WLM அத்தியாயம் 5

“அவன் என்னை அப்படி பிடித்து இழுத்துக்கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அதை விட என்னை அணைத்தவனின் நெஞ்சிலேயே அப்படியே சாய்ந்து கொள்ளவேண்டும் என்று எனக்குள் எழுந்த தவிப்பில் தான் நான் அதிர்ந்து போனேன். என்னுடைய நிலைமையின் பார தூரம் புரிந்தது. அழ ஆரம்பித்தேன். அவன் கோபமாய் கிளம்பிப்போய்விட்டான். அதன் பிறகு என்னால் அங்கே பொருந்தியிருக்கவே முடியவில்லை.”

சமந்த அங்கிளுக்கு நன்றி சொல்லிவிட்டு சைக்கிளை பார்க்கில் விட்ட மைதிலியின் கண்கள் தன் நண்பிகளின் சைக்கிள் நிற்குமிடத்தை தான் முதலில் ஆராய்ந்தன. சுமியின் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.

‘அய்யய்யோ வெளியே போனவர்கள் திரும்பி விட்டார்களா?’

 எல்லாருமாய் சேர்ந்துகொண்டு அவர்கள் ஷாப்பிங் கிளம்ப, ஷாப்பிங் வராமல் பார்ட்டிக்கு போகிறேன் என்றால் விடவே மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தலைவலி என்று பொய் சொல்லி ஹாஸ்டலிலேயே தங்கி விட்டவள் அவர்கள் அகன்றதும் தயாராகி அமிலவின் உதவியோடு சேனபுர போயிருந்தாள்!

‘அவர்கள் திரும்பி வர எப்படியும் மாலை ஆறுமணி ஆகுமே..ஏன் இன்று இவ்வளவு வெள்ளனவே…’

ஹாஸ்டல் கதவை தள்ளித்திறக்க வரவேற்பறையில் டிவி பார்த்துகொண்டிருந்த சிந்தியாவை கண்டு முகம் வெளிறிப்போனாள்.

அவள் அதை விட அதிக ஆச்சர்யமாய் அவளை பார்வையிட்டாள்! அவளோடு அவ்வளவு நெருக்கம் இல்லை மைத்திக்கு..இருந்தாலும்,,,

“மைதிலி! எங்கே போயிருந்த? எல்லாரும் உன்னை தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள்! சுடிதார், ஜிமிக்கி எல்லாம் புதுசா இருக்கே..கோவிலுக்கு போனாயா?” கேள்விக்கணைகள் பறந்து வந்தன

“ஆமாம் ஆமாம். திடீரென சர்ப்ரைசாக சித்தப்பா வந்திருந்தார்.. அவரோடு வெளியே போய்விட்டு வருகிறேன்.” என்று வாயில் அகப்பட்ட பொய்யை எடுத்து விட்டவள் “ஆமாம் நீங்கள் ஏன் வெள்ளனவே வந்து விட்டீர்கள்?” என்று கேட்டாள்

“நாங்கள் எங்கே போனோம்? ஜங்க்ஷன் வரை போனோம். அதுக்குள்ள நியூஸ் வந்து விட்டது. இனிமேல் நாங்கள் தனியாக குரூப்பாக டவுனில் சுத்துவது பாதுகாப்பில்லை என்று பாய்ஸ் பயந்தார்கள். அதுதான் திரும்பி வந்து விட்டோம்.”

“ஏன் என்னாச்சு?”

“உனக்கு விஷயமே தெரியாதா? நேற்று நடுஇரவு வன்னியில் ஷெல் பட்டு பொதுமக்கள் இருபது பேர் செத்துப்போய்ட்டாங்க. அதுக்குப்பதிலா ஆர்மி மேல அட்டாக் நடந்திருக்கு. கொழும்புல எல்லாம் ஒரே பதட்டமாம். தமிழ் பசங்களை அரஸ்ட் பண்றாங்களாம். எல்லாரும் பயந்து போய் இருக்காங்க!”

முகம் வெளுத்தவள் எதையோ சொல்லி சமாளித்தபடி மற்ற நண்பிகள் கண்ணில் படாமல் அறைக்குள் புகுந்தாள்.

இத்தனை நடந்திருக்கிறது..அவள் எங்கே என்ன செய்து கொண்டிருந்தாள்?  கண்ணாடியில் இருந்த விம்பம் அவளை  கேள்வி கேட்பது போலிருந்தது.

