“வேண்டும்..வேண்டாம் என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த நான் அவனுக்கு நான் வேண்டுமா வேண்டாமா என்பதை எண்ணிப்பார்க்க மறந்து விட்டேன் போலிருக்கிறது. நாங்கள் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போகும் நாட்களிலெல்லாம் அவன் தலைமறைவாகிக்கொண்டே இருந்ததில் எங்கள் farm family ப்ராஜெக்டில் என்னைத்தவிர மீதிப்பேரின் பங்கு ஏறக்குறைய நிறைவு பெற்றிருந்தது. அவன் ஏன் என்மீது இத்தனை கோபமாக இருக்கிறான் என்பதைத்தான் என்னால் ஊகிக்கவே முடியவில்லை!”
மரவள்ளிக்கிழங்குகளை மஞ்சள் உப்பிட்டு அவித்து துண்டுகளாக்கி வெறுமனே வெங்காயம் , சிவப்பு மிளகாய் வைத்தரைத்த ‘கட்ட’ சம்பலுடன் மூன்று பிளேட்களை எடுத்துக்கொண்டு வந்து ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்தார் மஞ்சு ஆன்ட்டி. அன்றைக்கு ஐவரில் மூவர் மட்டுமே அங்கே வந்திருந்தனர்.
கிழங்கை சம்பலில் புரட்டி நாவில் அறைந்த காரத்துடன் சாப்பிட்டுகொண்டிருக்கையிலே தென்னந்தோட்டத்தில் சமந்த அங்கிளைக்கண்டதும் ஆண்கள் இருவரும் கையில் பிளேட்டை எடுத்துக்கொண்டு பின்புறமாய் அவரை நோக்கி செல்ல தானும் எழுந்து கொடியில் காயப்போட வேண்டிய உடைகளோடு வந்த ஆன்ட்டிக்கு அருகில் போனாள் மைதிலி.
“இன்னும் ஒரு மாதத்தோடு உங்களையெல்லாம் பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது மகள். “ சொன்னவர் வெறும் வாய்வார்த்தைக்காக சொல்லவில்லை என்பதை நெகிழ்ந்த அவரது உடல் மொழியே சொல்லிக்கொண்டிருந்தது.
“என்ன ஆண்ட்டி..நான் படிச்சு முடிக்கும் வரை ஜூனியர்சை பார்க்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வருடமும் இங்கே வந்துவிடுவேன்.. அதன் பிறகும் உங்களை பார்க்கவென்றே வருவேன்!”
“போ மகளே..என்னை சமாதானம் செய்யாதே..”
“நீங்க வேணும்னா பாருங்க ஆன்ட்டி.. கொஞ்ச நாள்லயே பிரச்சனை எல்லாம் தீர்ந்து A 9 பாதை மறுபடி திறக்கும். நீங்க யாழ்ப்பாணம் பார்க்க எங்க வீட்டுக்கு வருவீங்க! இல்ல..நான் எங்கம்மா அப்பாவை கூட்டிட்டு வருவேன்.”
“உன் வாயில் சர்க்கரை தான் போடணும்!” என்று சிரித்தபடி சாப்பிட்டு முடித்த அவளுடைய பிளேட்டை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு வீட்டுக்குள் போனவரை பின் தொடர்ந்தாள் மைதிலி.
மனிதர்களில் தான் எத்தனை வகைகள்!!! பல்கலைக்கழக மாணவர்களின் செயன்முறைக்கற்கைக்கு தகவல்களை பகிர்ந்து உதவி செய்யும் படி மட்டும் தான் நிர்வாகம் இவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அந்த உதவியோடு கூடவே இப்படியெல்லாம் பாசமாய் பார்த்துக்கொள்ள சொல்லி இவர்களுக்கு யார் சொன்னது? என்னதான் அவ்வப்போது ஏதாவது வாங்கிப்போனாலும் சொந்த உறவினர்களை போல வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அவர்களுக்காகவே எளிமையாய் எதையாவது செய்து வைத்துக்கொண்டு காத்திருப்பதெல்லாம்….இந்த அன்புக்கு கைம்மாறு தான் ஏது!!
“என்ன மகள் பலமான யோசனை? எல்லோரும் கேட்டுக்கேட்டு எழுதிக்கொள்கிறார்களே..நீ எதையும் செய்யவில்லையா..உனக்கு எதுவும் தெரிந்து கொள்ள தேவையில்லையா?”
“அது ஒரு சின்ன பிரச்சனை ஆன்ட்டி…எனக்கு ஒதுக்கப்பட்டது சிந்தகவின் பிசினஸ் பற்றிய ஆய்வு தான். ஆனால் அவரை ஒவ்வொரு நாளும் சந்தித்து விடலாம் என்று நானும் தேடி வருகிறேன், அவரை சந்திக்கவே முடியவில்லை..அவரிடம் பேசாமல் நான் எழுத முடியாது ஆன்ட்டி.அடுத்த மாசமே சப்மிட் செய்தாகவேண்டும்.. கேட்டால் அவரை தொல்லை செய்வது போலாகுமோ என்று நான் தயங்கிக்கொண்டிருக்கிறேன்..” தயங்கி தயங்கி தன் பிரச்னையை சொல்லியே விட்டாள் மைத்தி.
“என்னம்மா நீ! முதலிலேயே சொல்ல வேண்டியது தானே” என்று கடிந்து கொண்டவர் தான் மகனிடம் பேசுவதாகவும் அந்த வாரம் வெள்ளிக்கிழமை வழக்கம் போல அவள் வரும் போது அவனை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் உறுதி அளித்தார் மஞ்சு ஆன்ட்டி.
அத்தோடு அந்த பிரச்சனையை மறந்து விட்டவள் அன்றிரவு சாப்பிட்டு விட்டு வரும் போது தன்னை கைப்பேசியில் அழைத்த புதிய இலக்கம் அவன் தானென கொஞ்சமும் ஊகிக்கவில்லை!
அவள் ஹலோ சொன்னதுமே
மம சிந்தக கத்தாகரன்னே…என்று காதுகளில் வந்து அதிர்ந்த குரலில் ஒருகணம் உறைந்து தான் போய் விட்டவள் வேக வேகமாய் அந்த இருளிலும் கோவிலைத்தேடி ஓடி தூணொன்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“என்னிடம் பேசவேணும் என்றால் முன்பே சொல்வதற்கு என்ன? கடைசி நேரம் வரை என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டவனின் குரலில் மெல்லிய ஆதங்கம்!
“இல்லை..உங்களுக்கு கஷ்டம் கொடுக்கிறேனோவென்று..”
“ப்ச்..அதுதான் உதவி செய்கிறோம் என்று அப்பா வாக்களித்திருந்தாரே..பாதியில் விட்டா விடுவோம்?” என்றவன் “சரி உனக்கு என்ன வகை தகவல்கள் தேவை?” என்று கேட்டான்
தனக்கு தேவையான விபரங்களை சொன்னவள் தொழிற்சாலையின் புகைப்படங்களும் கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று தயங்கி தயங்கி சொன்னாள்.
“ஹ்ம்ம்..என்றவன் “மைதிலி..ஒன்று செய்வோமா? நீ சனிக்கிழமை நேரடியாகவே தொழிற்சாலை வந்து விடு.. உனக்கு சனிக்கிழமை இரண்டு மணி நேரம் தருகிறேன். சமாளிப்பாய் தானே.. ஏனெனில் என்னுடைய ஆவணங்கள் எல்லாம் தொழிற்சாலையில் தான் இருக்கும். அதை எடுத்து வந்து ஒவ்வொன்றாக நான் தேடி சொல்வது சரியாக வரும் என்று நான் நினைக்கவில்லை. உனக்கு தொழிற்சாலை வருவது பரவாயில்லை தானே?” என்று கேட்டான்
“நான் வந்து விடுவேன்..”
“எப்படி வருவாய்?”
“சைக்கிளில்…நீங்கள் அட்ரஸ் மட்டும் கொடுங்கள் நான் பாய்ஸ் யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து விடுகிறேன்.”
“சரி ..அப்படியானால் சனிக்கிழமை பத்து மணிக்கு தொழிற்சாலையில் உன்னை எதிர்பார்க்கிறேன், வேறொன்றுமில்லை தானே..”
“இல்லை..” என்றவள் தயங்கி “தேங்க்ஸ்” என்றாள்.
“பரவாயில்லை. “
“……………..”
“இப்போதெல்லாம் நன்றாக சிங்களம் பேச ஆரம்பித்துவிட்டாய்..” சன்னமாய் அவன் சிரித்தது காதுகளில் ஐஸ்க்ரீமாய் வழுக்கிக்கொண்டு போக ஆஸ்கார் வாங்கிய ரஹ்மானாய் புன்னகையை பூசிக்கொண்டாள் அவள்.
“எல்லாம் உங்கள் அம்மாவும் தங்கையிடமும் பெற்ற ட்ரெயினிங் தான்.”
“ஹா ஹா அப்படியா?”
அப்படியே பேச்சை துண்டித்திருக்கலாம்.. “ஆனால் நீங்கள் தமிழ் ஒரு வார்த்தை கூட கற்றுக்கொள்ளாமல் தானே இருக்கிறீர்கள்?” என்று கேட்டு விட்டாள்.
அந்த பக்கம் சற்று நேரம் மௌனம்..
“உன் ஆசிரியர்களுக்கு உன்னோடு பழகவும் உனக்கு கற்றுத்தரவும் பிடித்திருந்தது..என் தமிழாசிரியைக்கு தான் அதெல்லாம் பிடிக்கவில்லையே…” குரலைத்தாழ்த்தி ரகசியமாக சொன்னவன் அத்தோடு போனை கட் செய்து விட சற்று நேரம் தூணில் கண் மூடி சாய்ந்திருந்தவள் “இங்கே இருட்டில் என்னடி பண்ற?” என்றபடி சுமி வரவும் அவசரமாய் எழுந்தாள்
“அப்பாக்கூட பேசிட்டே இங்கே வந்துட்டேன்டி!!”
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவளோ “இந்த இருட்டுக்குள்? ஹாஸ்டல் கதவு வேற பூட்டபோறாங்க..நீ வெளிய வந்து லூசு மாதிரி உக்காந்திருக்க! வரவர நீ சரியில்ல மைத்தி! ஆன்ட்டிக்கு போன் போடணும் போலதான் இருக்கு!” முணுமுணுத்தபடி இழுத்துக்கொண்டு போனாள் சுமி.
டிவி ஹாலுக்குள் ஒன்பது மணி செய்திகளில் வன்னி அப்டேட்ஸ் ஓடிக்கொண்டிருக்க உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இறுகிப்போன முகத்துடன் ஓரிருவர் அதற்கு முன்னே இருந்தனர்.
“நியூஸ் காதுல கேட்டாலே டென்ஷன் ஆகுதுடி.. நான் டிவி பார்க்கிறதையோ நியூஸ் கேட்கறதையோ நிறுத்திட்டேன்.நம்மால எதுவுமே செய்யமுடியாதென்னும் போது அதையே கேட்டுட்டு இருக்க வேறெதிலும் கான்சன்ரேட் பண்ண முடியாம கொடுமையா இருக்கு.” என்று சொல்லியபடி டிவி ரூமை இரண்டே வேக எட்டுக்களில் மைத்தி கடக்க
“ஆமாம். அதே கேட்டால் தேவையில்லாமல் டென்ஷன் ஆகி சுத்தணும்!!! அதுக்கு காதைப்பொத்திட்டே இருந்துறலாம்!!” என்று ஆமோதித்தபடி அவள் பின்னேயே தொடர்ந்தாள் சுமி.
அறைக்கு சென்றதுமே மறுநாளைய லெக்ஷர் தயார்படுத்தல்களுடன் நேரம் கழிய ஒருவழியாக தூங்க சென்ற மைதிலிக்கு கண்களை மூடியதும் “என் தமிழாசிரியைக்குத்தான் அதெல்லாம் பிடிக்கவில்லையே” என்ற அவனது ரகசியக்குரல் தலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது..
ஒருவழியாய் தூக்கம் அவளை தழுவிக்கொண்டபோதும் கோடுகள் குறியீடுகளாய் அவள் கனவுகளிலும் அவனே நுழைந்து அவளை ஆக்கிரமித்திருந்தான்!
மறுநாள் காலை இனிதான செய்தியுடனேயே விடிந்தது. பேராதெனியவில் ஏதோ விழா என்பதால் இன்றைக்கு முழுநாளும் விரிவுரைகள் இருக்காது என்ற செய்தி தீயாய்ப்பரவ உற்சாகமாய் குளித்து விட்டு சுமியை தேடிப்போனாள் மைத்தி.
இருவருமாய் சாப்பிட்டுவிட்டு பரீட்சைக்கு தயார்படுத்தலின் முதற்கட்டத்தை இன்றைக்கு ஆரம்பிக்கலாம் என்றெண்ணி குறிப்புக்களை தயார்படுத்தி எடுத்துக்கொண்டு அறைக்குள் ஸ்டோர் செய்திருந்த சிப்ஸ் பாக்கட்டுகளையும் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று அமர்ந்து கொண்டனர். அவர்களை அங்கே கண்டதும் இன்னும் இருவரும் சேர்ந்து கொள்ள தூண்களில் சாய்ந்தபடி ஒவ்வொரு பகுதியாக படிக்க ஆரம்பித்தனர் நால்வரும்..
சிலர் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு farm family ப்ராஜெக்டுக்காக சேனபுர செல்ல சிலர் டவுனுக்கு போவதற்காக மறுப்பக்கம் புறப்பட்டனர். அன்று வியாழக்கிழமை ஆதலால் இன்னும் சிலர் வெள்ளி விரிவுரைகளை கட் செய்து விட்டு நீண்ட விடுமுறை உற்சாகத்துடன் வீட்டுக்கே புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.
பதினோரு மணி இருக்கும்.
மைதிலிக்கு நிலாவிடம் இருந்து போன் வந்தது.. அந்தப்பக்கம் சொன்ன தகவலில் தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு எழுந்தவள் அருகிலிருந்தவளை உலுப்பினாள்.
“ஏய் சீக்கிரம் வா..நிலா பேசினாடி.. அவங்க வர்ற வழில யாரோ குடிகார கும்பல் அவங்களை துரத்தறாங்களாம்.. சிந்துவும் நிலாவும் மட்டும் எப்படியோ சிக்கிட்டிருக்காங்க.. தினேஷுக்கு பண்ணாளாம்.அவன் எடுக்கலையாம்..”
“அய்யய்யோ” என்று அலறியபடி மூவரும் எழுந்து கொள்ள நால்வருமாய் டைனிங் ஹால் பக்கமாய் இருந்த பாய்ஸ் ஹாஸ்டலை நோக்கி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
“நம்ம பசங்க எல்லார்க்கும் போன் போடுங்க.. நான் நம்ம ரெப் சத்துர கிட்ட சொல்லறேன்” என்றபடி பின்புறமாக நடந்துகொண்டிருந்த சத்துரவை குறி வைத்துக்கொண்டே டைனிங் ஹாலுக்குள் மைதிலி ஓடினாள்.
சுமி பாய்ஸ் ஹாஸ்டல் பக்கமாய் போன் பேசிக்கொண்டிருந்த செந்தூரனை கண்டு செந்தூர் என்று அலறியபடி அவனை நோக்கி ஓடினாள். அடுத்த சில கணங்களில் பாய்ஸ் ஹாஸ்டல் திமிலோகப்பட ஹாஸ்டலில் இருந்த ஆண்களெல்லாம் கையில் அகப்பட்ட சைக்கிள்களை எடுத்துக்கொண்டு நிலா சொன்ன இடத்துக்கு வேகவேகமாய் ஓடினர்..
சத்துர மட்டும் தன்னிடம் இருந்த அவசர உதவிக்கான இலக்கங்கள் மற்றும் அந்த பிரதேசத்தில் தங்களுக்கு பழக்கமான இளைஞர்களை அழைத்து தகவல் சொல்லி அலர்ட் செய்தபடி கடைசியாக சென்று கும்பலில் இணைந்து கொண்டாள்.
“அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமா?” வினிதா அழவே ஆரம்பித்துவிட்டாள்.
“வாயை மூடுடி..அதெல்லாம் எதுவும் ஆகாது!” சுமி தைரியமாய் சொன்னாலும் அவள் குரலும் நடுங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது.
“நிலாவோட farm family வீடு கொஞ்சம் தொலைவில் தானே இருக்கு. இவங்க ரெண்டு தமிழ் கேர்ல்ஸ் க்ரூப்ல இருக்கற குஷில தனியாவே ரெண்டு பேரும் போவாங்க.. அன்னிக்கும் வார்ன் பண்ணினேன்டி..சனியனுங்க கேட்டாளுங்களா?” என்று அங்கலாய்த்த பிரியா பிறகு “குடிகாரங்களா தான் இருக்கும். சும்மா வம்பு பண்றதுக்குன்னே விரட்டிட்டு வந்துருக்கனும்..ஒண்ணும் ஆகக்கூடாது” என்று தனக்கே படபடப்புடன் ஆறுதல் சொல்லிக்கொண்டாள்.
இவர்களோடு ஐந்தாறு சிங்கள நண்பிகளும் நின்று கொண்டிருந்தனர். மீதிப்பேர் ஹாஸ்டல் போர்டிகோவில் நின்று கொண்டிருந்தனர்.
மைத்திக்கு நிலாவின் பயக்குரலை கேட்டதே உச்சபட்ச பதட்டமாய் இருக்க சப்காம்பஸ் கேட்டிற்கு வெளியே போய் நின்று கொண்டு வளைவின் வழி யாராவது வருகிறார்களா என்றே பார்த்துக்கொண்டிருந்தாள்.
செக்கியூரிட்டி” உள்ளே போம்மா” என்று வாசலில் நின்று விரட்டுவதும் அவர் அந்தப்பக்கம் நடந்ததும் இவள் வெளியே போய் பார்ப்பதுமாக சற்று நேரம் அதே காட்சி மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.
பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். அவர்கள் திரும்பி வரும் சத்தம் கேட்க எல்லோருமே வெளியே ஓடி வந்து விட்டார்கள்.
நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் கும்பலாய் ஹாஸ்டலை நெருங்கிக்கொண்டிருந்தன. அதில் நிலா, சிந்து வெளிறிப்போன முகத்தோடு நடுவில் தென்பட்டனர்.
அவர்களை கண்டதுமே அருகில் மொத்த பெண்களும் ஓட பதட்டத்தில் இவர்களை கட்டிக்கொண்டு அழுதே விட்டாள் நிலா. அவர்களின் இரண்டு சைக்கிள்களையும் இரண்டு பெண்கள் எடுத்துசெல்ல மெல்ல அவர்களை டைனிங் ஹால் பக்கமாய் அழைத்து சென்று அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர் இவர்கள். அவர்களின் பின்னேயே கூட்டம் கூடிவிட பெண்களின் ரெப் நதீஷா வந்து இருவரின் தோழிகள் அல்லாத மற்ற பெண்களை ஹாஸ்டலுக்கு போகுமாறு வேண்டிக்கொண்டாள்.
“எங்கள் க்ரூப் பசங்க ஒழுங்காக farm family கு போவதே இல்லடி.. அட்லீஸ்ட் நானும் இவளுமாவது போனால் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிடலாம் என்று தான் தனியாகப்போனோம்!” என்று விம்மினாள் சிந்து
“பாய்ஸ் யாரையும் கூட்டிட்டு போயிருக்கலாமே” என்று ப்ரியா ஆரம்பிக்க அவளை ஒரு அழுத்து அழுத்தி அடக்கினாள் சுமி. “அவளே அரண்டு போயிருக்கா அவளை பேச விடு” என்றபடி!
“நாங்கள் போகும் போதே மரத்தடியில் இருந்து குடித்துக்கொண்டிருந்த நாலு பேரை பார்த்தோம். அவர்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.” சிந்து தொடர்ந்தாள்
“அங்கே வீட்டுக்கு போய் டீட்டெயில்ஸ் எடுத்துவிட்டு வரும் போது அந்த ஆன்ட்டி கூட கேட்டார்கள் சந்தி வரை கொண்டு வந்து விடட்டுமா என்று! நாங்கள் தான் ரெண்டு பேர் இருக்கிறோமே என்று சொல்லிவிட்டு வந்தோம்..”
“திரும்பி வரும் போது அவர்களை அங்கே காணோம்..”
“அந்தபாதை இடப்புறமாக மெல்லிய பாதை ஒன்றின் வழியாக வந்து பிரதான மேட்டுப்பாதைக்கு வரும். அதிலிருந்து வலப்பக்கம் திரும்பி மணல் வழியாக வந்தால் சப்கம்பஸ் வீதியான ஆற்றுப்பாதைக்கு வந்துவிடலாம். நாங்கள் அந்த மெல்லிய வழியில் ஏறியதுமே எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்று புரியவில்லை. நாலுபக்கமும் இருந்து அந்த நாலுபேரும் எங்களை இடிப்பது போல சுற்றிக்கொண்டு சைக்கிளோட்டினார்கள்”
“நன்றாக பயந்துட்டோம்டி..” என்று நிலா இடையிட்டுத்தொடர்ந்தாள்
“நாங்கள் வேகமாய் ஓட ஒருவன் சிந்துவை இடித்தான்.. அம்மா என்று இவள் கத்தி தமிழில் ஏதோ சொல்லி விட்டாள்..”
“அவங்க நாம தமிழ்னு எதிர்பார்க்கல போல.. தமிழ்டான்னு சொல்லி சிரிச்சிட்டே இன்னும் இன்னும் இடிக்க ஆரம்பிச்சாங்க.. சரியான பாதையிலேயே போனா தனியான மணல் ரோடு..அதுக்குள்ளே கண்டிப்பா மாட்டிப்போம்னு தெரியும் . எதிர்ப்பக்கமா ஏதோ மாட்ச் நடக்கற சத்தம் கேட்டுட்டே இருந்தது.. அந்தப்பக்கமா திரும்புடின்னு கத்திட்டே இவ சைக்கிளை திருப்பிட்டா..அவங்க எதிர்பார்க்கல.. ஒருத்தன் கீழே விழுந்துட்டான்..நானும் ஒருவழியா திருப்பிட்டேன்..அப்போதான் உங்களுக்கு கால் பண்ணினோம்.”
“ஆண்டவன் புண்ணியம் அடுத்ததே அந்த க்ரவுண்ட் தான்..நிறைய பாய்ஸ் புட் பால் விளையாடிட்டிருந்தாங்க.. அண்ணா காப்பாத்துங்கன்னு சிங்களத்துல கத்திட்டு டைரக்டா க்ரவுண்டுக்குள்ளயே வண்டியை விட்டுட்டோம்.. “
“கிரவுண்ட்ல இருந்தவங்கல்லாம் எங்க பக்கமா ஓடி வர அவனுங்க உடனே பயந்து ஆப்பசிட்டா ஓடறாங்க..”
“உடனே கிரவுண்ட்ல இருந்தவங்கள்ல பாதிப்பேர் எங்க கூட இருக்க மீதிப்பேர்.. மீதிப்பேர் அவனுங்களை துரத்திட்டு போய் பிடிச்சுக்கொண்டு வந்தாங்க..என்ன சீன் தெரியுமா?” வழக்கமான நிலா திரும்பிக்கொண்டிருந்தாள் என்பதே அபிநயம் செய்ய ஆரம்பித்திருந்த கைகளில் தெரிந்தது.
“என்னடி படக்கதை போல சொல்ற!!!”
“படம் தோத்துரும்டி..அப்படியொரு ஆக்ஷன் சீக்குவன்ஸ்! இப்போ சிரிக்கிறேன்..அப்போ எவ்ளோ பயமா இருந்துது தெரியுமா? என்றபடி வினிதாவின் கரங்களை இறுகப்பற்றினாள் நிலா.
அப்புறம் என்னாச்சு?
“அவனுங்களை கொண்டு வந்ததும் இவனுங்க தானேன்னு எங்ககிட்ட கேட்டுட்டு எங்க முன்னாடியே அடிச்சு துவைச்சிட்டாங்க,..அவங்களுக்கு அடிச்சிட்டு இருந்தப்போ தான் நம்ம க்ரூப் எல்லாம் வந்தாங்க..”
“ஆனாலும் புத்திசாலித்தனமா க்ரவுண்ட் பக்கம் போயிருக்கீங்கடி!”
“அதை தான் சத்துரவும் சொல்லிட்டு போனான்.”
“அந்த கிரவுண்ட்ல மட்டும் ஆளுங்க இல்லைன்னா என்னாகிருக்கும்..நினைக்கவே பயமாருக்கு!!”
“அதான் ஒண்ணும் ஆகலைல்ல..சும்மா இருங்க!”
“ஏய் மைத்தி உன்னோட சிந்தக அண்ணா செம்மடி.” நிலா ஞாபகம் வந்தவளாக திடும்மென கூவினாள்
அதுவரை பதில் பேசாமல் கனவு போல அவள் சொன்ன கதையை கற்பனையில் ஓட்டி பார்த்துக்கொண்டிருந்த மைத்தியின் கவனம் “என்னடி சொல்ற?” என்று ஒட்டுமொத்தமாய் நிலாவிடம் பாய்ந்தது.
“ஹையோ.. ஏதோ புட்பால் சீரீஸ் நடக்குது போல..அவர் ஒரு டீம்ல விளையாடிட்டு இருந்தார். அவனுங்களை இழுத்துட்டு வந்து புட்பாலாலையே அடிச்சார்டி.. அப்போ ஆளை பார்க்கவே பயமா இருந்துது..”
“ஆமா.. என்னமோ சொல்லி சொல்லி அடிச்சாரே “கானிட்ட அத்த கான்ன….” எனக்கு வரல போ..இதை சொல்லி சொல்லி சாத்துனார்!”
“சத்துரவுக்கும் என்னமோ சொல்லிட்டிருந்தாங்க அவங்க. அனேகமா இன்னிக்கு பாட்ச் மீட்டிங் வச்சு தனியா போனதுக்கு ஷொட்டு விழும்னு நினைக்கிறேன்!!!”
“ஆமா,.நம்ம சத்துர தான் போலீசை கூப்பிட்டிருக்கணும். அவங்க வந்ததும் சிந்தக அண்ணா தான் போய் அவங்கட்டையும் பேசினார். நான் கடைசில வரும்போது அவர்ட்ட போய் ‘நான் மைதிலியோட பிரன்ட், உங்களை எனக்கு தெரியும், போட்டோல பார்த்திருக்கேன்..நன்றிண்ணான்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ஹ்ம்ம் நல்ல அண்ணாடி.. இப்போ ஓகேவா? சைக்கிள்ள போக முடியுமா?” னு என்னையும் கேட்டார். சிந்து சொல்ல மைதிலிக்குள் புசு புசுவென பொறாமை புகைந்தது.
அவனை பற்றி சொன்னவைகள் எல்லாம் மகிழ்ச்சியை தந்ததை விட கடைசியில் சிந்து சைக்கிளோட்ட முடியாது என்றால் பைக்கில் கொண்டு வந்து டிராப் செய்திருப்பானா? என்ற அர்த்தமற்ற சிறுபிள்ளைத்தனமான கோபம் அவளுக்குள் முகிழ்த்தது.
நிலாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் எனக்காக அவன் பதறியிருப்பானா? கோபம் கொண்டிருப்பானா? எனக்காக அந்த குடிகாரர்களை அடித்திருப்பானா? காதலின் வீதியில் உரிமை கொள்ளுதலால் வரும் பொறாமை என்னும் அடுத்த மைல் கல்லை அந்த சமயம் கடந்து கொண்டிருந்தாள் மைதிலி.