WLM அத்தியாயம் 3

‘வேண்டாம் வேண்டாம் என்றாலும் என் விதி ஏனோ அவனோடேயே என்னை கொண்டு போய் கோர்த்து விட்டுக்கொண்டிருந்தது. அவன் என்னில் ஈர்க்கப்பட்டிருக்கிறானா இல்லையா? நான் ஏன் அவனையே கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எதற்குமே எனக்கு அப்போது விடை சொல்லத்தெரியவில்லை. அவனோடு அன்றைக்கு  இருளில் மறைந்திருக்க நேரிட்டபோது எனக்கு அவனிடம் இருந்த தயக்கமொன்று விடைபெற்று செல்ல அவனை நோக்கி ஓரடி மனத்தால் எடுத்து வைத்திருந்தேன். அது அப்போது எனக்கு புரியவில்லை.’

அன்றிரவு டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த கொய்யா மரத்தின் கீழ் கூட்டமாக இருந்தவர்கள் அன்றைய நாள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

மைத்தி தன்னுடைய கதையை சொல்லி முடிக்க நிலா “நானும் அடுத்தமுறை உன்னோடு வரவா?” என்று குறும்பாய் கேட்டாள். ஆனால் அங்கே கண்டிப்புக்கு பேர் போன சுமி அதை ரசிக்கவில்லை.

“சும்மாருடி!” என்று நிலாவை அடக்கியவள் “அவன் வில்லங்கமானவனா தான் தெரியறான். என்னவா இருந்தா என்ன? இந்த ஆறுமாசம் அவங்க இடத்துல இருக்கப்போறோம். எங்களுக்கு ஒண்ணுன்னா பார்க்கறதுக்கு யாருமே கிடையாது. அவங்க எல்லாம் நினைச்ச நேரம் வீட்டுக்கு போகலாம். நாம அப்படி யாழ்ப்பாணம் போய்ட முடியுமா? அதனால நீ அவன் கிட்ட ஜாக்கிரதையாவே இரு. நல்லதோ கெட்டதோ ஒரு சிரிப்போட நிறுத்திக்கோ.. “ என்று மைதிலிக்கு கருத்தாய் அறிவுரையும் சொன்னாள்.

‘ ஆமாம். அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? அவனுடைய குடும்பத்தினரின் வெகுளித்தனமான அன்புக்கு உண்மையாய் இருந்தால் போதுமானது. அடுத்தமுறை அவனையும் கண்ணைப்பார்த்து சிரித்து கடந்து விடவேண்டும். இந்த அவஸ்தை படபடப்பு எல்லாம் நல்லதுக்கில்லை.. ‘ மைதிலியும் அப்படித்தான் எண்ணினாள். ஆனால் அந்த வார வெள்ளிக்கிழமை மாலை விரிவுரை முடிந்தபின் அங்கே மீண்டும் அவர்கள் போன போது அவன் எல்லார்க்கும்  பொதுவான ஒரு லேசான சிரிப்புடன் பல்சரில் ஏறிக்கொண்டு எங்கோ கிளம்பிவிட எதிலோ படு மோசமாய் தோற்றது போல அயர்ந்து நின்றாள் அவள்!

அடுத்த வாரம் சீரியசான விரிவுரைகளும் செயன்முறைகளும் ஆரம்பிக்க அவள் மனதில் இருந்து அவன் ஞாபகங்களே விலகிப்போயிருந்தன.

செயன்முறை வகுப்புக்களில் பொறியியல் பாடத்துக்காய் அந்த ஊரின் நீர்ப்பாசனக்கட்டுமானங்களை பார்ப்பதும் தெருவில் ஸ்டேடியாவை நிறுத்தி வைத்துக்கொண்டு சரிவை அளப்பதும் படம் வரைவதுமென அது ஒருபக்கம் போக அந்த செமஸ்டரின் அதிக கிரடிட்ஸ் ஐ தனக்குள் கொண்டிருந்தது பயிர் விஞ்ஞானமே. அதே ஒவ்வொரு குழுவும் சிறிய சதுர அடியில் பயிர்களை வளர்த்து, அறுவடை செய்வது வரையான செயன்முறையில் ஈடுபட வேண்டும்.  மற்றக்குழுவின் பயிர்களோடு ஒப்பிட்டு அவர்களுடைய முகாமைத்துவத்துக்கு புள்ளிகளும் வழங்கப்படும். ஆகவே குழுவின் ஐவரும் தங்களுக்குள்  பணிகளை பிரித்துக்கொண்டிருந்தனர்