காலையில் உற்சாகப்படபடப்புடன் ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து அலங்கரித்துக்கொண்டது நினைவுக்கு வந்தது,,,தன்மேலேயே கோபம் வர  காதில் இருந்த ஜிமிக்கியை கழற்றி முதலில் வீசினாள் மைதிலி . கண்ணாடியில் தன்னை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.

உடைமாற்றிக்கொண்டு போனை சார்ஜில் போட்டு ஆன் செய்து விட்டு கட்டிலில் அவள் கண்மூடி இருந்தபோது அப்பாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது.

“மிது.. ஏன் பகல் முழுக்க போன் ஆப்? பயந்து போய்ட்டோம்மா..இப்பவும் நீ எடுக்கலைன்னா சுமிக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்.”

நல்லவேளை என்று மனதில் நினைத்துக்கொண்டவள் “டீவில நியூஸ் பார்த்துக்கொண்டு வெளியேவே இருந்துட்டோம்பா.. போன் ரூம்ல ஆப்பா இருந்ததை பார்க்கல. சாரி..” எத்தனை பொய்கள்! கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.

“இனிமே சார்ஜ் போட்டு கைலையே வச்சுக்கம்மா..பொல்லாத காலம்..தூரத்தில் இருக்கற நாங்கள் நீ எப்படி இருக்கிறாய் என்று தெரியாமல் பயந்துகொண்டு இருக்கமுடியாது. புரியுதா பேபி..?”

“சரிப்பா…” சுயபச்சாத்தாபத்தில் அழுகை பொங்கி வந்தது அவளுக்கு. ‘உங்களுடைய பேபி தான் ..அந்நியன் ஒருவனின் அணைப்பில் சற்று நேரத்துக்கு முன்னர் அடங்கியிருந்தேன் அப்பா!’ என்று கத்த வேண்டும்  போலிருந்தது.

கணவரிடம் இருந்து போனை பரித்துக்கொண்ட அன்னை “மைத்திம்மா” என்று அழைக்க அவளுக்கு தாயின் குரலில் கண்ணீர் இன்னும் கூடியது.

“தப்பு பண்ணிட்டேன்மா” என்று கதறிவிட தோன்றியது. அரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டாள்

“மைத்தி..இனிமே வெளியே போகும் போது பொட்டு வைத்துக்கொண்டோ சுடிதார் போட்டுக்கொண்டோ போக வேண்டாம்.  ஜாக்கிரதையாய் இரு!”

வெகுநேரம் சுய பச்சாத்தாபத்தில் அழுது கொண்டே இருந்தவள் ஒருவழியாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியே சென்றாள்.

இப்போது டிவி அறையில் எல்லாருமே இருந்தனர்

“எங்கடி போயிருந்த? எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” சுமி தான் முதலில் சண்டைக்கு வந்தாள்.

“வவுனியால இருந்து விஜி சித்தப்பா சொல்லாமலே வந்துட்டார்டி..வா வான்னு கூட்டிட்டு போய்ட்டார்… நானும் அவரை பார்த்த சந்தோஷத்துல போனை மறந்து போயிட்டேன். “

அவர்களில் யாரும் அவளின் சைக்கிள் அங்கே இல்லாதிருந்ததை கவனித்திருந்தால் குட்டு வெளித்திருக்கும் ஆனால் அவளுடைய நல்ல காலம் அவளது பொய்யை யாரும் சந்தேகிக்கவில்லை

டிவியில் திரும்ப திரும்ப நடந்த துயரத்தை தான் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். விழுந்து புரண்டு தங்கள் உறவுகளுக்காக அழுது கொண்டிருந்தவர்களையும் பார்க்கவே மைத்திக்கு மனம் வலித்தது. கண்ணோரம் மீண்டும் அழுகை திரண்டது.

“சாரா இந்த வாரம் வீட்டுக்கு போகாம ரூம்லேயே இருக்காடி. அவ பேச்சைக் கேட்டாலே கொல்லணும் போல கோவம் வருது.. “ நிலா கோபமாய் சொன்னாள்.

“என்னாச்சு?”

ஏதோ அவங்க மட்டுமே பாதிக்கப்படறது போல பேசறா..எங்க பக்கமும் தான் இழப்பு? அதையேன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க இவங்க?

 “அவளுக்கு அவங்க ஆளுங்க தானேடி முக்கியம்..” என்றாள் கயல் சமாதானமாக

“அதுபோல எனக்கு என்னோட ஆளுங்க தான் முக்கியம்னு அவ புரிஞ்சுக்கணும்ல?” நிலாவின் கோபம் குறையவில்லை.

“புரிஞ்சுக்கிற ஆளுங்களா இருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காதேடி. அவங்களால எந்த ஜென்மத்துலயும் எங்க உணவுர்வுகளை புரிஞ்சுக்க முடியாது. எப்போவுமே அவங்க வேற..நாங்க வேற.. பேசிக் டிசைனே அதுதான்! எண்ணெய்யும் தண்ணியும் கலந்ததா சரித்திரம் உண்டா என்ன? என்ன பேசினாலும் மற்றக் காதால வெளியே விட்ரு. ஏன்னா இங்கயும் நாங்க மைனோரிட்டி தான்!” சுமி வழக்கம் போல முடித்து வைத்தாள்.

வாய்திறக்க கூட தகுதியில்லாத பதரை போல தன்னை உணர்ந்து குற்றவுணர்வில் உள்ளுக்குள் மறுகிப்போனாள் மைத்தி.

ஒருவனின் அணைப்பில் அடங்கும் அளவுக்கு , அவன் நெஞ்சில் சாய ஆசை கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் மனத்தால் தயாராகிறாள் என்றால் அவன் என் இணை என்று உள்மனம் ஏற்றுக்கொண்டது என்று தானே அர்த்தம்? போரின் கொடூரத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகளை பார்க்கும் போது ஒவ்வொரு கணமும் என்னை மனசாட்சி குத்தாதா? சும்மா குட்டி விஷயத்துக்கும் பொங்கி சண்டையிடும் அவளால் இதை மனமுதிர்ச்சியுடன் ஏற்று கொள்ள முடியுமா? அதை விட அவள் சார்ந்த சமூகத்தில் இவன் வரவேற்கப்படுவானா? அதுவும் இந்த நிலைமையில்?

மஞ்சு ஆன்ட்டியை நேசிப்பது வேறு, சிந்தகவை தன்னுடையவனாக ஏற்பது வேறு! எதையுமே யோசிக்காமல் மனதின் போக்குக்கு இழுபட்டு அவனிடம் தன்னையும் செய்கைகளால் வெளிப்படுத்தி விட்டது அவளுக்கு இப்போது பெருந்தவறாக தோன்றியது.

அடுத்த நாளில் இருந்து அவள் விகாரைப்பக்கமே போகவில்லை. தொடர்ந்து இருவாரங்களாக உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி மற்றவர்களுடன் சேனபுர போகாமல் ஹாஸ்டலிலேயே இருந்து கொண்டாள். மூன்றாவது வாரம் தவிர்க்க முடியாமல் போனாலும் பிரச்சனைக்குரியவன் அங்கே இல்லாதது அவளுக்கு நிம்மதியாகத்தான் இருந்தது.

இப்படியே காலம் ஓடியதில் சிந்தகவை அவள் நேரே சந்தித்து ஒருமாசத்துக்கு மேல் ஆகியிருந்தது. ஆனால் அதற்கு நேரெதிராய் அவனுடைய குடும்பத்தவர்களோடு அவள் இன்னும் இறுகிப்போயிருந்தாள். அந்த செமஸ்டரின் நடுப்பகுதியை நெருங்கியிருந்ததால் விளையாட்டுக்களை குறைத்து ப்ராஜெக்ட் பணிகளையும் ஆரம்பித்து அந்த குடும்பம் பற்றிய அறிமுகத்தை ஐவருமாய் சேர்ந்து எழுதி முடித்திருந்தார்கள். அன்றும் அவர்கள் பயிரிடும் ஒவ்வொரு பயிர்வகைகளின் லாப நட்டங்கள் பற்றியும் அவர்கள் உரையாட அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். இப்போதெல்லாம் பேசுவதை முழுக்க புரிந்து கொள்ள முடியும் அளவுக்கு மொழி பரிச்சயமாயிருந்தது. ஆனால் திரும்ப பேசுவது இன்னும் தகராறுதான்.

அவளது அவஸ்தையை புரிந்து கொண்ட சுதா  ஒரு யோசனை சொன்னான்.

“நாங்கள் இனிமேல் அனலைஸ் பண்ண வேண்டியது சமந்த அங்கிளின் விவசாய லாப நட்டம், மஞ்சு ஆன்ட்டியின் கோழி மற்றும் மாடுகளின் வருமானம், சிந்தக அண்ணாவின் பிசினஸ் மூன்றும் தானே..எங்களுக்கு இன்னும் மூன்று மாசம் தான் இருக்கிறது. அதிலும் கடைசி மாசம் எக்சாமுகே போய்விடும். நாங்கள் நமக்குள் பிரித்து கொள்வோம்..பிறகு கிடைத்த விபரங்களை பகிர்ந்துகொண்டு ப்ராஜக்டை முடிக்கலாம்.. கால்நடையை நான் எடுத்துக்கொள்கிறேன்..உங்கள் மூவருக்கும் சமந்த அங்கிளின் பயிர்கள், நம் மைத்தியை சிந்தக அண்ணாவிடம் விட்டு விடலாம். அவர் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவார் ஆகவே மைத்திக்கும் சுலபமாய் இருக்கும். என்ன சொல்கிறீர்கள்?”

எல்லோரும் அதை ஆமோதித்தார்கள்.

நாங்கள் இருவரும் வேண்டாம் என்றிருந்தாலும் விதி விடாது போலிருக்கிறதே.. என்று கலக்கத்துடன் தலையசைத்து வைத்தாள் மைதிலி.

சுதாவுக்கு கடையில் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் இருவரையும் விட்டு விட்டு மற்ற மூவரும் ஹாஸ்டல் சென்று விட்டனர்.

‘இந்தக்கடையில் தான் அவன் அன்றைக்கு ஜெலி வாங்கித்தந்தான்! பச்சைக்கலர் ஜெலி சாப்பிட்டதை கிண்டல் செய்த போது தான்..அன்றைக்கு..அன்றைக்கு…. ‘

ஏய் மைத்தி!!!  சுதா அவளை கையில் இருந்த போர்டால் அடித்து சுய உணர்வுக்கு கொண்டு வந்தான்

“என்..என்ன கேட்ட?”

“உனக்கு ஏதாவது வாங்கணுமா என்று கேட்டேன்!”

“ம்ம்..நான் ஜெலி கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன்” என்றவள் பச்சை நிற ஜெலிகளை பொறுக்கி எடுத்துக்கொண்டாள். சுதா பொருட்கள் அடங்கிய பையை பாஸ்கட்டில் போட்டு ஒருகையால் பிடித்தபடி வர இவர் ஒரு கையால் ஜெலியை ருசித்தபடி வந்துகொண்டிருந்தாள்.

இப்பல்லாம் இவனுங்க நடந்துக்கற முறையே சரியில்லைல்ல?

ஆமாண்டா..என்னோட ரூம் மேத்ஸ் எல்லாருமே தங்கமான பொண்ணுங்க.. ஆனா அந்த B டீம் லீடர் இருக்கானே..அவன் துவேஷம் பிடிச்சவன்..

ஏன் உங்க கிட்ட ஏதும் வம்பு பண்ணானா?

இல்ல..லாஸ்ட் வீக் பீல்ட் ட்ரிப் போனோம்ல?

ஆமா

அங்க நானும் சுமியும் தனியா வந்துட்டிருந்தோம், அந்த லூசு எங்க கூட பேசிட்டே வந்திச்சு. அப்போ தான் வன்னில என்ன நடக்குதுன்னு நாங்க நினைக்கிறோம்னு கேட்டிச்சு..

நீங்க என்ன சொன்னீங்க…

உன்னை மாதிரியே நானும் பொதுமக்கள்ள ஒருத்தி தான்..உனக்கு தெரிஞ்சது தானே எனக்கும் தெரியும்னு சொன்னேன்

அவன் சிரிச்சிட்டே “இதுதான் கடைசி சண்டையாம்..இத்தோட ஸ்ரீலங்காவை அவங்க கிளீன் பண்ணிருவாங்களாம்..உங்களுக்கு ஹப்பி தானே? எண்டு நக்கலா கேட்டுட்டு போய்ட்டான்

“கேக்கற நியூஸ்களை பார்த்தா அவன் சொன்னது சரிதான் போல இருக்கு.”

“அது கிடக்கட்டும்டா..எவ்ளோ பொதுமக்கள் செத்து போறாங்க..அதை பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறாங்களா? ஏன் சண்டை சாவுன்னு இரண்டு பக்கமும் சிலபேர் வெறியா இருக்காங்க?”

“லூசுகளே…அவங்கள் போட்டுவாங்கறதுக்கெல்லாம் இழுபட்டு பதில் பேசிட்டு இருக்காதீங்க.. நம்ம செட்ல ஒருத்தன் ரெண்டு பேர் தானே அப்படி இருக்காங்க.. அதையெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடு..”

“சுமியும் அப்படித்தான் சொன்னா..”

“பார்த்தியா நானும் அவளும் ஒரே போல யோசிக்கிறோம்…”

“ஆண்டவா இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..நீயாச்சு அவளாச்சு!!!” சுதா சொன்னதை மட்டும்  சுமி கேள்விப்பட்டால் எப்படி ரியாக்ட் செய்வாள் என்ற கற்பனையில் வாய்விட்டு சிரித்தவள் சைக்கிளை ஒரு பள்ளத்துக்குள் விட்டுவிட்டாள்.

அடுத்தகணம் படார் என்று காதடைக்கும் படி ஒரு சத்தம் கேட்டது! அதிர்ச்சியில் பாதையோரம் சரிந்து விழுந்தாள் அவள்

மைதிலியின் சைக்கிள் ரயர் வெடித்திருந்தது.

“ரயர் போச்சு மைத்தி..வேற வழியில்லை..சைக்கிளை ரிப்பேர் கடைல கொடுத்துட்டு ஹாஸ்டல் போக வேண்டியது தான்..நான் நாளைக்கு சைக்கிளை சரிபண்ணதும் எடுத்துட்டு வந்து ஹாஸ்டல்ல நிறுத்திடறேன்..” அருகில் வந்து அதை ஆராய்ந்த சுதா யோசனையோடு சொன்னான்.

“சரிடா..இப்போ நான் எப்படி ஹாஸ்டல் போறது?”

“வேறென்ன செய்ய? இந்த ரோட்ல பஸ்ஸா வரும்? கண்ணை மூடிட்டு என் சைக்கிளில் ஏறி உக்காரு..நானும் யார்ட்டையும் சொல்லல ..நீயும் சொல்லாதே..ப்ராப்ளம் சால்வ்ட்!!!”

“என்னது? நானா?” முகம் வெளிற சுதாவின் சைக்கிளை செய்வதறியாது திரும்பிப்பார்த்தாள் மைதிலி..

ரேசிங் பைக் தான் அவர்கள் இங்கே உபயோகிப்பது..அதற்கு பின் சீட் என்ற வஸ்துவே இருக்காது. ஓட்டுபவனுக்கு முன்னே ஹாண்டில் பாரில் உட்கார்ந்து அவனுடைய கைகளுக்கிடையில் தான் முழுத்தூரமும் பயணிக்க வேண்டும்.

அப்படி பயணித்து விட்டு அவனும் அவளும் வெளியே சொல்லாவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

முடியவே முடியாது..நடந்து போனாலும் போவேனே தவிர இவன் கூட அப்படி பயணம் செய்ய முடியவே முடியாது..நாளை இவன் முகத்திலேயே எப்படி விழிப்பது? அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது..

“மைதிலி!!! முதல்ல கடை பூட்டமுன் சைக்கிளை கொடுத்துவிடுவோம்..நாம் போவதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்.!”

‘பிறகு எதை யோசிப்பது? பேசாமல் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்கு போனைப்போட்டு சமந்த அங்கிளிடம் லிப்ட் கேட்கலாமா? அதிகமாய் உரிமை எடுத்துக்கொள்வது போலாகுமா?’ அந்த எண்ணத்தை அவள் மனதில் பரிசீலித்துக்கொண்டிருக்கும் போது பல்சர் சத்தம் அவர்களை நெருங்கியது.

அவனே தான்..

தடக் தடக்கென இதயம் துடிக்க நீண்ட இடைவெளியின் பின் சிந்தகவின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள் மைதிலி. அவனும் சிரிப்பை சுத்தமாய் துடைத்த முகத்துடன் அவளையே விழிகளில் பொருத்தியபடி எதிரே வந்து கொண்டிருந்தான்.

“என்னப்பா ஆச்சு?” அவர்களின் அருகில் நிறுத்தியவன் சுதாவிடம் தான் கேட்டான்..

சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தவள் அவள்..”கேள்வி அவனிடமா?” இத்தனைநாளும் எடுத்த உணர்வு பூர்வ தீர்மானங்கள் மறக்க அவனிடம் பிணங்கிக்கொண்டது அவள் மனது!

அவன் சொன்னதும் “இப்போ எப்படி போகப்போறீங்க?” என்று சுதாவிடம் கேட்டான்..ஆனால் பார்வை அவள் விழிகளிலே இருந்தது..

‘எங்கே என் முன்னால் அவனுடன் ஏறி உன்னால் போய்விட முடியுமா?’ என்று சவால் விடுவதாக அந்த பார்வை மைதிலியின் மனதில் மொழிபெயர்க்கப்பட்டது

“என் சைக்கிள்ல போகலாம்னு தான் சொன்னேன் அண்ணா ..இவ தான் தயங்கிட்டிருக்கா..”

“சரி முதலில் சைக்கிளை கடையில் கொடுத்துவிட்டு வாருங்கள்..மைதிலியை நான் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்” என்றவன் பைக்கை திருப்பி ஸ்லோ செய்தான்..மறந்தும் அவளை என்னோடு வருகிறாயா என்று கேட்கவில்லை.

“அப்போ ஓகே அண்ணா..நீங்கள் மைதிலியை கூட்டிப்போங்கள் நான் சைக்கிளை கடையில் கொடுத்து விடுகிறேன்” என்றபடி மைதிலியின் கையில் இருந்து சுதா சைக்கிளை வாங்க ஓரமாய் பைக்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பாமல் முன்புறம் பாதையிலேயே பார்வையை வைத்த படி ஆக்சிலரேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தான் சிந்தக.

அழைப்பாக சிறுபார்வையை கொடுத்தால் குறைந்தா போய் விடுவான்?

விதியை நொந்தபடி தானாகவே போய் அவனுக்கு பின்னே ஏறிக்கொண்டவள் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்

சுதா சைக்கிள் ரிப்பேர் கடைக்குள் நுழைய இவர்களின் பைக் வேகமெடுத்தது.

கண்ணாடியில் அருகருகில் தெரிந்த அவர்கள் இருவரின் முகங்களையும் அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்  மைதிலி.

அவன் மீது அவள் கொண்டிருந்த உணர்வுக்கும் அவள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்கும் அவள் இப்போதைகேல்லாம் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல உணரவேண்டும்..அல்லது இவனுக்கு சுதாவே மேல் என்று சுதாவின் சைக்கிளில் தொற்றிக்கொண்டிருக்க் வேண்டும்..இரண்டுமே இல்லாமல் அவன் இன்னும் வேகம் கூட்ட மாட்டானா என்று உற்சாகமாகவும் , கண்ணாடியில் தெரியும் தங்கள் விம்பங்களையும், ஐயோ கம்பஸ் வந்துவிடப்போகிறதே என்று வருத்தமாய் பாதையையும் தான் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததற்கு என அர்த்தம் என்று சத்தியமாய் அவளுக்கு புரியவே இல்லை..

அவள் மனம் அவ்வளவு பலவீனமானதா? இல்லை இவன் மீதான ஈர்ப்பு அவ்வளவு பலமானதா?

சப் காம்பஸ் கம்பிவேலி வரமுன்னேயே வண்டியை நிறுத்தியவன் “இறங்கு” என்றான்.

மறுபேச்சில்லாமல் அவள் இறங்கிவிட “என்னோடு பைக்கில் வந்த அவமானம் உனக்கெதற்கு? யாரும் பார்க்க முன்னே இங்கிருந்தே கிளம்பிப்போய்விடு” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி வண்டியை திருப்பிக்கொண்டு போயே விட்டான்!

அன்றொரு நாள் அவள் ஹாஸ்டல் கேட்டை சென்றடையும் வரை அவன் பார்த்துக்கொண்டு நின்றதும் தான் தலையசைத்ததும் கிளம்பிப்போனதும் இன்றைக்கு அவளுக்கு ஞாபகம் வந்தது.. இன்றைக்கு ஹாஸ்டல் நெருங்கும் வளைவு வரமுன்னேயே அவளை இறக்கி விட்டு விட்டு திரும்பி பாராமலே போய்விட்டானே..அந்தளவுக்கு அவளை வெறுத்து விட்டானா? அந்த அக்கறை தொலைந்து விட்டதா?

அவன் விலகினால் தொல்லை தீர்ந்தது என்று நியாயமாய் சந்தோஷமே பட்டிருக்கவேண்டியவள் அன்றிரவு ஒன்பதரை மணி மட்டும் சாப்பிடவும் போகாமல் கோவில் படிகளிலேயே குளிரில் அமர்ந்துகொண்டு அழுது தீர்த்தாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *