புரியும்!” அவள் குரல் நலிந்திருந்தது.
“புரியவே வேணாம்டி..நீ போ..எங்கே வேணுமானாலும் போ..ஆனால் எப்போதுமே இது உன் மனதில் நிலைத்து இருக்கும். இதை மறக்க முடிந்தால் நீ ஒரு மனுஷியே இல்லை.” என்று சொல்லியபடி அவளை பிடித்திழுத்தவன் முரட்டுத்தனமாய் அவள் இதழ்களை சிறையெடுத்தான். எதிர்பாராமல் நடந்ததில் அதிர்ந்து பின் அவன் கைகளில் நெகிழ அதை உணர்ந்தோ என்னவோ அவள் கண்ணீர் கோடிறங்கி அவன் கன்னத்தை நனைத்தது.
பட்டென அவளை உதறி விடுவித்தவன்..”போடி..ஆனா நீயா என்னை தேடி வருவ…இப்போ புரிஞ்சுக்காம பேசறல்ல..கொஞ்சம் உலகம் புரிஞ்சதும் என்னை தேடி வருவே..நீ வரும் வரை நான் உன் பக்கமே திரும்ப மாட்டேன்.” என்று சொல்லியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
கண்ணீரோடு வந்து வண்டியில் அமர்ந்து கொண்டாள் அவள்..
இருந்த குறுக்குப்பாதை வழியெல்லாம் வண்டியோட்டி அவளை ஹாஸ்டலில் கொண்டு வந்து அவன் விடும்வரை ஒரு வார்த்தையும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. பைக்கில் இறங்கி அவள் ஓட்டமாய் திரும்பிப்பார்க்காமலே ஹாஸ்டலுக்குள் ஓட அவளின் பின்னாலேயே அசைந்த சேலைத் தலைப்பு மட்டும் இன்றைக்கு அவளுக்கு பதிலாக தலையசைத்து அவனுக்கு விடை தந்தது போலிருந்தது.
ஆண்மகனுக்கு கண்ணீர் வராதா என்ன? இயலாமை உணர்வுடன் கண்ணீரும் சேர்ந்து பொங்கி வந்தது. அங்கே நில்லாமல் விருட்டென பைக்கை கிளம்பிச்சென்றான் சிந்தக