அன்றைக்கு வெள்ளிக்கிழமை விரிவுரைகள் மூன்று மணிக்கு முன்னரே முடிந்து விட அங்கொன்றும் இங்கொன்றுமாய் படிகளில் ஏறி அமர்ந்திருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்களை கடந்து லைப்ரரிக்குள் நுழைந்தாள் மைதிலி. அப்போது தான் தன் கையில் கிடைத்த  ஹாரிபாட்டர் ஏழாம் பாகத்தின் பிரதியுடன் லைப்ரரியின் யன்னலோரம் போய் அமர்ந்தவள் அதனுள்ளேயே  மூழ்கிப்போனாள்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு போய் விட்டு திங்கள் காலை தான் வருவார்கள். வடக்கு கிழக்கில் இருந்த பதட்ட நிலை காரணமாக பாதை மூடப்பட்டிருப்பதால் அனேகமாக தமிழ் மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பார்கள் என்பதை அவள் மறந்து விட்டாள்.

யன்னலூடாக இருட்டு நுழைந்து புத்தகத்தின் எழுத்துக்களை மறைக்க ஆரம்பித்த கணமே நிலைமை புரிந்து அவள் வெளியே ஓடிவர நேரம் ஆறுமணியை தொட்டிருந்தது. வெளியே இருள் கவிந்திருந்தது.

ஐயோ படுபாவிகளா..நான் ஒருத்தி இருப்பதை மறந்து எல்லாரும் ஹாஸ்டல் போய்விட்டீர்களா? என்று நண்பிகளை வைதவள் வேக வேகமாய் தெருவில் இறங்கினாள்

தனியான இடம் என்பதால் மாணவிகள் கூடிய பட்சம் இருவராவது சேர்ந்து தான் அந்த வீதிகளில் பயணிப்பதே. ..ஆடிட்டோரியத்தில் இருந்து ஹாஸ்டலுக்கு செல்ல மாந்தோப்பு வழியாக கொஞ்சம் தூரம் நடந்து செல்லவேண்டும்.

ஆடிட்டோரியத்தின் கேட் வழியாக அவசரமாய் வெளியே வந்தவள் அதற்கு நேர்முன்னே பாதையின் இடப்புறம் புதிதாக தயார் செய்யப்பட்டிருந்த நிலப்பகுதியை  கண்டபோது தான் நெஞ்சம் படக்கென அடிக்க அவளுக்கு அது ஞாபகம் வந்தது!

“நான் இன்று  காலையிலேயே ஊருக்கு போகிறேன். நேற்று நீரூற்ற என்னால் முடியவில்லை. நீ போகும் போது தவறாமல் எங்களின் மிளகாய்க்கன்றுகளுக்கு நீரூற்றிவிடு. இல்லையேல் எல்லாமே பட்டுவிடும்.” என்று அவளிடம் கண்டிப்பாக வாக்குறுதி வாங்கியிருந்தான் சுதா.

இன்றும் நீரூற்றாவிட்டால் கன்றுகள் பட்டுவிடும்.. பட்டுவிட்டால் குழுவில் ஐவருக்குமே மதிப்பெண்கள் பறந்துவிடுமே..

இந்த இருட்டில் தோட்டத்துக்குள் இறங்கி…அதுவும் தண்ணீர் இருக்கும் இடத்துக்கு எதிர்ப்பக்கம் போகவேண்டும்.என்ன செய்வது? நாளை வரை ரிஸ்க் எடுக்க அவள் தயாரில்லை. வீட்டுக்கு போகாதிருக்ககூடியவன் யாரையாவது அழைக்கலாமா என்று சிந்தித்து உதவி செய்யக்கூடியவன் என்ற எண்ணத்தில் செந்தூரனுக்கு போன் செய்தாள். அவன் வந்து பாதையோரம் நின்றாலே போதுமே அவள் நீரூற்றிவிட்டு ஓடி வந்துவிடுவாள்..

ம்ஹ்ம்….அவன் ஆன்சர் செய்யவில்லை. அத்தோடு போதும் என்பது போல மொபைலும் சார்ஜ் இன்றி உயிர் விட்டது!

இன்னும் நேரம் தாமதித்தால் தப்பு!

இருட்டான தோட்டப்பகுதி வேறு பயமுறுத்த வேகவேகமாய் உள்ளே புகுந்து எதிர்ப்பக்கமாய் ஓடியவள் கண்ணில் பட்ட பூவாளி ஒன்றில் நீர் நிரப்பிக்கொண்டு அதை தூக்க இயலாமல் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள். தனக்கு பின்னே காலடி சத்தங்கள், சருகு மிதிபட தன்னை யாரோ துரத்தும் சத்தங்கள் எல்லாம்  கேட்பது போலிருக்க எல்லா தெய்வங்களையும் உதவிக்கழைத்தபடி அவள் வரப்பில் அந்த பூவாளியை இழுத்து வந்துகொண்டிருந்தாள்

“மைதிலி!!!!!!!!”

தெருவில் இருந்து யாரோ அழைக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் சிந்தகவையும் அவனது பல்சரையும் கண்டு உண்மையிலேயே கடவுளைக்கண்டது போல நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அதற்குள் பைக்கை உள்ளேயே அவன் விட அவனுடைய வேகத்தை கண்டு படபடத்தாலும் வெளியாட்கள் அங்கே உள்நுழையக்கூடாதே என்ற விதியும் சேர்ந்து கொண்டு அவளை பயமுறுத்தியது. இவனிடம் வெளியே போ என்று சொல்லமுடியுமா என்ன?

சமாளிப்பாய் புன்னகைத்தாள் அவள்.

அவளது புன்னகையை கொஞ்சமும் கவனிக்காமல் “மூளையை அடகு வைத்து விட்டு வந்தாயா? இந்த இருட்டில் தனியாக இங்கே என்ன செய்கிறாய்? யாரோடு வந்தாய்?” கடுங்கோபப்பாவனையில் தன்னுடைய மொழியில் அவன் சரமாரியாக கேள்விக்கணை தொடுக்க ஒருகணம் விக்கித்து நின்றவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.

மிளகாய் செடி.. தண்ணீர் என்று ஆங்கிலத்திலேயே திக்கினாள் அவள்.

சட்டென்று அவள் கையில் இருந்த பூவாளியை பறித்துக்கொண்டவன் “எங்கே நீரூற்றவேண்டும்?” என்று கேட்டுக்கொண்டு முன்னே வேகமாய் நடக்க  பின்னாலேயே ஓடியவள் நீளமாய் பரந்திருந்த மிளகாய்ப்படுக்கையில் B 1 என்று போர்ட் மாட்டியிருந்த அவர்களுடைய குழுவுக்கான சதுர அடியை கண்டுபிடித்து அங்கே ஓடிப்போய் நின்று கொண்டு கை காட்டினாள்.

தானே அவற்றுக்கு நீர் விட்டவன் ஒரு பூவாளி நீர் போதாமல் போக அவளிடம் கேட்டுக்கொண்டு போய் மீண்டும் தண்ணீர் நிரம்பிய கானோடு வந்தான்.

அவன் பல்கலைக்கழக நிலத்துக்குள் நிற்பதை யாரும் காணக்கூடாதே என்ற பிரார்த்தனையுடன் பாதையிலேயே கண்களைப்பதித்திருந்த அவளது இதயத்துடிப்பு நிச்சயம் ஹாஸ்டலுக்கே கேட்டிருக்கும். வேகமாக ஊற்றி முடித்தவன் பூவாளியை கொண்டு போக திரும்ப காரின் சத்தமொன்று அவர்களை நெருங்கிற்று.

“ஐயோ செத்தேன்” என்று அலறியவளின் கண்ணில் நீரே பூத்துவிட என்னவென்று விளக்கம் கேட்டான் அவன்.

“இல்லை. வெளியாட்களை இங்கே கூட்டி வரக்கூடாது. அப்படி என்னை உங்களோடு யாராவது இங்கே கண்டுவிட்டால் எனக்கு நிச்சயம் விசாரணை இருக்கும்.” நடுங்கியபடியே பதில் சொன்னவளின் பார்வை பதட்டத்தோடு வீதியில் பதிந்தது.

அடுத்தகணம் மின்னலென பைக்கை ஸ்டார்ட் செய்தவன் “ஓடி வா” என்று கத்தியபடி தோட்டத்தின் ஓரமாய் யாருடைய ஆராய்ச்சிக்காகவோ விளைவிக்கப்பட்டிருந்த உயரமான சோளக்காட்டுக்குள் புகுந்து பைக்கோடு அவனும் மறைந்து நின்றான்.

அவன் மட்டும் தான் மறைய வேண்டும். அவள் அங்கே மாணவி, அவள் மறைந்து கொள்ளதேவை இல்லை என்பது புத்திக்கு உரைக்காமல் பதட்டத்தில் அவன் பின்னேயே ஓடினாள் மைத்தி.

சட்டென்று அவன் அவளது  கைப்பற்றி பைக்கின் முன்னே அவளை அழுத்தி அமரவைத்து மறைக்க அந்தக்கார் நேராக ஆடிடோரியத்துக்கு முன்னே நின்றது.

“அய்யய்யோ” வாய்விட்டே பதறினாள் அவள்

காம்பசில் இருந்து யாரோ இங்கே வந்திருக்கிறார்கள். இனி அவர்கள் போகுமட்டும் எப்படி வெளியே போவது? இருள் வேறு வேகமாய் மூடிக்கொண்டே இருந்தது.

அவன் ஒன்றும் பதறியது போலவே தெரியவில்லை. “யார் அவன்?” என்று அவளிடம் சாவகாசமாக விளக்கம் கேட்டான்!

காதருகில் கிசுகிசுப்பாக ஒலித்த குரலே அவளுக்கு பலத்த அதிர்ச்சியோடு சுயநினைவையும் கொடுத்தது.

எருமை! எதற்கு நீ ஓடி வந்து இங்கே இருளில் இவனோடு ஒளிந்தாய்?

நீ உன் பாட்டில் நீரூற்றிக்கொண்டு நின்றிருந்தால் வேகமாக ஹாஸ்டலுக்கு போ என்ற அறிவுறுத்தலோடு கடந்து போயிருப்பார்களே..இப்போது வெளியே இருளில் இருந்து போவதை யாரேனும் கண்டால்..

கைகள் நடுங்க ஆரம்பித்து விட அவனை திரும்பிப்பார்த்தாள் அவள்

என்ன நம்பிக்கையில் இந்த சோளக்காட்டுக்குள் இவனோடு இவ்வளவு நெருக்கத்தில் இருளில் இருக்கிறாய்? இவன் இப்போது தவறாக ஏதும் ஆரம்பித்தால் கத்தக்கூட முடியாத பொறி அல்லவா இது? அதற்குள் உனக்கு இவன் நல்லவன் என்பது முடிவாகிவிட்டதா? நல்லவனாகவே இருக்கட்டுமே.. அவன் ஒரு இளைஞன் அல்லவா? எப்படி முடிந்தது அவளுக்கு?

தன்னை நினைத்து அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

அவன் முகத்திலோ இவ்வளவு நேரமும் இருந்த கடுமை மறைந்து ஒரு கனிவான புன்னகை குடியேறியிருந்தது பளிச்சென தெரிந்தது.

அது என்னை ஏனோ பாதிக்கவும் செய்கிறதே

அவன் கண்களை ஒரு நிமிடத்துக்கு மேல் பார்த்திருக்கவும் முடியவில்லை.

அப்படியே அவள் மனதை எக்ஸ்ட்ரே கண் கொண்டு ஆராய்வதை போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்..

அய்யய்யோ முருகா.. இது என்ன சோதனை? கன்னமெல்லாம் சூடாவதை தடுக்கும் வகையின்றி மனதுக்குள் கைபிசைந்தாள் மைதிலி.

முகத்தை திருப்பிக்கொண்டு  எட்டிப்பார்ப்பது போல பாவனை செய்தவளின் காதில் மீண்டும் அவன் குரல் கிசுகிசுப்பாய் கேட்டது. “ யார் அவன்?” இம்முறை குரலில் ஏகத்துக்கும் சிரிப்பு இருந்தது.

“யாரோ விரிவுரையாளரை தேடி வந்திருக்கிறார்கள் எனக்கு யாரென்று தெரியவில்லை” தன்னை சமாளித்துக்கொண்டு சாதாரணமாய் பதில் சொல்ல சிரமப்பட்டுத்தான் போனாள் மைதிலி.

“இங்கே எந்த விரிவுரையாளர்களும் தங்குவதில்லை என்று கேள்விப்பட்டேன். விரிவுரை நாட்களில் மட்டும் பயணம் செய்து வருவார்களாமே?” அவன் விடுவதாக இல்லை.

“ஆமாம் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் இங்கேயே இருப்பார்.”

கொஞ்ச நேரம் பேசாமல் தான் இரேண்டா..

“அதுவும் சரிதான். முதல் வருட ஆண்களையும் பெண்களையும் இந்த சோளக்காட்டில் அம்போ என்று தனியாக விட்டு விட முடியாதே…” சோளக்காட்டில் என்று அழுத்திச்சொல்லி அவன் அதன் பின்னே இருந்த லாஜிக்கை அலச கடுப்பாகிப்போனாள் மைத்தி.

“ஆமாண்டா.. என்னை விட்டிருந்தால் நானே தண்ணீர் ஊற்றிவிட்டு இப்போதைக்கெல்லாம் ஹாஸ்டல் போய் சேர்ந்திருப்பேன். பெரிய ஆபத்பாந்தவன் போல உள்ளே வந்து இப்படி சோளக்காட்டுக்குள் மறைய வைத்துவிட்டு உனக்கு இந்த அனாலிசிசிஸ் வேறயா? இன்னொருவார்த்தை பேசினா மண்டைல கொட்டி விட்ருவேன் பார்த்துக்க!!!” வேண்டுமென்றே தமிழில் புன்னகையை உதட்டில் ஓட்டவைத்தபடியே அவனிடம் சொன்னாள் அவள்.

அவள் நீளமாக தமிழில் பேசுவதை ரசனையுடன் பார்த்துக்கொண்டே இருந்தவன் “என்னை திட்டற தானே” என்றான் லேசான புன்னகையுடன்.

“இல்லல்ல” அவசரமாய் மறுத்தவளுக்கு உள்ளுக்குள் உற்சாகம் குமுழியிடுவதை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவேயில்லை. உதட்டோரம் குறும்புச்சிரிப்பாய் வெடித்து சிதற

“என்ன சொன்ன நீ? இப்ப சொல்லப்போறியா இல்லையா?” அவன் மிரட்டலாய் ஆரம்பித்தான்

“இல்லைன்னா?” இமைகளை ஒருதடவை ஏற்றி இறக்கிவிட்டவள் தான் எல்லையை கடப்பதை உணர்ந்து நடுக்கத்தோடு வாயை மூடிக்கொண்டாள்.

“சாரி சாரி தப்பா எடுத்துக்காதீங்க. அ.. அது ஒரு பிரேயர்! நான் பயப்படும் போது உடனே அதை சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.” என் எல்லைக்கு நான் திரும்பி விட்டேன் என்பதை உணர்த்துவது போல வெளியே எட்டிப்பார்த்து நேரத்தையும் பார்த்தாள்.

அவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.”ப்ரேயரா? ஹ்ம்ம்” என்றானே தவிர வேறேதும் சொல்லவில்லை.

நல்லவேளையாக சில நிமிஷங்களிலேயே அந்த கார் ஹாஸ்டல் பக்கமாக புறப்பட்டுப்போக தாமதிக்காமல் வேகவேகமாய் வண்டியை வெளியே எடுத்தவன் கேட்டை தாண்டிப்போய் போய் நின்றான். லேசாய் மூச்சிரைக்க அவனை நெருங்கியவளிடம் “ஹ்ம்ம் வேகமாய் நட” என்று விட்டு பைக்கைத்தள்ளிக்கொண்டு உடன் வர ஆரம்பித்தான்.

“இல்லல்ல பரவாயில்லை நான் ஓடிப்போயிடுவேன். நீங்க கிளம்புங்க. இவ்வளவு நேரம் கூட இருந்ததே பெரிய உதவி தாங்க் யூ”

“உனக்கு பிடிக்காவிட்டாலும் நான் உன்னை தனியாக போக விட்டு விட முடியாது” என்றவன் பிடிவாதமாய் கூடவே நடந்தான்.

“இந்த காட்டை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாருமே நல்லவர்கள் இல்லை. குடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஹாஸ்டலில் இருக்கும் பெண்களிடம் வம்பு பண்ணவென்றே ஹாஸ்டலுக்குள் நுழைந்த சம்பவங்களெல்லாம் நடந்திருக்கின்றன. இதில் நீ தமிழ் வேறு. உங்களுக்கு மொழியும் தெரியாது. ஆகவே சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். தனியாக சுற்றும் வேலை வேண்டாம்.” என்று நீளமாய் கடுமையான குரலில் ஆங்கிலமும் சிங்களமும் கலந்து சொன்னவன் “சனி ஞாயிறு என்ன செய்வீர்கள்” என்று வினவினான்.

“ஹாஸ்டலில் தான் இருக்க வேண்டும். குக் வழக்கம் போல வருவார். ஞாயிறு காலை தான் மெயின் ரோடுக்கு போய் பஸ் பிடித்து கோவிலுக்கு போகும் ப்ளான் ஒன்று  உள்ளது, நடக்குமோ தெரியவில்லை.”

“சரி”

பிறகு மௌனமாயே சில கணங்கள் கழிய ஹாஸ்டல்கள் கண்ணில் நெருங்க ஆரம்பித்திருந்தன.

“நான் ஹாஸ்டல் வாசல் வரையும் வருவது உனக்குப்பிடிக்காது.நான் இங்கேயே நிற்கிறேன். ஓடிப்போ உள்ளே..”

“நான் அப்படி ஒன்றும்…” என்று ஆரம்பித்தவள் இறுக்கமான முகத்துடன் அவன் வேகமாக உள்ளே போகுமாறு செய்த சைகைக்கு பின் வாதாடாமல் “தாங்க்ஸ்” என்று மட்டும் முணுமுணுத்த படி ஹாஸ்டலுக்குள்ளே ஓடி அவனை திரும்பி பார்த்தாள்.

அவனும் பார்த்துக்கொண்டு தான் நின்றிருந்தான். தன்னையறியாமலே அவள் தலையசைக்க அவன் பதிலாய் ஒரு மென் புன்னகையுடன் பைக்கை திருப்பிக்கொண்டு புறப்பட  கலவையான உணர்வுகளுடன் தன்னுடைய அறையை நோக்கி ஏறக்குறைய ஓடினாள் மைத்தி.   

கடவுளே எல்லாரும் அறைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி மாளாது. என்ற வேண்டுதலுடனேயே உள்ளே நுழைந்தவள் யாருமே ஹாரிடோர்களில் தென்படாததில் மகிழ்ந்து போய் தன்னறைக்குள் நுழைந்தாள். மற்ற மாணவிகள் ஆறுபேரும் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். அறை வெறிச்சோடிக்கிடந்தது.

மனதில் இருந்த படபடப்பு குறையுமட்டும் தன்னுடைய கட்டிலில் படுத்துக்கிடந்தவள் குளிப்பதற்காக உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கமாக நடந்தாள்.

“ஏய் எருமை! எங்கடி போன இவ்ளோ நேரம்?போனையும் ஆப் பண்ணிட்டு!!” சுமியின் குரல் பின்னாலே அவளது அறை வாசலில் இருந்து கேட்டது.

“குளிச்சுட்டு வந்து சொல்றேண்டி” என்றபடி பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டவள் அவர்களுக்கு என்ன சொல்வது என்று மூளையை கசக்கினாள். சிந்தகவும் அவளும் ரகசியமாக சந்தித்து பேசிக்கொள்வதாக அவர்கள் நினைத்து விட்டால்? மெது மெதுவாய் குளித்து முடித்தவள் அறைக்கு வரும் போது இரவு உணவுக்காய் பெல் அடித்திருக்க எல்லோரும் கிளம்பி போயிருந்தார்கள்!

ஹப்பாடா என்ற விடுதலை உணர்வுடன் தானும் இருளில் கலந்து டைனிங் ஹால் நோக்கி நடந்தாள். வார இறுதியாதலால் ஹாலே வெறிச்சோடிக்கிடந்தது. தன்னுடைய பிளேட்டை எடுத்து கொஞ்சமாய் பரிமாறிக்கொண்டு சுமியை விழிகளால் தேடினாள் மைத்தி.

அங்கே செந்தூரன் உட்பட எல்லாருமே ஒரே மேஜையில் அமர்ந்திருந்து கொண்டு அவளையே குறுகுறுவென் பார்ப்பது போலிருந்தது. மெல்ல அவர்களை நோக்கி நடந்தாள்.

“மைதிலி ஏன் கால் பண்ணினே? நான் விளையாடிக்கொண்டிருந்தேன். மொபைலை கவனிக்கவில்லை!” செந்தூரன் அவள் அருகில் வந்ததுமே கேட்டான்

“இல்ல..நான் லைப்ரரில டைம் பார்க்காம இருந்துட்டேன். இன்னிக்கு மிளகாய்க்கு தண்ணி விட வேற வேண்டிருந்துது. இருட்டுல ரொம்ப பயமாயிருந்துது அதுதான் உனக்கு கால் பண்ணினேன். நான் தண்ணி ஊத்திட்டு வரவும் எங்களோட சேனபுர வீட்டு அண்ணா வந்தார். அவர் தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டு போனார்.”

மற்றவர்களுடைய கண்கள் சங்கேதமாய் சந்தித்துகொண்டதையும் சுமி முறைப்புப்பார்வையுடன் அமர்ந்திருப்பதை கண்டதுமே அவளுக்கு விஷயம் புரிந்து போனது. யாரோ அவளையும் அவனையும் சேர்த்து பார்த்திருக்கிறார்கள். அன்றைக்கு அவனைப்பற்றி நாம் சொன்னதையும் இதையும் வைத்துக்கொண்டு இங்கே ஒரு கற்பனை ஓடியிருக்கிறது!

இல்லாத கற்பனைக்கு நான் எதற்கு விளக்கம் தரவேண்டும்?  மனம் கோபமாய் முறுக்கிக்கொள்ள பெரிதாக பேச்சில் கலந்து கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தவள் ரூமுக்கு போவதாக சொல்லிக்கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்துவிட்டாள்.

மறுக்கப்படாத மௌனங்கள் சம்மதமாகத்தான் கருதப்படும் என்பதை அவள் அப்போது எண்ணிப்பார்க்கவில்லை.

ஏன் அவனை நோக்கி பந்தாடப்படும் தன் மனஉணர்வுகளின் அர்த்தத்தையே அவளுக்கு புரிந்தகொள்ள தெரியவில்லையே..

மறுநாள் காலையும் பாட்டனி புக்கை எடுத்துக்கொண்டு ஸ்டடி ஹாலுக்கு சென்றவள் அங்கே மொத்தக்கூட்டமும் உள்ளே இருந்து கும்மியடிப்பதை தெரிந்து கொண்டு அங்கேயும் போக விரும்பாமல் அறைக்கும் போக விரும்பாமல் ஹாஸ்டலுக்கு வெளியே நடந்தாள்

எங்கே அமர்ந்து வரையலாம்? இடம் தேடிய படி நடந்தாள்..

நெல்லிமரத்தின் கீழே இருந்த பெஞ்ச் சுத்தமாக இல்லாததால் ஏமாற்றத்துடன் அதை தாண்டி நடந்தவள் பாதையோடு இருந்த கம்பிவேலியை ஒட்டி புத்தபிரானின் சின்ன சிலை வைத்து வழிபாட்டு இடமாக கட்டப்பட்டிருந்த குட்டி நிலத்தை கண்டதும் உற்சாகமாய் அங்கே விரைந்தாள்

பக்கத்தில் இருந்த வெள்ளைப்பூக்களை பறித்து தான் அங்கே அமர்ந்திருப்பதற்கு வாடகையாய் புத்தரின் காலடியில் வைத்தவள் குளுமையான அந்த நிலத்தில் புத்தகங்களை பரப்பிக்கொண்டு அமர்ந்தாள்                                                                 

அரசமரத்தின் இதமான அசைவுகளோடு சற்றுநேரம் தன்னை மறந்து பாடத்தில் மூழ்கியிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நெருங்கிய பல்சர் சத்தத்தில் கவனம் கலைந்து அனிச்சையாய் திறந்திருந்த வீதியை நோக்கினாள்.

தன்னுடைய பல்சருக்கு மாட்சாக கருப்பு ஷர்ட்டுடன் அவளையே பார்த்தபடி அந்த வளைவில் வந்துகொண்டிருந்தான் சிந்தக. இருவருமே புன்னகைக்கவில்லை. ஆனால் பார்வைகள் சில கணங்கள் கூட விலக்கிக்கொள்ளப்படவும் இல்லை. முழுமையாய் அவன் அவள் நின்ற இடத்தை கடக்கும் வரை கண்களை கவ்வி நின்ற மாயவிசை அவன் கடந்துபோனதும் பட்டென உடைய தன்னுடைய மடியில் முகத்தை பதற்றமாய் புதைத்துக்கொண்டாள் அவள்.

என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் மைத்தி!!!!

இனிமேல் இது நடக்கவிடமாட்டேன். ரொம்பவே தப்பு. அவள் மனதில் நடுக்கமாய் உருப்போட்டுக்கொண்டிருக்க சுமி வந்து அவள் அருகில் அமர்ந்தாள்

“ஏண்டி என்னை அவாய்ட் பண்ணற?”

“நேத்து நீ என்னை தப்பா நினைக்கல? உன் நெஞ்சை தொட்டு சொல்டி.. மத்தவங்களை விடு அவங்களுக்கு என்னை ஒரு மாசமா தான் தெரியும். ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சமே உனக்கு என்னை தெரியாதாடி?” பொங்கிவிட்டாள் மைத்தி.

“சாரிடி.. நானும் ஒருநிமிஷம் தப்பா நினைச்சது உண்மைதான். இனிமே அந்த நிலாகிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். ஒரே நிமிஷத்துல என்னை கன்பியூஸ் பண்ணிட்டா! சாரிடி. “

“பேசாதே போ..”

“சாரிடி..இப்போ நான் எதுக்கு வந்தேன் தெரியுமா? உன் மஞ்சு ஆன்ட்டி நமக்கெல்லாம் மதியம் லஞ்ச் கொடுத்து விடறாங்களாம். எங்களை ஷேர் பண்ணி சாப்பிடவாம்!”

“ஏய்..உன் நம்பர் எப்படிடி ஆன்ட்டிக்கு தெரியும்? என் நம்பரே அவங்களுக்கு தெரியாது!!!”

“இல்லடி..உங்க க்ரூப் லீடர் யாரு? அந்த பையனுக்கு போன் பண்ணிருக்காங்க..அவன் தினேஷுக்கு சொல்ல தினேஷ் எனக்கு சொன்னான்.”

“எப்போடி…”

“இன்னும் அரைமணில அவங்க ஹஸ்பன்ட் எடுத்துட்டு வருவாங்களாம். பாவம்டி..ரொம்ப நல்லவங்களா இருக்காங்கல்ல?”

“அதை தான் நான் சொல்லிட்டே இருந்தேன். நீங்க தான் இல்லாததையும் பொல்லாதையும் கற்பனை பண்ணீங்க!!”

“நான் ஆன்ட்டி நல்லவங்கன்னு தாண்டி சொன்னேன்..பையனை பத்தி சொல்லல..” சுமி குறும்பாய் சிரிக்க அவளின் தோளில் அடித்தாள் மைத்தி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *